Thursday 30 May 2013

தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில்................!.

தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத அறிவர் பட்டினத்தார்.


தமிழ் இலக்கியங்களில் நான் அதிகம் படித்தது பக்தி இலக்கியங்கள் தான். அதிலும் அதிகமாக படித்தது சித்தர் பாடல்கள். அவற்றுள் நான் விரும்பி படித்தது பட்டினத்தார் பாடல்கள் தான். கடவுள் இருப்பு மறுப்பு என்பதை கடந்து தமிழர்கள் யாவரும் படிக்க வேண்டிய படைப்பு பட்டினத்தார் பாடல்கள். 

தமிழின் அருஞ்சுவை, தமிழர் பண்பாட்டின் சாரம், மனதின் மாய விளையாட்டுகள், மெய்யறிவின் திறனாய்வு என பன்முக கோணங்களில் பாடப்பெற்ற பாடல்கள் தான் பட்டினத்தாரின் ஒப்பற்ற படைப்புகள். 

எல்லாவற்றிக்கும் மேலாக தாயை நேசிக்கும் எவரும் படிக்க வேண்டியது, தாயை குறித்த பட்டினத்தாரின் உணர்வுகள் மற்றும் நெஞ்சை உள்ளிருந்து உருக்கும் அவரது பாடல்கள்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்

போன்ற பாடல்கள் நெகிழ்ச்சியின் உச்சகட்டம். மனிதன் கருவில் உருவாதல் முதல் பாடையில் சென்று முடிவில் சாம்பல் ஆகும் வரை வாழ்க்கையை அங்குல அங்குலமாக அளந்து பாடிய பாடல் வரிகள் நிச்சயம் படிப்பவரை மெய்சிலிர்க்க வைக்கும். சிந்திக்கத் தூண்டும்.

ஒரு கணப் பொழுதில் தனக்கு அறிவை ஊட்டி மறைந்த தனது புதல்வனின் இதயத்தை தைக்கும் வார்த்தைகள்.

'காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே' என்னும் வரிகள் தமிழர்களின் ஈடு இணையில்லா மெய்யியல் வாசகம்.

பகட்டான ஆரியப் பண்பாட்டினை, சடங்குகளை, நூல்களை சாடாமல் இல்லை பட்டினத்தார். தமிழர்களுக்கே உரிய அரிய சித்தர் ரகசியங்களை இவர் பாடல்கள் உள்ளடக்கி உள்ளது.

சாதி மதம் கடந்து தமிழர் மெய்யியல் விரும்பும் ஆர்வலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் பட்டினத்தார் பாடல்கள். இன்றும் தமிழர்கள் இறந்தால், சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்பவர் பாடும் பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் தான்.

ஒவ்வொரு ஊருக்கும் உள்ள சிறப்பியல்புகளை விளக்கும் பாடல்கள். உடுக்க ஒரு உடைக் கோவணத்தோடு தமிழர் நிலப்பரப்பு முற்றிலும் தன் காலால் நடந்தே அளந்து முடித்து ஓய்ந்து முடிவில் திருவொற்றியூருக்கு வந்து நிலை கொண்டார் பட்டினத்து அடிகள்.

அவர் இறுதியில் அடக்கமான இடம் இன்றும் அங்கு இருக்கிறது. பல முறை அங்கு சென்று பட்டினத்தாரை நினைவு கூர்ந்துள்ளேன். அவரது பாடல்கள் என்றும் நினைவில் விட்டு நீங்காதவை.

தமிழும், தமிழர் பண்பாடும் இவ்வுலகில் வாழும் வரை பட்டினத்தாரும் இணைந்தே வாழ்வார். தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத ஒரு மாமனிதர் பட்டினத்தார்.

யாருக்கும் அடங்காத வீரம், மண்டியிடாத மானம், சமரசம் இல்லா அறிவு போன்ற பண்புகளை தன்னகத்தே கொண்ட கருணையின் ஊற்றாக விளங்கிய பட்டினத்தாரை பற்றி ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Wednesday 22 May 2013

எதிரி நாட்டு ஏவுகணைகளை....!

எதிரி நாட்டு ஏவுகணைகளை பல்வேறு நிலைகளிலும் வைத்து தாக்கி அழித்தொழிக்கும் வகையில் மிகவும் சக்தி வாய்ந்த இரசாயன சீரொளிக் கதிர்களை (Chemical Laser) பாய்ச்சக் கூடிய நவீன கருவியை அமெரிக்கா கண்டறிந்துள்ளது.


அதனை போயிங் 747 வானூர்தியில் பொருத்தி, வானூர்தியின் மூக்குப் பகுதியில் உள்ள விசேட கட்டுப்பாட்டுக் கருவி மூலம் சீரொளியை தேவைக்கு ஏற்ப பாய்ச்சி எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க முடியும்.

இதில் பயன்படுத்தப்படும் உயர் சக்தி இரசாயன ஒக்சிசன் அயடீன் சீரொளி (Chemical Oxygen Iodine Laser) பல ஆயிரக்கணக்கு அலகுள்ள வலுவை உருவாக்கக் கூடியது.


அவ்வலுவைப் பயன்படுத்தி எதிரி நாடுகளின் அனைத்து வகை ஏவுகணைகளையும் தாக்கி அழிக்க முடியும் என்று இதனை வடிவமைத்துள்ள அமெரிக்க இராணுவ பொறியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அதி நவீன இரசாயன கிளர்கதிர் (laser) வானூர்தியைக் கொண்டு எதிரி நாட்டு திரவ எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகளை அவற்றின் இலக்கில் இருந்து 600 கிலோமீற்றர்களுக்கு அப்பாலும்.


திண்ம எரிபொருள் கொண்டியங்கும் ஏவுகணைகளை அவற்றின் இலக்கில் இருந்து 300 கிலோமீற்றர்களுக்கு அப்பாலும் வைத்து தாக்கி அழிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் மற்றும் வட கொரியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் எதிராக எழக் கூடிய ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை சமாளிக்க இது அவசியம் என்று அமெரிக்க பெளதீகத்துறை இராணுவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



அமெரிக்காவின் இராணுவ செல்வாக்கையும் பலத்தையும் இந்த தொழில்நுட்பம் இன்னும் அமெரிக்கா பக்கம் உயர்த்தவே வழி செய்யும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Monday 13 May 2013

ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்...........!

ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்கும் வகையில் சூரியசக்தி உளவு வானூர்தி ஒன்றை போயிங் (Boing) நிறுவனம் தயார் செய்துள்ளது.


சூரிய சக்தியில் இயங்கும் இந்த உளவு வானூர்தியை தயாரிக்க அமெரிக்க இராணுவம் போயிங் நிறுவனத்திடம் அனுமதி வழங்கியது.

சூரிய கழுகு (Solar Eagle) ன்ற பெயரில் உளவு வானூர்தியைத் தயாரித்துள்ள போயிங் நிறுவனம் அதைப் பரிசோதித்து வருகிறது. இந்த வானூர்தி நிற்காமல் விண்ணில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பறக்குமாம். 

இந்த வானூர்தியின் இறக்கையில் உள்ள சூரியத் தகடுகள் (Solar Impulse) பகல் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும். இதன் மூலம் வானூர்தியின் மின்னியல் இயந்திரங்கள் (Electric Motors) மற்றும் உந்துகணைகள் (Propellers) இயங்கும்.

வானில் மிக உயரத்தில் தொடர்ச்சியாக பறந்து படங்கள் மற்றும் உளவுத் தகவல்களைத் தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு இந்த வானூர்தி அனுப்பிக் கொண்டிருக்கும். 

முதல் முறையாக சோதனை ஓட்டத்துக்கு விடப்படும் வானூர்தி 30 நாள் தொடர்ந்து பறக்கவுள்ளது.இந்த சூரிய கழுகு வானூர்தி 2014ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Tuesday 7 May 2013

ஆதித் தமிழன் எந்த ஒரு.................!



ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும் " எடுத்தோம், கவிழ்த்தோம் " என்று செய்ததில்லை, தான் செய்து வைத்து விட்டு சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும், " அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான்.

ஆனால் அதனுடன் சேர்த்து அவன் செய்துவிட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின்னால் " கடவுள் " பெயரை சொல்லிவிட்டு சென்றது தான்,ஒருவேளை அவன் கடவுள் பெயரை கூறினாலாவது பயந்து கொண்டு அந்த விடயங்களை கடைபிடிப்பார்கள் என்ற தொலை நோக்கு பார்வையாக கூட இருந்திருக்கலாம், ஆனால் பாவம் அவனுக்கு தெரியாது, 

வரும் சந்ததியினர், கவர்ச்சி நடிகைக்கெல்லாம் கோயில் எழுப்பி, தான் பெரிதாக நினைத்த கடவுளையே கூட இழிவு படுத்துவர் என்று.

இன்றைக்கு பகுத்தறிவு என்ற பெயரில், நம் முன்னோர்களின் பல அறிய கண்டுபிடுப்புகளை நாளுக்கு நாள் நாம் அழித்துக் கொண்டு வருகிறோம் என்று தான் கூற வேண்டும், கோவிலுக்கு செல்ல கூடாது, சாமியும் இல்லை, பூதமும் இல்லை, என்ற வாதம் தான் இன்றைய பகுத்தறிவின் வெளிப்பாடாக இருக்கின்றது.

அது உண்மையா, பொய்யா என்பது தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது. ஆனால் நாளடைவில் அந்த விடயம் பலரால், பலவிதமாக திரித்து இன்று நம் அடையாளங்களை இழக்கும் நிலைக்கு வந்து விட்டோம் என்பதே உண்மை.

கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறுத்துவது தானே உண்மையான பகுத்தறிவு?

உதாரணத்திற்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வந்தால் நல்லது, என்பதற்கு பின்னால் கடவுளின் பெயரை கூறியதால் இன்று நாத்திகர்கள் அதை செய்வது இல்லை, ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல், முழு நிலவு அன்று நிலாவிலிருந்து வரும் ஒளிக்கதிரில் உள்ள ஒருவித "நேர்மறை ஆற்றல்" (Positive Energy) நாம் சுற்றிவரும் மலையின் மீது பட்டு, நம் உடலில் இறங்கினால் நல்லது என அதையே தான் இன்று விஞ்ஞானம் கூறுகின்றது.

இன்றைக்கு இருப்பதை போன்று கேளிக்கைகளுக்கு திரை அரங்குகளோ,கல்வி கற்பதற்கு "ஏரிகளின்" மேல் கல்லூரிகளோ, மருத்துவமனைகளோ அவர்கள் கட்டிவைக்க வில்லை, இவை அனைத்தும் நடந்தது ஓரே இடத்தில், ஒரு இடத்திற்கு சென்றால் அனைத்தையும் கற்க முடியும் என்றால் ( களவி உட்பட ) அது அன்று கோவில்களாக மட்டுமே இருந்துள்ளது.

அது ஒரு பல்கலைக்கழமாகவே இருந்துள்ளது , அதனால் தான் கோவில் சிற்பங்களில் களவி சம்மந்தப்பட்ட சிற்ப்பங்கள் கூட காண நேர்கின்றது," கோவில்களில் கேளிக்கைகளுக்கு நாட்டியங்கள் அரங்கேறியுள்ளது, கல்வி கற்க பாடசாலைகள் அமைக்கப்பட்டது.

சில கோவில்கள் மருத்துவமனைகளாகவும் செயல்பட்டுள்ளது ,உதாரணத்திற்கு திருச்சி, திருவைகுண்டத்தை கூட கூறலாம் அங்கே ஆயிரம் வருடங்களுக்கு முன்னே,வெறும் மூலிகைகளை வைத்து "அறுவை சிகிச்சை......." (Surgery) வரை நடைபெற்றுள்ளது.

இன்றைக்கு இருப்பதை போன்று அன்று அனைவரும் மாடி வீடுகளில் தங்கி இருக்க வாய்ப்பில்லை ஆக பெரு வெள்ளம் வரும் போது, பெரும் பாறைகளால், பெரும் உழைபிற்கு மத்தியில் உருவான இந்த கோயில்களில் மட்டுமே மக்கள் தஞ்சம் அடைந்திருக்க கூடும், கோவில் தூண்களில் தான் நம் கலைகளை வளர்த்துள்ளோம், அங்கே ஒவ்வொரு சிற்பமும் சொல்லும் கதை தான், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்.

ஆயிரம் வருடங்களுக்கு மேல் நம்முடம் பயணிக்கும் கோயில்கள் அமைந்திருக்கும் இடம் சாதாரணமாக தேர்வு செய்து கட்டி இருக்க வாய்புகள் இருக்காது. அந்த இடமானது பூமத்திய ரேகை கோட்பாடுகளின் படி அறிவியல் அமைப்புகளுடன் மட்டுமே கட்டப்பட்டிருக்கும், இன்றைக்கு இருக்கும் நிலப் பதிவு அலுவலகம் அன்று கிடையாது, கோவில் கல்வெட்டுகள் முழுவதும் தான் அது பதியப்பட்டுள்ளது, அந்த கல்வெட்டுகளில் தான் தமிழனின் வரலாறு புதைந்துள்ளது.

தஞ்சை பெரிய கோயில் கட்டியது " ராச ராசன் " என்று நிலைவட்டு (hard disk), பென்ட்ரைவிலோ (Pen Drive) பதியப்படவில்லை, அனைத்தும் கோயில் கல்வெட்டுகள் மூலமே நமக்கு தெரிய வருகின்றது, அப்படி இருக்க பகுத்தறிவின் பெயரில் இப்பேற்பட்ட நம் வரலாற்று சின்னங்களை கொஞ்சம், கொஞ்சமாக அழிப்பது எந்த விதத்தில் நியாயம்?

என்று யோசித்து பாருங்கள் ! வரலாற்று அடையாளங்கள் வேண்டாம், மொழி மட்டும் போதும் என்பவர்கள், மரங்கள் வேண்டாம் பிராணவாயு மட்டும் போதும் என்று முரண்பாடான கருத்தை கூறுவதைப் போன்றது என்பதை உணரவேண்டும்.

ஐயாயிரம் வருடத்திற்கு முன்பே தமிழன் சித்த வைத்தியத்தில் கூறிய மஞ்சளுக்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான், வீட்டு முற்றத்தில் தமிழன் வளர்த்த வேப்பமரத்திற்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான், இன்னும் எதை எல்லாம் தொலைக்கைப்போகிறோம் ?

மொழி கலப்படமாகிவிட்டது, உடை மேற்கத்திய உடை, கலப்படம் இல்லாமல் பழமையுடன் காட்சியளிப்பதும், நாம் பழமையானவர்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிப்பதும், இந்த கோயில்களை வைத்து மட்டுமே என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம் அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்ல இருக்கிறோம்?

தொலைத்தது வரை போதும், மீதம் உள்ளவயேனும் காப்பாற்றுவோம்.  

வரலாற்று சின்னங்களான நம் கோவில்களை காப்போம். அந்த சிலைகளில் கூறப்பட்டுள்ள செய்திகளை உலகறிய செய்வோம்! தமிழை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வோம்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.