Sunday 29 September 2013

சூழ்ச்சிகள் செய்து நாட்டைப் பிடித்தார்களோ.....!

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் எப்படி சூழ்ச்சிகள் செய்து நாட்டைப் பிடித்தார்களோ, அதேபோல் இலங்கைக்கு வியாபாரம் செய்யப்போன ஐரோப்பியர்கள் தந்திரமாக நாட்டைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இலங்கைக்கு முதன் முதலாக வந்த ஐரோப்பியர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.

ஏறக்குறைய இந்தியாவுக்குள் போர்ச்சுக்கீசியர்கள் அடியெடுத்து வைத்த காலக்கட்டத்தில்தான் அவர்கள் இலங்கையையும் கைப்பற்றினர். கி.பி. 1505-ம் ஆண்டின் இறுதியில் போர்ச்சுக்கீசியர்கள் வந்த கப்பல் ஒன்று, புயலில் சிக்கியது. புயலில் திசை மாறி அந்த கப்பல் இலங்கையின் கடலோரப் பகுதியில் ஒதுங்கியது. அந்த கப்பலின் அணித்தலைவர் (captain) பெயர் டாம் லூரங்கோ.


உள்நாட்டு குழப்பம்

அப்போது இலங்கையில் கோட்டை, சித்தவாகா, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய 4 ராஜ்ஜியங்கள் இருந்தன. இந்த 4 ராச்சியங்களின் ஆட்சியாளர்களிடம் ஒற்றுமை இல்லை. உள்நாட்டுக் குழப்பங்கள் நிலவின. முதலில் வியாபாரம் செய்வதே போர்ச்சுக்கீசியர்களின் நோக்கமாக இருந்தது.

பின்னர், இலங்கையின் சூழ்நிலையைப் பார்த்த அவர்கள், "ஆட்சியைப் பிடிக்க இதுவே தக்க தருணம்'' என்று தீர்மானித்தனர். அவர்களிடம் நவீன போர்க் கருவிகள் இருந்தன. அவற்றைப் பயன்படுத்தி, இலங்கையின் மேற்கு கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பகுதிகளிலும் ஊடுருவினர்.

தமிழ் மன்னன்

போர்ச்சுக்கீசியர்கள் இலங்கையில் கோட்டை ராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டபோது, யாழ்ப்பாண ராச்சியத்தை செகராசசேகரன் என்கிற முதலாவது சங்கிலி (1519-1561) என்ற தமிழ் மன்னன் ஆண்டு வந்தான். யாழ்ப்பாண அரசை கைப்பற்ற போர்ச்சுக்கீசியர்கள் பலமுறை முயன்றும் தோற்றுப்போனார்கள்.

முடிவில், "மன்னாரில் வியாபாரம் மட்டும் செய்து கொள்கிறோம்'' என்று சங்கிலி மன்னனிடம் அனுமதி பெற்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வியாபாரம் செய்து வந்த போர்ச்சுக்கீசியர்கள், தமிழரிடையே இருந்த சாதிப்பாகுபாட்டை பயன்படுத்திக் கொண்டு, ஒரு பகுதியினரை தங்களோடு சேர்த் துக்கொண்டு, சங்கிலிக்கு எதிராகக் கலகம் செய்தனர்.

சங்கிலி அங்கு தன் படையோடு சென்று கலகத்தை அடக்கினான். கலகத்துக்கு காரணமாக இருந்தவர்களின் தலையைத் துண்டித்தான். இதனால் ஆத்திரம் அடைந்த போர்ச்சுக்கீசியர்கள், யாழ்ப்பாண அரசை கைப்பற்ற தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

முதலாம் சங்கிலிக்குப் பிறகு இரண்டாம் சங்கிலி (1615-1619) ஆட்சிக்கு வந்தான். அப்போது, போர்ச்சுக்கீசியர்கள் உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டனர். இதற்கு, பிதுறு பொட்டன்கோன் என்ற போர்ச்சுக்கீசிய பாதிரியார் தலைமை தாங்கினார்.

கடும் போர்

உள்நாட்டுக் கலவரத்தை ஒடுக்க இரண்டாவது சங்கிலி மன்னன் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டான். தனக்கு உதவி செய்யுமாறு, தமிழ்நாட்டில் இருந்த ரகுநாத நாயக்க மன்னனுக்கு செய்தி அனுப்பினான். நாயக்க மன்னனும் வர்ணகுலத்தான் என்ற தளபதி தலைமையில் 5,000 வீரர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தான்.

அதே சமயம், மன்னன் சங்கிலியை முறியடிக்க போர்ச்சுக்கீசியர்கள் படை திரட்டினர். கோட்டையில் இருந்து மன்னாரை நோக்கி நூறு போர்ச்சுக்கீசிய வீரர்களும், சில நூறு சிங்களக் கூலிப்படையினரும் அனுப்பப்பட்டனர்.

அதே நேரத்தில் தரை வழியாகவும் 130 போர்ச்சுக்கீசிய ராணுவ வீரர்களும், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிங்களக் கூலிப்படையினரும் யாழ்ப்பாணத்தை நோக்கி விரைந்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நடந்தது. சிங்கள கூலிப்படையின் உதவியுடன் யாழ்ப்பாண மன்னன் சங்கிலியை போர்ச்சுக்கீசியர் தோற்கடித்து கைது செய்தனர்.

தூக்கு தண்டனை

இந்தக் காலக்கட்டத்தில், இந்தியாவில் உள்ள கோவா நகரம் போர்ச்சுக்கீசியர் வசம் இருந்தது. அங்கு சங்கிலியை கொண்டு சென்றனர்.

சங்கிலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் தூக்கில் போடப்பட்டான்.ஈழமன்னன் முதன் முறையாக அந்நியர்களான போர்ச்சுக்கீசியர்களிடம் தோற்றதுடன், மரணத்தையும் தழுவ நேர்ந்தது. அதற்கு போர்ச்சுக்கீசியர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் சிங்களர்கள்.

இலங்கையின் மத்தியப் பகுதி, கிழக்கு கடற்கரைப் பகுதி ஆகியவை தவிர இலங்கையின் மற்ற பகுதிகள் போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளுக்கு போர்ச்சுக்கீசியர்களும், தாழ்ந்த பதவிகளுக்கு தமிழரும், சிங்களர்களும் அமர்த்தப்பட்டனர்.

சிங்களர்களையும், தமிழர்களையும் கிறிசுத்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தவர்களும், `கீழ்ச்சாதி' என்று கருதப்பட்டவர்களும் கிறிசு (ஸ்)த்தவ மதத்துக்கு மாறினர்.

போர்ச்சுக்கீசியர்கள், இலங்கையின் முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை. மிளகு, லவங்கப்பட்டை, பாக்கு போன்றவற்றையும், யானைகளையும் தங்கள் நாட்டுக்கு கொண்டு போயினர்."போர்ச்சுக்கீசியர்கள் ஆட்சி காலத்தை இலங்கையின் இருண்ட காலம்'' என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Friday 20 September 2013

திருமலையில் அகத்தியர் சிவலிங்க கோயில்.....!


இலங்கை வரலாற்றிலே கிழக்கு மாகாணம் தனியான வரலாற்றுச் சான் றுகளை தன்னகத்தே கொண்டமைந்த ஓர் மாகாணமாகும். அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய

மாவட்டங்கள் இந்து கலாச்சார விழுமியங்களை பேணிப் பாதுகாத்த வரலாறுகள் தற்போதும் புலனாகின்றது.

அதிலும் திருகோணமலை மாவட்டத்தில் கங்கு வேலி எனும் இடத்தில் மிகவும் பழமை வாய்ந்த அகத்தியர் சிவலிங்க கோவில் அமையப் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் கடந்த வன்செயல் காரணமாக இவ்வாலயத்தின் வழிபாடுகளை மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. 

தற்போது அந்த ஆலயத்தின் நிருவாக சபையினர் ஒன்றிணைந்து ஆலயத்தினை புனரமைப்புச்செய்து திருவிழாக்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் மிகவும்புரதான வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டமைந்த கங்குவேலி அகத்தியர் ஆலயம் 

கங்கு கோயிலில் அமைந்துள்ள அப்புராதான ஆலயம் பல வரலாற்றுக் கதைகளோடு தொடர்புடையதாக அமைந்திருக்கின்றது. தொல்பொருள் ஆய்வினை மேற்கொள்ளும் பட்சத்தில் பல வரலாற்றுச்சான்றுகளை நாம் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஆடி அமாவாசை தீர்த்தத்தினை கொண்டமைந்து திருவிழாக்களை நடத்தி வந்திருந் தபோதிலும் அண்மைக்காலமாக பூரணவழிபாடுகள் இடம் பெறாமல் இருப்பது அப்பிரதேச மக்கள் பெரும் கவலை கொள்கின்றார்கள்.

இவ் வாலயத்தின் சிறப்பு தலபுராணத்திலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிட த்தக்கது.



தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Tuesday 17 September 2013

6ஆம் நுாற்றாண்டிற்கு முற்பட்ட இலங்கை.....!

6ஆம் நுாற்றாண்டிற்கு முற்பட்ட இலங்கை அரசுகளும் திராவிடஆரிய குடியிருப்புக்ளும். நாகதீபம்( பூநகரி)

கதிர்காமம் -நாகதீபம் (ஈழவூர்-பூநகரி இராச்சியம்) தாமிரபரணி கல்யாணி தீகவாவி மலையக அரசு ஆதிகாலத்தில் இலங்கையில் (ஈழத்தில்) சற்று வேறுபட்ட ஒரேமொழி பேசிய இயக்கர்கள். நாகர்கள் என்னும் இரு இனமக்களின் வசிவிடமாக இருந்தது.



இம்மக்கள் கி.மு1000ஆம் ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் உபயோகத்தை நன்கறிந்தவர்களாக நிலையான இடங்களில் பயிர்செய்து வாழ்ந்தார்கள். 

இவற்றுக்கான சான்றுகள் இராவண காவியம் இராமாயணம் மகாபாரதம் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. அதேபோன்று கல்வெட்டுக்கள் தொல்லியல் சான்றுகள் வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புக்கள் போன்ற சான்றுகளும் உள்ளன.

பெருங்கற்கால மனிதர்களாகிய திராவிட இனமக்கள் இலங்கைத்தீவின் வடபகுதியில் நாகதீபத்திலும் கதம்பதி(மல்வத்தை ஓயா) கலாஓயா கலியாணியிலும் வளவகங்கை மாணிக்ககங்கைக்கு இடைப்பட்ட பகுதியான மகா கமத்திலும் மட்டக்களப்பு பகுதியில்தீகவாவியிலும் நிரந்தரமாக வாழந்து அரசுகளும் அமைத்தனர்.

பிற்காலத்தில் தீவின் மத்திய மலைப்பகுதியில் மலையக அரசு உருவானது. இவர்கள் செயற்கையான நீர்ப்பாசன நாகரிகத்தை உடையவர்களாக இருந்துள்ளனர். இப்பிரதேசங்களிற் காணப்படும் சிவப்பு கறுப்பு மட்பாண்டாங்கள் சான்றாகின்றது.

கலாநி க.குணராசா அவர்களின் ஈழத்தவர் வரலாறு என்ற நுாலை வாசியுங்கள். அதில் பூநகரி இராச்சியம் பற்றிய பலசான்றுகளை வரலாற்று ஆதாரங்களடனும் புவியியல் ஆதாரங்களுடனும் விளக்கி விபரித்து எழுதியுள்ளார்.

பூநகரி நல்லுாரில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற முருகன் கோவில்தான் யாழ் நல்லுார் கந்தசாமி கோவில் என்பதையும் யாழ் மணற்திடரில் நிலத்திற்கு கீழான நீர்ப்பயன்பாட்டினை மக்கள் அறியமுன் குடியேறியிருக்க வாய்ப்பு இல்லை என்றும்.

யாழ்பாடி யாழ்வாசித்து பரிசுபெற்றபின் அவனுக்கு பரிசாக யாழ்குடா நிலத்தையும் மக்கள் குடியிருப்புகளையும் புதிதாக உருவாக்கி பரிசளித்தார்கள் என்ற தமிழ் மரபுக்கதையையும் சுட்டிக்காட்டியிருந்தார்.அதே நுாலில் 65 பக்கத்தின் ஒரு பகுதியை இங்கு அப்படியே தருகின்றேன் சான்றாக...

கி.பி 10 ஆம் நுாற்றாண்டளவில் பூநகரிப் பிரதேசம் சோழரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பற்கு ஆதாரங்களுள்ளன. அவ்வேளையில் அப்பகுதியின் சோழப்பிரதிநிதியாகவிருந்த புவனேகவாகு.

பூநகரியில் இன்று இருக்கின்ற நல்லுார் என்ற ஊர்ப் பகுதியில் தனது மாளிகையை அமைத்திருக்க வேண்டும் உண்மையில் இன்று கிடைக்கின்ற ஆதாரங்களில் இருந்து பூநகரியில் இன்று இருக்கின்ற நல்லுார் என்ற பிரதெசமே தமிழர் அரசின் புராதன நல்லுார் ஆகும் தென்னிந்தியாவில் பல ஊர்களுக்கு நல்லுார் எனப்பெயருள்ளது. ஆகவெ அத்தகைய ஒரு பெயர் இப்பிரதேசத்திற்கும் சோழர்கழால் இடப்பட்டிருந்தது.

முதலாம் பராந்தகன் ஆட்சியில்தான் தமிழநாட்டிலுள்ள சோழமண்டலமும் மண்ணியாறும் இதன் தென்எல்லையிலுள்ள நல்லுாரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் கூறப்பட்டுள்ளன.

குஞ்சரமல்லன் என்ற பராந்தகனின் சிறப்புப்பெயர் மண்ணியாற்றின் மறுபெயராக அழைக்கப்பட்டது.பூநகரியில் இராசதானிக்குரிய கட்டிட அழிபாடுகளின் தென்னெல்லையில் சோழமண்டலமும் வடவெல்லையில் மண்ணியாறும் அதற்குச் சற்று வடக்காக நல்லுார் என்ற ஊரும்(இடமும்) காணப்படுகிறது.

பதினோராம் நுாற்றாண்டில் இலங்கையிலிருந்து சோழரைத் துரத்திட்டு இலங்கை முழுதும் முதலாம் வியயபாகு(1055-1110) வரையும் அரசனானான். 

அவன் ஆட்சிக்காலத்தில் வடவிலங்கை அவனாட்சியின் கீழ்ப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்த புராதன பௌத்த விகாரைகைளுள் ஒன்றாகிய யம்புக்கோல விகாரையை புதுக்க அமைத்தான் என சூளவம்சம் கூறுவதிலிருந்து இது உறுதிப்படுகிறது.

வியயபாகு இறந்தபின் கி.பி1110 ஆம் ஆண்டளவில் குலோத்துங்க சோழன் சோழராட்சியை மீண்டும் நிலைநாட்ட இலங்கைமீது படையெடுத்தான். 

அப்படைக்கு தலைமைதாங்கியவன்தான் கருணாகரத்தொண்டமான். என்னும் தளபதியாவான் அவன் யாழ்ப்பாணத்தைச் சிலகாலம் நிர்வகித்தான் தொண்டைமானாற்றை துறைமுகமாக்குவித்தான்.

தொன்டைமானாற்றில் விளைந்த தன்படுவான் உப்பை(தானாக விளையும் உப்பு) சோழநாட்டிற்கு ஏற்றுவித்தான். உரும்பிராயில் உள்ள கருணாகரப் பிள்ளையார் கோவிலைக் கட்டுவித்தான்.

இதன்பின்னர் சோழர்களின் தமிழ் இன விரோதங்களை குமரிநாடு சுட்டுகின்றது.

இதன் மூலம் சோழர்களால் ஆரியக்கடவுளும் ஆரியமுறைகளும் பரப்பப்பட்டிருக்கிறது என்பதையும் இக்கோவில்களின் வரலாறுகளில் வட மொழி கலந்திருப்பதையும் சோழர்கள் தமது ஆதிக்கத்தைக் கொணடிருந்தனரே ஒழிய தமிழ் என்பதைப் பின்தள்ளினர் என்பதையும் தமிழர் சமயங்களையும் பின்தள்ளி பிராமண முறைகளையும் பரப்பினர். 

இதன் தாக்கம் இன்று ஐரோப்பி ஆசியநாடுகளிலும் ஆபிரிக்காவிலும் இருப்பதை உணர்க திருந்துக தமிழை மீட்குக. இனிவரலாற்றை மீண்டும் வாசிக்கவும்.....

படஆதாரங்களுடன் நாம்விளங்கிக் கொள்வதற்காக. எனவே நாகதீபம் என்பதை நைனாதீவு என்று எண்ணுவது தவறு. அது போர்ச் சூழலால் இடம்பெயர்ந்து சென்ற கோவில் அது பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக அண்மையில் இருந்த தமிழக அரசின் உதவிபெறப்பட்டது.

அதற்காக அங்கிருந்து வந்தவர்கள் அங்கு குடியேறியு முள்ளனர். அதேபோன்று ஏனைய தீவுகளிலும் இந்தியக்குடியேற்றங்கள் நிகழ்திருக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இவ்வாறே வடமுனை பருத்தித்துறை வல்வெட்டித் துறையிலும் குடியேற்றங்கள் நிகழ்திருக்க இடமுண்டு. பூநகரி இராச்சியம் சிங்கை நகர் என்று வழங்கியமையும் அறிய இருக்கின்றது.

அத்தோடு வன்னிப் பகுதியில் தமிழர்களின் பரம்பரிய கொற்றவை வழிபாடான முறையில் அம்மன் கோவில்கள் பிரபல்யமானவை பெரும்படை பொறிக்கடவை அம்மன் கிளிநொச்சி கனகாம்பிகை புளியம்பொக்கணை நாதம்பிரன் கோவில் முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன்கோவில் இன்னும் குறிப்பிடப்படாத பல உள்ளன.

நாகர்களின் வாழ்வியல் பண்பாட்டை பிரதிபலிக்கும் நாகராசா நாகம்மா நாகமுத்து நாகையா போன்ற பெயர்கள் சான்று. அதே போன்று தமிழர்களின் நற்காரியங்களில் தலைப்பாகை கட்டும் முறையானது நாகபடத்தைக் குறிப்பதாகும்.

அதே போன்று பெண்களுக்கும் நாகசடம் அணிகிறார்கள். ஆதாரம் இலங்கையம் அரசுகளும் என்ற குரும்பசிட்டி கனகரத்தினத்தின் வரலாற்று நுாலிலிருந்து இவை இன்றி விளக்கமின்றி மரட்டியர்களின் தொப்பியை அணிவதாலும் பெண்களிற்கு மொட்டாக்குப் போடுவதாலும் இந்திய மராட்டிய பண்பாட்டை விளக்கமின்றி ஏற்று உடுக்கின்றனர்.

அதே போன்றதே பஞ்சாபிகளின் பஞ்சாவி தமிழர்களின் பண்பாட்டு உடை என்று தமிழர்கள் எண்ணுவதும் தவறு. சாதாரண நேரங்களி அணிவது தவறல்ல தமிழ் உடையெ எண்ணி அணிதல் தவறு என்பதே கருத்து.அதே போன்று மராட்டியர்களின் சர்வாணியையும் கழுத்துத்துண்டையும் போட்டு தமிழ் உடுப்பு என்று நம்புகின்றார்கள்.

இது தமிழ் வியாபாரிகளின் பொறுப்பற்ற வர்த்தகத்தால் வரும் தமிப்பண்பாட்டுக் கேடுகளாகும். மணவறைகள் தமிழர்களின் திராவிடர்களின் என்ற பழைய முறைகளை விடுத்து வைசுணவ முறைகளை மணவறை சோடனைகாறர்கள் கிருச்சுணர் ராதை பொம்மைகளையும் வைத்து ஆரிய முறைகளைப்பரப்புகிறார்கள்.

தமிழைக் கெடுக்கிறார்கள். எனவே தமிழப்பண்பாட்டு முறையில் என்று தொடங்கி தமிழை விழுங்கி இந்திய மராட்டிய கலாச்சாரத்தில் போய் பரப்பும் கேவலத்தைக்கண்டு தமிழ் உலகம் அழுவது எவருக்கும் விளங்குவதில்லை.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Wednesday 11 September 2013

புலிகள் போர்க்குற்றவாளிகளா..........?

புலிகள் போர்க்குற்றவாளிகளா? - விளக்கமும், தமிழினத் தலைவர்களுக் கொரு விண்ணப்பமும்


விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது காலம் காலமாகவே பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுத்தான் வருகின்றன. ஆனால், அவை அனைத்துக்கும் உச்சக்கட்டம், நடந்த இனப்படுகொலையின்பொழுது விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களில், அதுவும் தமிழர்களுக்கு எதிராக ஈடுபட்டதாகச் சொல்வது! பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் நலனுக்காக ஐ.நா சார்பில் இலங்கைக்கு வந்திருக்கும் நவநீதம் பிள்ளை இப்பொழுது மீண்டும் இந்த அருவெறுப்பான குற்றச்சாட்டைப் பற்றிப் பேசப் போக, தற்பொழுது மீண்டும் இது உலக சமுதாயத்தின் விவாதப் பொருளாகியிருக்கிறது!

 விடுதலைப்புலிகள் போலத் தோற்றமளிக்கும் சிலர் தமிழ் மக்களைச் சுட்டுக் கொல்வது போல் வெளியான காணொலி (வீடியோ) ஒன்று முதன்முதலாக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தது. அதன் பிறகு வெளிவந்த, ஈழத் தமிழினப் படுகொலை பற்றிய ஐ.நா வல்லுநர் குழுவின் தொடக்க நிலை விசாரணை அறிக்கையிலும் இந்தக் குற்றச்சாட்டு இடம்பெற்றது. அதை அடுத்து வெளிவந்த, உலக மன்னிப்பு கழகம் (Amnesty) முதலான எல்லா மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளிலும் இதே குற்றச்சாட்டு குறிப்பிடப்பட்டது. மீண்டும் மீண்டும் தொடர்ந்து எல்லா மட்டங்களிலும் இந்தக் குற்றச்சாட்டு பேசப்பட்டுக் கொண்டுதான் வருகிறது. ஆனால், இன்று வரை இதற்குத் தமிழர் தரப்பிலிருந்து யாருமே பதிலளிக்காமல் இருப்பது இந்தக் குற்றச்சாட்டை விடக் கொடுமையான ஒன்று!

தலைவர்.வைகோ அவர்களோ, ஐயா பழ.நெடுமாறன் அவர்களோ, அண்ணன்.சீமான் அவர்களோ, அண்ணன்.கொளத்தூர் மணி அவர்களோ... யாருமே இந்தக் குற்றச்சாட்டு பற்றி இதுவரை எந்த விதமான விளக்கமும் அளிக்கவில்லை. விடுதலைப்புலிகளின் வெளிப் படையான ஆதரவாளர்களும், உண்மையான தமிழ்த் தலைவர்களுமான இவர்களே விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்தச் சகிக்க முடியாத குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்காமல் இருப்பதுதான் இந்தக் குற்றச்சாட்டின் மீதான நம்பகத்தன்மையையே உறுதிப்படுத்தி வருகிறது என்பதைக் கனிவு கூர்ந்து இவர்கள் முதலில் உணர வேண்டும்!

தமிழினப் படுகொலை பற்றி உலக நாடுகளும், அதன் பிரதிநிதிகளும் 

பேசும்பொழுது, பன்னாட்டு அமர்வுகளில் இது பற்றி விவாதம் எழும்பொழுது, வடநாட்டு, வெளிநாட்டு ஊடகங்களில் இது குறித்து உரையாடப்படும்பொழுது இப்படி உலகில் யார், எங்கே இந்த இனப் படுகொலை குறித்துப் பேசினாலும் இலங்கை மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றி மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகள் மீதான இந்தக் குற்றச்சாட்டைப் பற்றியும் சேர்த்துத்தான் பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள். ஆனால், நம் தமிழ்நாட்டுத் தலைவர்களும், தமிழ்நாட்டு ஊடகங்களும் மட்டும் ஈழத்தமிழினப் படுகொலை பற்றிய தங்களுடைய எந்த ஒரு பேச்சிலும், எழுத்திலும் இது பற்றி மூச்சு கூட விடுவதில்லை. இது, மேலும் இந்தக் குற்றச்சாட்டுக்கு அளவிட முடியாத வலிமையைச் சேர்க்கிறது!

இப்பொழுதுதான் ஈழப் பிரச்சினை பற்றியும், விடுதலைப்புலிகள் பற்றியுமான நல்ல ஒரு விழிப்புணர்வு தமிழ்நாட்டிலும், உலகத் தமிழர்களிடையிலும் பரவி வருகிறது. விடுதலைப்புலிகள் என்றாலே தீவிரவாதிகள் என்றும், இராஜீவ் காந்தி எனும் தர்மத்தின் தலைவனைக் (!) கொன்றவர்கள் என்றும், உலக நாடுகள் அனைத்தாலும் தடை செய்யப்பட்ட கொடும் குற்றவாளிகள் என்றும்தான் பெரும்பாலான மக்கள் கருதி வந்தார்கள். ஆனால், நடந்த தமிழினப் படுகொலையும், அது பற்றித் தலைவர்.வை.கோ, அண்ணன்.சீமான் முதலானோர் தொடர்ந்து மக்களிடையே ஆற்றிய எழுச்சி உரைகளும், இனப்படுகொலை பற்றி இணையத்தில் தமிழ்ப் பற்றாளர்களும் அறிஞர்களும் பரப்பிய விழிப்புணர்வுத் தகவல்களும்தான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு உண்மையைப் புரிய வைத்திருக்கின்றன. விடுதலைப்புலிகள் போன்ற ஓர் அமைப்புக்கு எப்பேர்ப்பட்ட ஒரு கட்டாயத் தேவை இலங்கையில் நிலவுகிறது என்பது மக்களுக்கு இப்பொழுது தெரிய வந்திருக்கிறது. அவர்கள் மீது எத்தனை பொய்க் குற்றச்சாட்டுகள் யார் யாரால், எந்தெந்த நாடுகளால், என்னென்ன நோக்கத்துடன் சுமத்தப்பட்டுள்ளன என்பதும் புரியத் தொடங்கியிருக்கிறது.

இந்தப் புரிதல்தான் அண்மையில் உலகமே திரும்பிப் பார்க்கும்படியான அவ்வளவு பெரிய மாணவர் கிளர்ச்சியைத் தமிழ்நாட்டில் மலர வைத்தது!

இந்நிலையில், ஈழத் தமிழர்கள் சார்பானவராக நம்பப்படுகிற, ஈழத் தமிழர்களுக்காக ஐ.நா-வில் முழங்கும் தமிழராகத் திகழ்கிற நவநீதம் பிள்ளை அவர்களால் மீண்டும் புலிகள் மீதான இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு கிளம்பியிருப்பதும், ஆனாலும் இந்தக் குற்றச்சாட்டுக்குத் தமிழ்த் தலைவர்கள் பதிலளிக்காமல் இன்னமும் அமைதி காப்பதும் ஈழப் பிரச்சினை, விடுதலைப்புலிகள் ஆகியவை பற்றி இப்பொழுது நிலவும் நல்ல விழிப்புணர்வுச் சூழ்நிலையைக் கண்டிப்பாகப் பாதிக்கும் என்பதை அருள் 
கூர்ந்து அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்! மேலும், இந்தக் குற்றச்சாட்டு விடுதலைப்புலிகளை மட்டுமின்றி அவர்களை ஆதரிக்கிற தமிழ்நாட்டுத் தலைவர்கள், இயக்கங்கள் ஆகியோரையும் இவர்களைப் பின்தொடரும் இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களையும் கூட இழிவுபடுத்துவதாக இருக்கிறது! எல்லாவற்றுக்கும் மேலாக, நமது இனப்படுகொலைக்கான நீதி கோரும் முயற்சிக்கும், தமிழீழக் கோரிக்கைக்கும் கூட இந்தக் குற்றச்சாட்டு பலவீனம் சேர்க்கிறது.

ஒருபுறம், நம் இனத்தை அழித்த இலங்கை ஆட்சியாளர்களைத் தண்டிக்கக் கோரித் தமிழர்கள் நாம் உலகெங்கும் போராடிக் கொண்டிருக்கையில், மறுபுறம் உலகமே ஓரணியில் நின்று விடுதலைப்புலிகள் மீதும் இதே போன்ற குற்றச்சாட்டை முன்வைப்பது கண்டிப்பாக நம் தரப்புக் குற்றச்சாட்டை வெகுவாகப் பலவீனப்படுத்துகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே போல, தமிழீழம் கோரிய விடுதலைப்புலிகளைத் தவறானவர்களாகவும், தமிழர்களுக்கு எதிரானவர்களாகவும் காட்டும் இந்தக் குற்றச்சாட்டின் மூலம் ‘தமிழீழம் என்கிற கோரிக்கையே தவறானது, தமிழர்களுக்கு எதிரானது’ என்கிற தோற்றம் உருவாகிறது; படிப்படியாக உருவாக்கப்பட்டும் வருகிறது. தனி நாடு கேட்ட ஒரே காரணத்துக்காகத் தமிழ் இனத்தையே அழிக்கப் பேரழிவு ஆயுதங்களைக் கையிலெடுத்த இலங்கை முதலான உலக நாடுகள், அந்தக் கோரிக்கையையும் அழிக்க இப்பொழுது இந்த அரசியல்ரீதியான நச்சு ஆயுதத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை!

இந்த உலக மகா அரசியல் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாமல், இந்தக் குற்றச்சாட்டுக்குத் தக்க பதிலளிக்காமல் வெறுமே தமிழீழத்துக்காகவும், இனப்படுகொலைக்கான நீதிக்காகவும் நாம் போராடுவது எந்த விதத்திலும் பலனளிக்காது என்பதை நம் தமிழ்த் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது!

எனவே, இனிமேலாவது தமிழ்நாட்டுத் தலைவர்களும், தமிழ் ஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டு குறித்த தங்கள் மௌனத்தை உடைத்துக் கொள்ள வேண்டும்! உலகமே சேர்ந்து விடுதலைப்புலிகள் மீது சுமத்தும் இந்தக் கொடிய குற்றச்சாட்டுக்குச் சரியான பதிலை, விளக்கத்தை இப்பொழுதாவது முறைப்படி அளிக்க வேண்டும்!

அந்த அளவுக்கு இது ஒன்றும் பதிலளிக்க முடியாத குற்றச்சாட்டும் இல்லை.

விடுதலைப்புலிகள் பற்றியும், அவர்கள் நற்பெயரைக் குலைப்பதற்காக இலங்கை அரசாங்கங்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் திட்டமிட்ட நடவடிக்கைகள் பற்றியும் ஓரளவு நன்றாகவே அறிந்தவன் என்னும் முறையில் இந்தக் குற்றச்சாட்டு பற்றி எனது கருத்து என்னவென்றால், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயரைக் கெடுப்பதற்கெனவே இலங்கை இராணுவத்தில் ‘பச்சைப் புலிகள்’ என ஒரு தனிப் பிரிவே இயங்கி வருகிறது. இது அவர்கள் செயலாகத்தான் இருக்க வேண்டும்.

ஒழுக்கமின்மை, துரோகம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட காரணத்துக்காக விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை விலைக்கு வாங்கி, மூளைச் சலவை செய்து, அவர்களுடன் சிங்கள இராணுவத்தினர் பலரையும் கலந்து தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்தப் ‘பச்சைப் புலிகள்’ பிரிவு. விடுதலைப்புலிகள் தோற்றத்திலேயே சென்று தமிழ்த் தலைவர்கள், சிங்களப் பொதுமக்கள் ஆகியோரைக் கொல்வதன் மூலம் விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகள் போலக் காட்டுவதும், அதே போல் ஈழத் தமிழ் மக்களின் குடியிருப்புகளுக்குள் விடுதலைப்புலிகள் தோற்றத்தில் புகுந்து அவர்களைக் கொல்வதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு விடுதலைப்புலிகள் மீது இருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதுமே இவர்கள் பணி! அந்தக் காலத்தில் இலங்கைத் தமிழர் தலைவர்.உயர்திரு.அமிர்தலிங்கம் அவர்களைக் கொன்று அந்தப் பழியை விடுதலைப்புலிகள் மேல் சுமத்தியதுதான் இவர்கள் செய்த முதல் வேலை. அதன் பின் இப்படி இலங்கைத் தமிழ்த் தலைவர்கள், ஈழத் தமிழர்கள், சிங்களப் பொதுமக்கள் ஆகிய பலரை இவர்கள் இப்படி விடுதலைப்புலிகள் தோற்றத்தில் போய்க் கொன்றிருக்கிறார்கள்!

இவ்வாறு பல்லாண்டுகளாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயரைக் கெடுப்பதற்கான இத்தகைய செயல்களில் ஈடுபட்ட இவர்கள் நடந்த அந்த இனப்படுகொலையின்பொழுது மட்டும் தமது கைவரிசையைக் காட்டாமலா இருந்திருப்பார்கள்? அதுவும் விடுதலைப்புலிகள் எல்லா வல்லமைகளோடும் சுற்றி வந்து கொண்டிருந்த காலத்திலேயே ஈழத் தமிழர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பல கொடுமைகளில் அவர்களால் ஈடுபட முடிந்தது என்றால், இனப்படுகொலையின்பொழுது, அந்த உச்சக்கட்டப் போர்ச் சூழலில், விடுதலைப்புலிகளின் முழுக் கவனமும் எல்லைப் பாதுகாப்பிலேயே குவிந்திருந்த நேரத்தில் இவர்களால் வெகு எளிதாகத் தமிழர் பகுதிக்குள் ஊடுருவி அவர்களைக் கொன்றிருக்க முடியாதா? எனவே, கண்டிப்பாக இது அந்தப் ‘பச்சைப் புலிகள்’ பிரிவினருடைய வேலையாகத்தான் இருக்க முடியும்.

விடுதலைப்புலிகள் தோற்றத்தில் அவர்கள் செய்த இந்தக் கொடும் செயல்களைக் காணொலியில் பார்த்து விட்டும், அவர்களை விடுதலைப்புலிகள் என்று நம்பி ஏமாந்த ஈழத் தமிழர்களின் வாக்குமூலத்தைக் கொண்டும்தான், ‘இனப்படுகொலையின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக’ ஐ.நா முதலான பன்னாட்டு அமைப்புகளும், உலகத் தலைவர்களும், ஊடகங்களும் குற்றஞ்சாட்டி வருகின்றன என்பதுதான் என் வாதம்.

ஆக, கொலையும் செய்துவிட்டு, கொலைக்கான பழியையும் செத்தவன் மீதே போடும் வேலை இது! ஓர் இனத்தையே அழித்து ஒழித்துவிட்டு, அதற்கு நியாயம் கேட்டுக் குரல் எழுப்பினால் அழித்தவர்களே உங்கள் ஆட்கள்தான் என்று மகா மட்டமான திசை திருப்பல் வேலையைச் செய்ய முயல்கிறது இலங்கைச் சிங்கள அரசு.

ஆனால், இது நான் சொன்னால் எத்தனை பேருக்குப் போய்ச் சேரும். மிஞ்சி மிஞ்சிப் போனால் இதைப் படிக்கும் ஓர் ஐந்நூறு அறுநூறு பேருக்குப் போய்ச் சேருமா? அதுவே பெரிது! தவிர, இப்படி வலைப்பூவில் விளக்கமளிப்பதெல்லாம் பன்னாட்டுக் குற்றச்சாட்டு ஒன்றுக்கான முறையான விளக்கமும் ஆகாது!

எனவே, முன்னரே கூறியபடி, பேரன்புக்கும் தனிப்பெருமதிப்புக்கும் உரிய தலைவர்.வை.கோ அவர்களே! ஐயா பழ.நெடுமாறன் அவர்களே! அண்ணன்.சீமான் அவர்களே! அண்ணன்.கொளத்தூர் மணி அவர்களே! அருள் கூர்ந்து இது பற்றிப் பேச நீங்கள் முன்வர வேண்டும்! விடுதலைப்புலிகளின் இத்தனை ஆண்டுக்காலத் தியாக வாழ்க்கைக்குக் களங்கம் கற்பிக்கும் இந்த உலகளாவிய குற்றச்சாட்டுக்கு நீங்கள்தான் தக்க பதிலடி தர வேண்டும்! விடுதலைப்புலிகளைக் குற்றஞ்சாட்டும் சாக்கில் தமிழீழக் கோரிக்கையை ஒடுக்கவும், இனப்படுகொலைக் குற்றச்சாட்டைத் திசை திருப்பவுமான இந்தச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டியது தமிழீழ மலர்ச்சிக்கும் இனப்படுகொலைக்கான நீதி கிடைப்பதற்கும் இன்றியமையாதது என்பதால் இதற்கான தக்க விளக்கத்தை முறைப்படி ஐ.நா முதலான பன்னாட்டு அமைப்புகளுக்கு நீங்கள் உடனே அனுப்பி வைக்க வேண்டும்! விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குவதை விட இந்தப் பழியை நீக்குவதுதான் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய முதற் கடமை என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அதுவும் விடுதலைப்புலிகளும், அதன் தலைவர்களும் தலைமறைவாக இருக்கும் இன்றைய சூழலில் அவர்கள் மேல் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அபாண்டமான குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க வேண்டியது உங்கள் கடமை இல்லையா? நீங்களே செய்யாவிட்டால் இதை வேறு யார் செய்வார்?!

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Monday 2 September 2013

தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு............!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப் படமாகிறது - பிரபாகரன் படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்துசக்தியாக அமையும்! - பழ. நெடுமாறன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
சந்தனக்காடு தொலைக்காட்சி தொடரின் மூலம் அறியப்பட்டு மகிழ்ச்சி திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் வ.கௌதமன். இவர் இயக்கப் போகும் புதிய திரைப்படம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பற்றியதாம்.

இது தொடர்பாக இயக்குநர் வ.கௌதமன் கூறுகையில்,

தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் திரைப்படமாக இது இருக்கும்.  அவரின் சிறு வயது முதல் நடந்திக்கடல் யுத்தம் வரையில் அவர் நடத்திய யுத்தங்களை உள்ளடக்கிய திரைப்படமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.  இந்த திரைப்படத்துக்கான பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

பிரபாகரன் படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்துசக்தியாக அமையும்! - பழ. நெடுமாறன்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று படம், ஒவ்வொரு தமிழருக்கும் உந்து சக்தியாக அமையும் என பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த வீடியோ பேட்டி:

 

வரலாற்றில் மிகப்பழமையும் மிகப்பெருமையும் மிக்க புரட்சி யுகத்தை பூக்கச்செய்த பெருமை தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

வீரமே ஆரமாகவும், தியாகமே அணியாகவும் கொண்ட அவரது செயல் திறனின் விளைவாக இன்று உலகத் தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள்.

கிழக்கே சீனா முதல் மேற்கே உரோமாபுரி வரை அன்றைய நாளில் நமது தமிழர்கள் புகழ் கொடியை பறக்க விட்டார்கள்.

அந்த வீரம் மிக்க வழியிலே வந்த நம் மக்கள், நமது தமிழர்கள் அடிமை சேற்றில் புழுக்களாக நெளிந்து கொண்டிருந்த போது புலிகளாக மாற்றி உலகத்தையே பிரமிக்க வைத்த பெருமை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

எனது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பேர் என்னவென்றால் பிரபாகரன் அவர்களின் நட்பும் தோழமையும் எனக்கு கிடைத்ததை பெரும் பேராக கருதுகின்றேன்.

கடந்த முப்பது ஆணடுகளுக்கு மேலாக அவரோடு நெருங்கிப் பழகி அவரது இலட்சிய நோக்கத்தை புரிந்து கொண்டவன் என்கின்ற முறையில் அவர் தலைமை தாங்கி நடத்துகின்ற போராட்டம், தமிழர்களை விடுவிக்கின்ற போராட்டம் மட்டுமல்ல அது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் விடிவை கொண்டுவரப் போகின்ற போராட்டம் என்பதை நான் தெளிவாக உணர்ந்தவன் என்கின்ற முறையில் தெரிவித்த பல செய்திகள், அவர் கைப்பட எனக்கு எழுதிய கடிதங்கள், அவர் மட்டுமல்ல, அவர் பெற்றோரும் குடும்பத்தினரும் கூறிய செய்திகள், அவரின் முக்கிய இளமைப் பருவ தோழர்கள், பிற்காலத்தில் அவரது படையில் தளபதிகளாகி வீர சாகசங்கள் புரிந்தவர்கள், என அவர்கள் எனக்கு தெரிவித்த முக்கிய செய்திகளின் அடிப்படையில் அவரது வாழ்க்கை வரலாற்றை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்“ என்ற இந்நூலை மூன்று ஆண்டுகள் எழுதியிருக்கின்றேன்.

கடந்த இருபதாம் நூற்றாண்டு உலகெங்கும் பல்வேறு தேசிய இனங்கள் விடுதலைக்காக போராடிய நூற்றாண்டு ஆகும். இன்னமும் அத்தகைய விடுதலைப் போராட்டங்கள் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க விடுதலைப் போராட்டங்கள் உண்டு. இந்தியாவின் மகத்தான தலைவர்களில் ஒருவரான நேதாசி சுபாசு(ஸ்) சந்திர போசு(ஸ்) அவர்கள் சிங்கப்பூரிலே சுதந்திர இந்திய அரசை அமைத்து, இந்திய இராணுவத்தை அமைத்து, இந்திய விடுதலைக்காக போராடிய வரலாறு ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் வரலாறாகும்.

ஆனால் உலகமறிந்த மாபெரும் தலைவர் சுபாசு சந்திர போசு அவர்களுக்கு அன்று வல்லரசாக விளங்கிய யேர்மனி, யப்பான், இத்தாலி, போன்ற நாடுகள் ஆதரவளித்தன.

வியட்நாமின் விடுதலைப் போராட்டத்தை மதிப்புக்குரிய கோசிமின் நடத்திய போது அவருடைய அந்த போராட்டத்திற்கு செஞ்சீனமும் சோவியத் ஒன்றியமும் எல்லாவகையிலும் துணை நின்றன.

அதைப்போல பாலசுத்(ஸ்)தீன விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது யாசீர் அரபாத் அவர்கள் அதற்கு தலமை தாங்கினாலும், இருபத்தியேழு அரேபிய நாடுகள் அவருக்கு பக்கபலமாக நின்றன.

சோவியத் ஒன்றியம், இந்தியா, செஞ்சீனம் போன்ற நாடுகள் ஆசிய ஆபிரிக்க நாடுகள் எல்லாம் அவருக்கு அங்கீகாரம் அளித்தன. வங்க தேச விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது இந்தியா முழுமையாக உதவியது.

அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்திய இராணுவத்தை அனுப்பி வங்கதேச விடுதலையை உறுதி செய்தார்.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற போராட்டங்களிலேயே தனித்தன்மை வாய்ந்த போராட்டம் எதுவென்று சொன்னால் அது தமிழீழ விடுதலைப் போராட்டம்தான்.

பிரபாகரன் அவர்கள் தலைமையில் தமிழீழ போராட்டம் அன்று நடைபெற்ற போதும், இனி நடைபெறப் போகின்ற போதும் சரி அந்தப் போராட்டத்திற்கு உலகில் எந்த நாடோ, எந்த ஒரு அரசோ, ஒரு சிறு உதவி கூட செய்யவில்லை.

மாறாக இந்தியா போன்ற அண்டை நாடுகளே அதற்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்த சூழ்நிலையில் தமிழீழ தேசியத் தலைவர் பிரகாகரன் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களின் துணைகொண்டு அவருடைய நாட்டைச் சேர்ந்த இளைஞர்களையும் யுவதிகளையும் மட்டுமே நம்பி இந்த வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கின்றார்.

பிரபாகரன் அவர்களை நான் முன்பு குறிப்பிட்ட உலகறிந்த தலைவர்களோடு ஒப்படும் பொழுது வயதாலும் அனுபவத்தாலும் அவர் மிக மிக இளையவர் என்பதில் சந்தேகமில்லை. அந்த தலைவர்களுக்கு எல்லாம் உலக நாடுகள் பல சேர்ந்து துணை நின்றன. அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

ஆனால் நாடோ, எந்த அரசோ உதவாமல் தனி மனிதனாக பிரபாகரன் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டம் ஆங்கிலத்திலே சொல்வதானால் இது தனிப்பட்ட உள்ளது .. (It is Unique...) இந்த மகத்தான போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டிய கடமை எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீர காவியத்தை அடிப்படையாக கொண்டு நம்முடைய இயக்குனர் வ.கௌதமன் அவர்கள் திரைக் காவியமாக அதை படைக்கவிருப்பதை அறிய மகிழ்கின்றேன்.

நம்முடைய தம்பி கௌதமன் தியாக முத்திரை பதித்த ஒரு தமிழ் தேசியக் குடும்கத்தின் வழித்தோன்றல். அவர் இந்தப் படத்தை எடுப்பது எல்லாவகையிலும் சாலச் சிறந்தது என்று நான் கருதுகின்றேன்.

வள்ளுவ பேராசான் சொன்னது போல "இதனை இவன் இதனால் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்" என்று சொன்னார்.

உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பத்து கோடி தமிழர்களுக்கு நடுவே புரட்சி மலராக மலர்ந்து மணம் வீசி நமது தமிழின பெருமையை உலகறியச் செய்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றிய இந்த திரைக்காவியத்தை எடுப்பதற்கு எல்லா வகையிலும் தகுதி பெற்றவர்.

அதற்கான ஆற்றலும் அறிவும் அவரிடம் நிரம்பவே உண்டு. எல்லாவற்றிற்கு மேலாக ஒரு உண்மையான தமிழனாக திகழ்கின்றார். அவர் இப்படத்தை எடுப்பதை நான் மனதார பாராட்டுகின்றேன்.

மேலும் அவர் படைக்கவிருக்கும் இத்திரைக்காவியத்தை உலகத் தமிழர்கள் வரவேற்பார்கள் என நான் நிச்சயமாக நம்புகின்றேன்.

உலகிற்கு இந்த திரைக்காவியம் ஒரு உன்னதமான தமிழ் மகனின் வரலாற்றை எடுத்துச் செல்லும் காவியமாக இது திகழும். அதற்கு எல்லாவகையிலும் துணை நிற்பதற்கு ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும்.

மேலும் இத் திரைப்படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்து சக்தியாக அமையும் என்பதால் இதற்கு ஆதரவு தாருங்கள் என்று உங்களை மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.