Wednesday 26 June 2013

தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன்.............!

துப்பாக்கி,பீரங்கி இல்லாமல் வெறும் வாளும்,வில்லும் கொண்டு இமயம் முதல் இன்றைய இந்தோனேசியாவான சுமத்திரை வரை கி.பி 1000 -ல் ஆண்ட ராஜராஜ சோழனையும்,திறம் மிகுந்தநெடுஞ்செழியனையும், கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள்.

தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன் என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்றபட்டு விட்டன என்பதை சொல்லி வளர்த்திருந்தால் இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான்?


இந்த கொடுமைகளுக்கு ஆங்கிலம் படிக்காவிட்டால் இன்றைய சூழ்நிலையில் எந்த துறையிலும் மின்ன முடியாது என்று பதில் வாதம் வைக்கிறார்கள்.

இப்படி ஆதாயத்தை முன்னிலைபடுத்தி பற்றையும், பாசத்தையும் புறக்கணிப்பது என்ன நியாயம்?.

இந்த பாணியில் ஆதாய நோக்கில் வளரும் பிள்ளைகள் கடைசியில் உங்களை அதே வழியில் பாசத்தை மறந்து முதியோர் இல்லங்களில் தள்ளுகிறார்கள். தாய் மொழியை மதிக்காதவன் எப்படி தாயை மதிப்பான். 

டையிலும், செருப்பு (shoe) நீங்கள் ஆரம்பித்து வைக்கும் கலாசாரம் இறுதியில் ஒருவகை இசை நடனங்களிலும் (disco) குடித்து களிப்பாட்ட விடுதிகளிலும் (bar) முடிகிறது.தமிழின் கழுத்தில் கயிரை சுற்றி,சுருக்கு போட்டு,தூக்கு மேடையில் ஏற்றி, எங்களிடம் கயிற்றை கொடுத்து இழுக்க சொல்லிவிட்டு நங்கள் இழுக்கும் நேரத்தில் கொல்கிறானே, கொல்கிறானே என வாயில் அடித்து கொள்வதில் என்ன பயன்.

ஒரு வகையில் ஆங்கிலமும் முழுதும் தெரியாமல் தமிழும் தெரியாமல் பல பேரை அரை வேக்காடுகளாக இரண்டும் கெட்டான்களாக அலையை விட்ட உங்களை அல்லவா நங்கள் குறை சொல்ல வேண்டும்.பம்பாய் கதாநாயகிகள் போல் தமிழ் பேசும் சுத்த தமிழ் பெண்கள் எத்தனை பேர்.

இலண்டனிலிருந்து இப்பொழுது தான் இறங்கியவர்கள் போல் தமிழே வாயில் நுழையாத இளைஞர்கள் எத்தனை பேர்.வள்ளுவனும்,ஒளவையும் நல்லவேளை இன்று இல்லை இருந்திருந்தால் அவர்களையும் இவர்கள் கெடுத்திருப்பார்கள்.

மொழி,நாடு,சமுதாயம் என்று உயிரை விட்ட பாரதியையே நாம் அவன் இறந்த 10,20 ஆண்டகளுக்கு பிறகு தானே புரிந்து கொண்டோம்.காக்கையும், குருவியையுமே தன் இனம், தன் உறவு என்று முழங்கியவனின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட உறவுகளே மொத்தம் 10 - 15 தானே.

இந்த பதிவை இதோடு நிறுத்தலாம் இனி சொல்ல என்ன இருக்கிறது?. ஆனால் அப்படி செய்தால் நானும் வெட்டியாக குறைகூறுவோர்களில் ஒருவனாகி விடுவேன்.அதற்கு பதில் எனக்கு தெரிந்த வரை நாம் இதற்கு என்ன செய்யலாம் என கூறுகிறேன்.

முதலில் தமிழை பேசுவதால் மட்டுமே தமிழ் வளரும் என்ற எண்ணத்தை விடுத்து தமிழில் எழுதவும், படிக்கவும் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டும்.தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். அப்படி நாம் தொட்டிலான பள்ளி முதலே தமிழை கற்று கொடுக்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் குழந்தைகளுக்கு 5 வகுப்பு வரை தமிழ் கட்டாயம் படமாக இருக்க வேண்டும் என்று சட்டங்கள் இயற்றப் பட்டது. நமது மெத்த படித்த மேதாவிகள் அன்று அதை எதிர்த்து ரத்து செய்தனர்.அந்த சட்டம் மீண்டும் வர வேண்டும்.தனியாக பிராத்மிக், மத்யமா என இந்தியும், தனியார் கல்வி நிறுவங்களில் பிரெஞ்சும், யேர்மனும் பயிலும் நீங்கள் தமிழ் படிக்க முடியாதா?.

முன் சொன்னது போல் தமிழர்கள் உலகத்துக்கே முன்னோடிகளாய் எப்படி வாழ்ந்தனர் என்றும், மேற்க்கை விட தமிழும் தமிழ் கலாச்சாரமும் எவ்வளவு பழமையானது, உயர்ந்தது என்றும் சொல்லி வளர்க்க வேண்டும்.

சேக்சுப்(ஸ்)பியருக்கு நூறு மடங்கான வள்ளுவனும், கம்பனும்.... அலக்சாண்டருக்கும், நெப்போலியனுக்கும் எந்த விதத்திலும் குறையாத ராசா ராசனும்,நரசிம்மனும் வாழ்ந்த பூமி இது என்று சொல்லி வளர்க்க வேண்டும்.

தான் எங்கிருந்து வருகிறோம், தனது பூர்வீகம் என்ன என்று தெரியாததால் தான் இளைஞர்கள் இப்படி இருக்கின்றனர்."பாப்பம்பட்டி பழனிச்சாமி பேரனுக்கு இது போதும்" என்று என் நண்பன் அடிக்கடி சொல்லுவான். அப்படி குழந்தைகளை பாப்பம்பட்டி பழனிச்சாமி பேரனாக வளர்க்காமல், சேக்சுப்பியர் பேரனாக விளைந்த கொடுமையே இது, இதை மாற்றி இனிமேலாவது சேக்சுப்பியர் பேரன்களாக குழந்தைகளை வளர்க்காமல் இருக்க வேண்டும்.

ஒரு மரத்தின் ஆயுளும், வலிமையும் அதன் கிளைகளிலே இல்லை அதன் வேரிலேயே இருக்கிறது.அப்படிப்பட்ட வேரான பூர்விகதையும், பண்பாட்டையும் புகட்ட பெற்றோர்களும், சமுதாயமும், பள்ளிகளும் முன் வர வேண்டும்.ஆங்கிலத்தை முற்றும் புறக்கணித்து தமிழ் வழி கல்வியை நாட சொல்லவில்லை,குறைந்த பட்சம் தமிழை ஒரு மொழி பாடமாகவாவது கற்றுகொடுக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

இப்படி இறந்து கொண்டிருக்கும் தமிழை பேசி படித்து வாழ வைக்க நினைப்பது மரணபடுக்கையில் இருக்கும் ஒருவரின் வாயில் தண்ணீரை ஊற்றி பிழைக்க வைக்க முயற்சிப்பதை போன்றதாகும். எனக்கு தெரிந்து தமிழை பிழைக்க வைப்பதை விட எப்படி நாம் அதை செழித்து வாழ வைக்க போகிறோம் என்பதில் தான் நமது கவனம் இருக்க வேண்டும்.அதில் தான் நமது வெற்றி இருக்கிறது.

மாறாக,தார் பூசுவதிலும்,வள்ளுவனின் சிலை வைப்பதிலும்,செம்மொழி மாநாடுகள் நடத்துவதிலும் பயன் இல்லை.பாரதி கூறிய "போலி சுதேசிகள்" போன்று "போலி மொழி பற்றாளர்களாக" மேடைகளிலே மட்டும் தமிழ்,தமிழ் என பேசுவதற்காக சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மற்றவரை குறை சொல்லி கொண்டிருக்காதீர்கள்.

அந்த பாரதியே ஆங்கில கவிஞன் செ(ஷெ)ல்லியின் பரம விசிறி என்பதையும் நாம் நினைக்க வேண்டும்.கண்மூடித்தனமாக சமுதாய கட்டாயங்களை மனதில் கொள்ளாமல் பிறரின் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள். 

முடிவில், தமிழ் கண் போன்றது, ஆங்கிலம் கண்ணாடி போன்றது. சில நேரங்களில் கண்ணாடியும் அணிய வேண்டி இருக்கிறது.அதற்காக கண்ணாடியையே கண்ணாக என்னும் மூடமையும் அனுமதிக்காமல் இருப்போம்.

தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் தமிழை தலை நிமிர்ந்து நிற்க செய்வோம்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Friday 21 June 2013

உலகை நடுநடுங்க வைத்த தமிழ்........!

ஆயிரத்தில் உலகை நடுநடுங்க வைத்த தமிழ் சோழ மன்னன்.

அமெரிக்கர்களைப் போல, ஆங்கிலேயர்களைப் போல ஒரு வல்லரசைத் தமிழன் என்றாவது உருவாக்கியது உண்டா? உண்டு என்ற பதில் நம் குனிந்த தலையை நிமிற வைக்கிறது.. இந்த பெருமையை தந்தவன் பேரரசன் இராசேந்திர சோழன்.


இன்றைய இந்தியாவை விடப் பெரிய நிலப்பரப்பை , இந்தியாவிற்க்கு வெளியே வென்று , கடல் கட்ந்த தூர நாடுகளில் விண்ணுயரப் புலிக்கொடியைப் பறக்க விட்டவன் அவன் . இலங்கையையும் , மாலத் தீவையும் , வடக்கே வங்காள தேசம் வரை விரிவுபடுத்தியவன் . கங்கை வெற்றியை அடுத்து இராசேந்திர சோழனின் மாபெரும் படையெடுப்பு கடல் வழி கடார படையெடுப்பு கி.பி 1025 யில் நடந்தது .

கடாரம் - மலேயா , சுமத்ரா, யா(ஜா)வா , போர்னியோ , பிலிப்பைன்சு, பார்மோசா, சீனாவின் கான்டன் ஆகிய இடங்களில் பரவியிருந்தது . 3000 கிலோமீட்டர்(KM) க்கும் மேல் இப்படியொரு படையெடுப்பு மனித வரலாற்றில் நடந்ததாக தெரியவில்லை .யூலியசு(ஸ்) சீசர் , அலெக்சாண்டர் , தாமூர் , செங்கிசு(ஸ்)கான் போன்றோர் தரை வழியாகாவோ அல்லது நதிகளை தாண்டியோதான் படையெடுத்தனர் .

ஏறத்தாழ, பத்து நாட்கள் கடற்பயணம் , அதன்பின் நிலத்தில் சோர்வின்றி நிகழ்த்த வேண்டிய உற்சாகமான போர் , இவற்றிற்கேற்ப சீரான பயிற்சிகள் என திட்டமிட்டு , 60,000 யானைகளும் , பல்லாயிரக்கணக்கான குதிரைகளும் , இலட்சக்கணகான வீரர்களும் சுமந்து செல்லக்கூடிய கப்பல்களை கட்டி கடாரம் சென்ற இராசேந்திரனை , கடாரத்தோரால் நிறுத்தமுடியவில்லை .

கடாரம் மட்டுமின்றி பர்மாவிலிருந்து , இந்தோனேசியாவின் தெற்கு முனை வரை இராசேந்திரன்வென்ற நிலப்பரப்பு ஏறத்தாழ 36 இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள் (இன்றைய இந்திய நிலப்பரப்பு 32,87,263 சதுர கிலோ மீட்டர்கள்) .

இதை மெய்க்கீர்த்தி,

" அலைகடல் நடுவுள் பலகலஞ் செலுத்தி
சங்கிராம விசையோத் துங்கவர்மன் ஆகிய
கடாரத் தரசனை வாகையம்
பொருகடல் கும்பக் கரியொடும்
அகப்படுத்து உரிமையிற் பிறக்கிய பெருநிதி பிறக்கமும் ,
ஆர்த்தவன் அகநகப் போர்த்தொழில் வாசலில்
விச்சா திரத்தொ ரணமு மொய்த்து ஒளிர்
புனைமணிப் புதவமுங் கனமணி கதவமும் .."

என குறிப்பிடுக்கிறது .

இவ்வளவு சிரமப்பட்டு நாடுகளை வென்ற இராசேந்திர சோழன் , அவற்றை தன் பேரரசுடன் இணைத்துக்கொள்ளவில்லை. கடாரத்து பட்டத்து யானையையும் , பெரும் திறைப் பொருளையும் மட்டுமே எடுத்து தன் மேலாதிக்காத்தை நிலைநாட்டியதோடு அவன் நிறைவடைந்தான்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Saturday 15 June 2013

தமிழ் உணர்வாளர் மணிவண்ணனிற்கு ..............!


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.


Thursday 13 June 2013

ஒரு செயலின் விளைவு நிகழ்ச்சியில் இலங்கை.....!

அதிர்வு இணையத்தில் வெளியான செய்தி............

பிபிசி (BBC) ஒரு செயலின் விளைவு (IMPACT) நிகழ்ச்சியில் இலங்கை குறித்து கடும் விவாதம் !


சர்வதேச தொலைக்காட்சியான BBC ல் , ஒளிபரப்பாகும் நிகழ்சிகளில் மிகவும் பிரபல்யமானவை, புரிந்துக் கொள்ள முடியாத விவாதம் செய்(HARD TALK), மற்றும் ஒரு செயலின் விளைவு (IMPACT) நிகழ்சிகளே ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் BBC இம்பக்ட் நிகழ்சியை மிஷைல் ஹுசைன் நடத்தியிருந்தார்.

இதில் கனேடிய அதிகாரி, "இறந்தவர்கள் இன்னும் கணக்கெடுக்கப்படுகிறார்கள்" என்ற புத்தகத்தை எழுதிய முன் நாள் BBC ஊடகவியலாளர் பிரான்சிஸ் கரிசன், மற்றும் இலங்கையில் கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் சகோதரர் ஆகியோர் இன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் காமன்வெலத் மாநாடு நடத்தப்படவேண்டுமா என்ற கருப்பொருளில் இன் நிகழ்ச்சி அமைந்திருந்தது. முதலாவதாகப் பேசிய கொல்லப்பட்ட லசந்தவின் சகோதரர், மாநாடு இலங்கையில் நடப்பது நல்லது என்ற பொருட்படப் பேசியிருந்தார்.

இருப்பினும் கனேடிய அதிகாரி அதனை மறுத்து, இலங்கையில் மாநாடு நடக்கக்கூடாது என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய ஊடகவியலாளர் பிரான்சிஸ் கரிசன் அவர்கள், தான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சுமார் 30 தமிழர்களை பிரித்தானியாவில் சந்தித்தாகத் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் இலங்கை இராணுவம் மற்றும் பொலிசாரால் பல கொடுமைகளுக்கு உள்ளானவர்கள் என்று அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் சகோதரர் பேசும்போது, இலங்கையில் இம் மாநாடு நடைபெற்றால் அதனூடாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இக் கருத்தை மறுத்த பிரான்சிஸ் கரிசன் அவர்கள் இம் மாநாடு இலங்கையில் நடந்தால் அது இலங்கைக்கு ஒரு அங்கிகாரத்தையே கொடுக்கும். மற்றும் அவர்கள் புரிந்த மனித உரிமை மீறல்களை அது நியாயப்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.

(காணொளி இணைக்கப்பட்டுள்ளது)


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Monday 10 June 2013

கொதிக்கும் எண்ணையில் போடுவது, தோலை உரிப்பது............!

சுவாமி விவேகானந்தரின் இலங்கை பயண அனுபவங்கள்.சிங்களர்கள் எல்லாம் வங்காளத்தில் இருந்து குடியேறியவர்கள். துடுக்கும் துட்டத்தனமும் மிக்க விசயசிம்மன் என்ற வங்க இளவரசன் தன் தந்தையிடம் சண்டையிட்டுக்கொண்டு,தன்னைப்போன்ற சிலரை கப்பலில் ஏற்றினான்சென்று சேர்ந்தது இலங்கை தீவில்.

பெடூயின்சு(ஸ்) என்று இப்போது அறியப்படுவோரின் முன்னோராகிய புனோ என்ற ஆதிவாசிகள் அப்போது இந்த நாட்டில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இந்த விக்கிரசிம்மனை வரவேற்று அவனுக்கு தனது மகளையும் திருமணம் செய்து வைத்தனர்.


அவனும் சிலகாலம் ஏதோ ஓழுங்காக இருந்தான். பிறகு மனைவியுடனும் நண்பர்களுடனும் சதிசெய்து, திடீரென ஒரு இரவில் புனோ அரசனையும் அவளை சார்ந்தவர்களையும் கொன்று இலங்கையை கைப்பற்றி, மன்னனாக பட்டம் சூட்டிக்கொண்டான்.

அவனது கொடுமை அத்துடன் நிற்கவில்லை,காலம் செல்லச்செல்ல வங்காளத்திலிருந்து பல ஆண்களையும் பெண்களையும் வரவழைத்தான். 

ஆதிவாசிபெண்ணை புறக்கணித்துவிட்டு அனுராதா என்ற பெண்ணைதிருமணம் செய்துகொண்டான். பிறகு ஆதிவாசி இனத்தையே அழிக்கமுற்பட்டான், அவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டார்கள்.

தப்பிப்பிழைத்த ஒருசில சந்ததியினரை இன்னும் காடுகளில் காணலாம். இவ்வாறு இலங்கை சிங்களம் ஆகியது, வங்காள குண்டர்களின் இருப்பிடம் ஆகியது.

காலம் செல்லச்செல்ல அசோகப்பேரரசின் காலத்தில் அவரது மகன் மகேந்திரனும் சங்கமித்திராவும் துறவு மேற்க்கொண்டு, மதபிரச்சாரத்திற்காக இலங்கைக்கு வந்தனர்.

இங்கே மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்வதைக் கண்டார்கள். அவர்களை நாகரீகம் உடையவர்களாக மாற்றி அவர்களுக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தார்கள்.

அவர்களை புத்தமதத்திற்கு மாற்றினர்.இலங்கையின் நடுவில் ஒரு நகரத்தை உருவாக்கி அதை அனுராதபுரம் என்று பெயரிட்டனர்.இன்று பாழ்பட்டு கிடக்கும் அந்த நகரத்தை காண்பவர்கள் திகைத்து நிற்பர்.

 வேலைப்பாடுகள் கொண்ட உயரமான தூண்கள் பாழ்பட்டுகிடக்கும் இடிந்த கருங்கல் கட்டிடங்களும் பல மைல்துரம் இன்றும் காணப்படுகிறது. மழித்த தலையுடன் மஞ்சள்நிற ஆடையுடன் ஆண்பெண் துறவிகள் பிச்சைப் பாத்திரத்துடன் இலங்கைமுழுவதும் காணப்பட்டனர்.

மாபெரும் கோவில்கள் எழுந்தன.உள்ளே புத்தரின் தியானநிலை,நீதிநெறியைபோதிப்பது போன்ற நிலை மற்றும் மகாநிர்வாணநிலை என பல்வேறு விக்கிரகங்கள் உ்ள்ளன.

இலங்கைவாசிகளும் தங்கள் கைவண்ணத்தை காட்டியுள்ளார்கள்.தீங்குசெய்பவர்களுக்கு தண்டனைகொடுப்பது,வாளால் அறுப்பது,சாட்டையால் அடிப்பது,கொதிக்கும் எண்ணையில் போடுவது,தோலை உரிப்பது போன்ற சித்திரங்கள் சுவர்களில் வரையப்பட்டுள்ளன.

அகிம்சையை போதிக்கும் மதத்தில் இத்தகைய கொடுமைகளுக்கு இடம் இருக்கும் என்றால் யாராவது நம்பமுடியுமா? சீனாவிலும், யப்பானிலும்கூட இதேபோல் தான் அவர்கள் பேசுவதோ அகிம்சை ஆனால் அவர்கள் கொடுக்கும் தண்டனைகளைப்பார்த்தால் ரத்தம் உறைந்துபோகும்.

பௌத்தர்கள் மிகவும் சாதுவானவர்கள், எல்லா மதங்களையும் மதிப்பவர்கள் என நாம் கேள்விப்படுகிறோம்.ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை, அவர்கள் நம்மைகண்டால் பழிக்கிறார்கள்

நான் ஒருமுறை தமிழர்களிடையே அனுராதபுரத்தில் சொற்பொழிவு செய்துகொண்டிருந்தேன்.நிகழ்ச்சி நடைபெற்றது ஒரு திறந்த மைதானத்தில்.யாருடைய சொந்த இடத்திலும் இல்லை.

நான் பேச ஆரம்பித்தது தான் தாமதம் புத்தமதத்தின் பிட்சுக்களும் மற்றவர்களும் ஆண்களும் பெண்களும் அங்கே தம்பட்டங்களையும் தாளங்களையும் தட்டி பெருத்த ஆரவாரம் செய்தனர்.

அதில் என்னால் பேசமுடியவில்லை. ரத்தக்களறி ஏற்படுகின்ற சூழ்நிலை. நாமாவது அகிம்சையை கடைபிடித்து அமைதியாக போவோம். என்று கூறி தமிழர்களை சமாதானப்படுத்தினேன். பிறகு எப்படியோ எல்லாம் அமைதியானது.

நாளடைவில் தமிழர்கள் மெல்லமெல்ல வடக்கிலிருந்து இலங்கையின் மற்றபகுதிகளில் குடியேறினர். பாதகமான சூழ்நிலை ஏற்படுவதைக்கண்ட பௌத்தர்கள் தலைநகரை (அனுராதபுரத்தை) விட்டுவெளியேறி கண்டி என்றும் மலைப்பகுதியில் குடியேறினர்.

சிறிது காலத்தில் தமிழர்கள் அந்த இடத்தை கைப்பற்றி, அங்கே ஓர் இந்து மன்னனுக்கு பட்டம் சூட்டினர்.அதன் பிறகு ஸ்பானியர்,போர்ச்சுக்கீசியர்,டச்சுக்கார்கள் என ஐரோப்பிய கூட்டம் வரத்தொடங்கியது.

இறுதியாக ஆங்கிலேயர்கள் வந்து அரசை கைப்பற்றினர். கண்டியிலிருந்த அரச பரம்பரையினர் தஞ்சாவுருக்கு நாடு கடத்தப்ட்டார்கள். அங்கு அவர்கள் ஓய்வுதியம் பெற்றுவருகிறார்கள்.

வட இலங்கையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்துவருகிறார்கள். தென்பகுதியில் பௌத்தர்களும் பல்வேறு வகைப்பட்ட ஐரோப்பிர்களும் வசித்துவருகின்றனர். பௌத்தர்களுடைய தற்போதைய தலைநகரம் கொழுப்பு,

இந்துக்களின் தலைநகரம் யாழ்ப்பாணம். குலக்கட்டுப்பாடுகள் (ஜாதி) இந்தியாவில் உள்ளதுபோல் இங்கே இல்லை. இந்து குலங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து ஒரே குலமாகிவிட்டது. இவர்கள் எந்த குலத்தைச் சேர்ந்த பெண்களையும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

ஐரோப்பிய பெண்களை திருமணம் செய்யவும் தடையில்லை.அவர்களின் பிள்ளைகள் கோவிலுக்கு சென்று நெற்றியில் விபூதி அணிந்து சிவசிவ என்று சொல்கிறார்கள். இந்துவை மணக்கும் ஜரோப்பியர்களும் சிவசிவா என்று கூறி இந்துக்களாகி விடுகிறார்கள்.

இதனால் கிறித்தவ பாதிரிகள் இந்துக்கள்மேல் கோபத்தில் உள்ளார்கள்.இலங்கைக்கு வந்த பல ஐரோப்பியர்கள் இவ்வாறு இந்துக்களாகி விட்டார்கள்.

இங்குள்ள மக்கள் அத்வைதம்,வீர சைவம் ஆகிய நெறிகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்து என்று சொல்வதற்கு பதிலாக சைவம் என்று சொல்லவேண்டும்.இலங்கைத்தமிழ் துாயதமிழ்.இலங்கை மதம் துாயதமிழ் மதம்.

இலங்கையில் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி பக்திமேலிட குழுப்பாடல் (பஜனை) செய்வதும்,சிவபெருமானைப்பற்றி பக்தி பாடல்களைப்பாடுவதும், ஆயிரக்கணக்கான மிருதங்களின் ஓசையும்,பெரிய பெரிய தாளங்கள் எழுப்பும் ஒலியும், சிவந்த கண்களுடன் நல்ல உடற்கட்டுடன் காட்சியளிக்கும் தமிழர்கள் மகாபக்தனான அனுமனைப்போல கழுத்தில் உருத்திராட்சை மாலை அணிந்து விபூதி பூசிக்கொண்டு மெய்மறந்து நடனம் ஆடுவதும், காணக்கண் கொள்ளாக்காட்சி.

அதனை கற்பனை செய்துபார்க்க முடியாது. அவ்வளவு அழகு.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Saturday 8 June 2013

நகரும் இலக்கை தாக்க வல்ல................

தமது நாட்டு போர்கப்பலை தாமே ஏவுகணை கொண்டு தாக்கிப் பார்த்திருக்கிறார்கள் நோர்வேப் படையினர். தாம் புதிதாகத் தயாரித்துள்ள ஏவுகணை ஒன்றை நோர்வே நாடு இன்று பரீட்சித்துப் பார்த்துள்ளது. 


வழமையாக இவ்வாறு ஏவுகணைகளை நாடுகள் பரீட்சித்து பார்க்கும்போது காலியான கட்டிடங்கள் இல்லை என்றால் பாலைவனங்களில் சோதித்துப் பார்ப்பார்கள்.

ஆனால் நோர்வே நாடு தனது போர்க்கப்பல் ஒன்றின் மீது இதனை நடத்திப் பார்த்துள்ளது. அதி தூரம் சென்று, நகர்ந்துகொண்டு இருக்கும் ஒரு இலக்கை (target) தாக்க வல்ல இந்த ஏவுகணையை பரிசோதிக்க விரும்பியது.

நோர்வே , தனது நாட்டின் பழைய போர் கப்பல் ஒன்றை கடலில் செலுத்தி பின்னர் அதனை குறிவைத்து இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த ஏவுகணைத் தயாரிப்பில் நோர்வே வெற்றியடைந்துள்ளது. அத்தோடு மட்டுமல்லாது இத் தாக்குதல் நடவடிக்கையை வீடியோவில் கூட பதிவுசெய்துள்ளார்கள்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

உளவுபார்க்கும் அமெரிக்க உளவுத்துறை..............!

உலகின் முன்னணி இணையதள சர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்க்கும் அமெரிக்க உளவுத்துறை!


அமெரிக்க உளவுத்துறையினர் உலகின் முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்ப்பதாக அமெரிக்க நாளிதழான த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் பிரிட்டிஷ் நாளிதழதான த கார்டியன் பத்திரிகையும் தெரிவித்துள்ளன. தனிநபர்களை இலக்கு வைத்து மைக்ரோசாஃப்ட், யாஹு, கூகுள் மற்றும்ஃபேஸ்புக் உள்ளிட்ட 9 முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்கள் இவ்வாறு உளவுபார்க்கப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் கூறியுள்ளன. சில நபர்களின் நடமாட்டங்களைப் பின்தொடர்வதற்காக தனிப்பட்ட ஆட்களின் வீடியோ பதிவுகள், ஃபோட்டோக்கள், இ-மெயில்கள் போன்றன திரட்டப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன.
  
PRISM (பிரிஸ்ம்) என்பதே அரசாங்கத்தின் இந்த ரகசிய உளவுத் திட்டத்தின் பெயர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.6 ஆண்டுகளாக இந்த உளவுவேலை நடந்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, தமது சர்வர்களுக்குள் நேரடியாக நுழைவதற்கு அரசாங்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று ஃபேஸ்புக், ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் பதில் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இந்தப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகள் தொடர்பில் அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் ஜேம்ஸ் கிளப்பர் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்த செய்திகளில் பல தவறுகள் காணப்படுவதாகவும், இப்படியான செய்திகள் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பில் உளவுத்துறை நிறுவனங்களின் பணிகளை பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Thursday 6 June 2013

புரட்சி செய்த வாஞ்சிநாதனை ...............!

புரட்சி என்றவுடன் நாம் பகத்சிங் என்கிறோம். நம் மன ஒட்டம் பலஆயிரம் கிமீ ஒடுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் பிறந்த ஒரு விரனை நம் மனது அறிவதில்லை பகத்சிங்கை விட பெரும் புரட்சி செய்த வாஞ்சிநாதனை அறிந்துகொள்ளுங்கள்! வாஞ்சியின் தனிமனித போரட்டம் யெனரல் (General) டயரை சுட்டு கொன்ற உத்தமன் உத்தம்சிங்கின வீரத்திற்கு இணையானது.


1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர்- ருக்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், சங்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட வாஞ்சிநாதன்.

செங்கோட்டையில் தனது பள்ளிப் படிப்பை முடித்த வாஞ்சி, வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா போன்ற தலைவர்களின் பேச்சால் பெரிதும் கவரப்பட்டார். இதனால் சுதந்திர உணர்வானது அவரது இளம் ரத்தத்தில் இயல்பாக ஊறியது.
தனது கல்லூரிப் படிப்பை திருவனந்தபுரத்தில் முடிக்கும்போது, வாஞ்சிநாதனுக்கு பொன்னம்மாள் என்பவர் மணம் முடித்து வைக்கப்பட்டார். இதன் பிறகு புனலூர் வனத்துறையில் அவருக்கு வேலை.

ஆனால், ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சிமுறை, வாஞ்சிநாதனின் மனதை பணியில் ஒட்டச் செய்யாமல் சுதந்திரப் போரின் பக்கம் திருப்பியது.

புதுச்சேரில் இருந்த பிரெஞ்சு அரசு உதவி,, ஆங்கிலேயருக்கு எதிராக வாஞ்சியின் போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்தது. தனது சுதந்திரத் தாகத்திற்கு இடையூறாக இருந்த அரசுப் பணியை உதறித் தள்ளி, முழுமூச்சாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக களமிறங்கினார் வாஞ்சி.

புதுச்சேரியில் நடந்த வ.வே.சு. ஐயர், சுப்ரமணிய பாரதியார் ஆகியோரின் சந்திப்புகள், வாஞ்சிநாதனுக்கு மேலும் ஊக்கத்தை தந்தது.

இதற்கிடையே நடந்த சம்பவம் ஒன்று, வாஞ்சிநாதனுக்கு கடும் ஆத்திரத்தை மூட்டியது. தான் மிகவும் போற்றிவந்த வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரை, நெல்லை மாவட்ட அதிகாரி(collector) ராபர்ட் வில்லியம் டி.எசு(ஸ்)கார்ட் ஆசு(ஷ் )துரை கைது செய்து சிறையில் தள்ளினார்.

இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது. தாங்க முடியாத துயரமடைந்த அவர், இதற்கு காரணமான ஆசு (ஷ்) துரையை பழிவாங்க உறுதி பூண்டார். அவரை கொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

இதற்கான சரியான தருணம் வாய்த்தது. 1911 யூன் 17 ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து அதிகாரி ஆசு(ஷ்) துரை தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்குச் புறப்படத் தயாராக இருந்தார்.

வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சிநாதன் தான் தனக்கு எமன் என்பதை அறியாமல், முதல் வகுப்புப் பெட்டியில் களிப்புடன் அமர்ந்திருந்தார் அதிகாரி ஆசு(ஷ்). யாரும் எதிர்பாராதவகையில் ரயில் பெட்டிக்குள் நுழைந்து, திட்டமிட்டபடி அதிகாரி ஆசை(ஷை) வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.

ஆங்கிலேய அதிகாரிகள் வாஞ்சியை சூழ்ந்து கொண்டனர். எதிரிகளின் கையில் சிக்கி உயிரை விடுவதைவிட, தானே தன் உயிரைப் போக்கிக் கொள்வது மேல் என்று கருதிய வாஞ்சி, நொடிப் பொழுதையும் வீணடிக்காமல் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு, வீர மரணம் எய்தினார்.

இளம் வயதிலேயே தான் கொண்ட லட்சியத்திற்காக வாஞ்சிநாதன் தனக்குத்தானே முடிவுரை எழுதிக் கொண்டார்.

வாஞ்சி தன் சட்டையில் வைத்திருந்த சாசனத்தில் உள்ளது இது தான்.

“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ச(ஸ)னாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.

எங்கள் ராமன், சிவாசி(ஜி), கிருசு(ஷ்)ணன், குரு கோவிந்தர், அர்சு(ஜு)னன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோ மாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய யோட்சு,(George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது.

அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துசு(ஸ்)தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை. இப்படிக்கு, R. வாஞ்சி அய்யர்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராசீவ் காந்தி வாஞ்சி மரணம் அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு என்று சூட்டினார். வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் அவருக்கு உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

 தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.