Friday 31 August 2012

பழந்தமிழகப் பின்னணி......................!


விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பகுதியான அன்றைய திராவிட தேசம், இன்றைய பொதுவழக்கில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் மாநிலங்களைக் குறித்தாலும் கூட மொழி, கலாச்சார, தொல்லியற் பின்னணியில் நோக்கும்போது இக்குறிப்பானது தமிழகத்திற்குப் பெரும்பாலும் பொருந்தும் எனலாம்.

தமிழகம் இந்தியக் கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகக் காணப்பட்டாலும் கூட, இதன் மொழி, கலாச்சாரம் ஆகியவை தொல்லியல் பாரம்பரியம் கொண்டவை ஆகும்.

தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. 

சான்று:

வையக வரைப்பில் தமிழகம் கேட்ப
(புறநானூறு, 168 :18)

இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க
(பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5)

இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய
( சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38)

சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
(மணிமேகலை, 17: 62)

சங்க இலக்கியங்களில் இச்சொல் மொழியையும், நாட்டையும், நாட்டில் வாழ்ந்த மக்களையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே தமிழ் நாட்டகம், தமிழ் கூறு நல்லுலகம் எனப் பழந்தமிழ் நூல்களில் இடம் பெற்றுள்ளது.

சான்று:

தமிழ் கூறு நல்லுலகத்து
(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்: 3)

‘தமிழகம்’ என்ற சொல் கிரேக்கரால் தமரிகெ என்றும், உரோமரால் தமிரிக்கா, தமரிகே எனவும் வழங்கப்பட்டது. கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்குரிய காரவேலனின் காதி கும்பாக் கல்வெட்டில் தமிழகம் திரமிள தேசம் எனக் குறிப்பிடப்படுகிறது.

இவ்வடிவம் ஒரு பரந்த அடிப்படையில் தென் இந்திய மொழிகள் பேசப்படும் நாடுகளைக் குறிக்கும் ஒரு வடிவமாகவே பயன்படுத்தப்படுகிறது, எனினும் தொடக்கத்தில் இன்றைய கேரள மாநிலத்தை உள்ளடக்கிய பண்டைய தமிழகத்தையே இது குறித்து நின்றது. இதனையே வடமொழியாளர் திராவிட என அழைத்தனர்.

தனித்த பண்டைய தமிழகம்

திராவிட மொழிகளுள் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பேசப்படும் மாநிலங்களிலிருந்து தமிழகத்தை ஒரு தனித்துவமான கூறாக ஆக்கி விடலாம். திராவிட மொழிகள் பேசப்படும் மாநிலங்களில் மிகப்பழைய இலக்கியப் பாரம்பரியமுடைய மாநிலம் தமிழகம்தான்.

கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளின் மீது வடமொழி ஏற்படுத்திய தாக்கத்தினைப் போன்று தமிழ் மொழியின் மீது அது மிகுதியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சங்க இலக்கியங்களில் வடமொழிச் சொற்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே.

ஆரிய சமூக அமைப்பில் தமிழகம் இணைந்து கரைந்து போகாமல் தனித்துவத்தைக் காத்துக் கொண்டு நின்றது எனலாம். சுருங்கக் கூறின் தென் இந்தியாவில் ஆரியமயமாக்கும் திட்டம் தோல்வி கண்ட இடமாகவே தமிழகம் விளங்குகிறது.

இலெமூரியாக் கண்டம்

இந்தியாவின் மிகப் பழைய பாறை அமைப்பைக் கொண்டுள்ள தென்னிந்தியா, புவியியல் வரலாற்றில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்த ஒரு நிலப்பரப்பாகும். இந்தத் தென் இந்தியா முன்பு ஒருபுறம் தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றுடனும், மறுபுறம் மலேயாத்தீப கற்பத்தினூடாக ஆஸ்திரேலியாவுடனும் இணைந்திருந்தது.

இப்பெரிய பரப்பு இலெமூரியாக் கண்டம் எனப்பட்டது.. பின்னர் இக்கண்டம் கடற்கோள்கள் போன்ற பேரழிவுகளால் சிதைவுற்றுத் தற்போதைய அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் உருவாகின எனப் புவியியலார் கூறுகின்றனர்.

இவ்வாறேதான் தமிழகத்தின் தென் பகுதியிலுள்ள பாண்டி நாட்டைச் சேர்ந்த பகுதிகள் குமரிக் கண்டம் எனப்பட்ட இலெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதியாக விளங்கின என்றும் கூறப்படுகிறது. ஆனால் இலெமூரியாக் கண்டம் இருந்ததைப் பற்றிய கருத்துகளில் இன்னும் ஆராய்ச்சியாளர்களிடையே முரண்பாடுகள் உள்ளன.

இருப்பினும், குமரிக் கண்டம் பற்றிய சான்றுகள் ஓரளவு நம்பகமானவை எனக் கொள்ளப்படுகின்றன. மாறிமாறி வந்த கடற்கோள்களினால் பாண்டி நாட்டைச் சேர்ந்த 49 நாடுகளாகிய ஏழ் தெங்கநாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் குணக்கரை நாடு, ஏழ் குறும்பனை நாடு ஆகியன மறைந்தன என ஆய்வாளர் கூறுவர். இவற்றுள் குமரியாறும், பஃறுளியாறும், பேராறும், குமரிக்கோடும் மகேந்திர மலையும் அடங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இத்தகைய கடற்கோள்களினால் தமிழகத்தின் எல்லை சுருங்க, வேங்கடம் இதன் வட எல்லையாகவும், குமரி இதன் தென் எல்லையாகவும் ஆயின. இதனையே தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம்,

வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்
(தொல். சிறப்புப் பாயிரம்: 1-3)

என்றும், சிலப்பதிகாரம்,

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாடு

(சிலப்பதிகாரம், வேனிற்காதை, 1-2)
என்றும் குறிக்கின்றன.

அக்காலத் தமிழகம் செந்தமிழ் நாடு எனவும், கொடுந்தமிழ் நாடு எனவும் பிரிக்கப்பட்டிருந்தது. செந்தமிழ் நாடான பாண்டிய நாட்டுடன் அதனைச் சூழ்ந்த வைகை ஆற்றின் வடக்கும், மருத ஆற்றின் தெற்கும், மருவூரின் மேற்கும், கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம் செந்தமிழ் நாடு எனப்பட்டது.

கொடுந்தமிழ் நாடு என்பது செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்திருந்த தென் பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, கற்கா நாடு, வேணாடு, பூழி நாடு, பன்றி நாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு, சீத நாடு, மலாடு, புனல் நாடு என்னும் பன்னிரண்டு பகுதிகள் ஆகும்.

பழந்தமிழகத்தின் பிரிவுகள்

தென்னிந்தியாவின் புவியியல் கூறுகளை ஆராய்ந்தவர்கள் இந்நிலப்பரப்பை மூன்று தலையாய கூறுகளாகப் பிரித்தனர்.

அவையாவன:

1. ஈர்ப்புப் பகுதிகள்

2. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

3. ஓரளவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

தமிழகம் இவ்வட்டவணையில் ஈர்ப்புப் பகுதியாக விளங்குகிறது. இதில் காணப்படும் பல்வேறு தனித்துவம் வாய்ந்த புவியியல் கூறுகளையும் புவியியலார் இனங்காணத் தவறவில்லை.

இதனால் இதன் கலாச்சார வளர்ச்சியில் பல்வேறு வகையான தரங்கள் இருப்பதையும் கண்டனர். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த புவியியல் கூறுகளை இனங்கண்டு அவற்றைத் தனித்தனிக் கூறுகளாகப் பிரித்து ஆராய்ந்தனர்.

பழந்தமிழரும் நிலங்களைப் பிரித்து ஆராய்ந்து இருந்தனர். இதற்கான சான்றுகள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் போன்ற இலக்கிய, இலக்கண நூல்களில் உள்ளன. ஒவ்வோர் இடத்திலும் காணப்பட்ட தரையின் தோற்றம், கால நிலை, தாவரங்கள், மிருகங்கள், நீர்நிலை வசதிகள், மண்வகை, மனிதச் செயற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிலங்களைப் பிரித்திருந்தனர். இவை ஒவ்வொன்றும் பழந்தமிழரைப் பொறுத்தவரையில் தனித்தனியான உலகங்களாகவே காட்சியளிக்கின்றன. 

இதனையே தொல்காப்பியர்,

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச்,
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

(தொல். பொருள்,5)

எனச் சுட்டிக்காட்டுகின்றார். மேற்கூறிய பகுப்பில் பாலைநிலம் அடங்காததற்குக் காரணம் தமிழகத்தில் வனாந்தரம் அல்லது மிகமிக வறண்ட நிலப்பரப்பு காணப்படாமையே ஆகும். காடும் மலையுமாகிய நிலங்கள் வறட்சி எய்தும்போது பாலை நிலப்பண்பைப் பெற்றதால் இதனை ஒரு தனிப் புவியியல் கூறாகத் தொல்காப்பியர் காணவில்லை.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Thursday 30 August 2012

உலகின் மிகப் பழமையான தமிழ்மொழிதான்.!













































தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.




Tuesday 28 August 2012

திரும்பிப் பார்க்கவும் திரும்பி வரவும் ஆசை..!

ஊர்விட்டு ஓடோடிப் போனவர்கள்… கடைசிப்பிள்ளையும் கட்டுநாயக்கா தாண்டியபின் விடுதலை மோகத்தில் விழுந்தெழும்பியவர்கள்..... பிள்ளைகள் மூவரையும் பான்ரோம் காரில் Fபப்புக்கு அனுப்பிய பின் பொடியளின் வீரத்தில் புல்லரித்துப் போனவர்கள்…. நேற்று வந்திருந்தனர்… என்ன வரமாட்டன்..வரமாட்டன் என்டீங்கள்.. கடைசியில இந்தப்பக்கம்? 

இனியென்ன வரலாந்தானே…பிள்ளைக்கும் விடுமுறை… ஒரே அலுப்பு  (“Bore”) என்றான்… அதுதான் ஒருக்கா சுத்திப் பாத்திட்டுப் போவம் என்று….. ஓ…. எங்க போறதா உத்தேசம்?
























நிறைய இடம்  திட்டம் (plan) பண்ணித்தான் வந்தனாங்கள்… தம்பி  பட்டியலை (list) ஐ எடு..
ஓ… பிறந்த இடம்…..
தவழ்ந்த இடம்….
அப்பா படித்த பள்ளிக்கூடம்…
அம்மாவுக்கு அனுமதி கிடைத்த பல்கலைக்கழகம்….
கடல் தாண்டி கண்ணில் வைக்க ஒரு கண்ணகி அம்மன்….

கழுவிக்கொள்ள ஒரு கடற்கரை…..
இன்னும்…
இன்னும்….
அதற்கேன் கடதாசி…
பனியில் குளித்தாலும் புழுதி மணம் மறந்து போகுமோ??

மறந்து போனாலும் என்டு எல்லாம் எழுதியே வைத்திருக்கிறம்…. ம்ம்ம்..போகும் போல்தான் உள்ளது… நமக்கென்ன அனுபவமா?

அப்பா (Dad) அங்க கட்டாயம் கூட்டிக்கொண்டு போவீங்கதானே…?

உரக்க வினவியது பிள்ளை…
அப்பா சொன்னா சொன்னது தான்!
கட்டாயம் கூட்டிக்கொண்டு போவன்…
முதல் பயணம் (Trip) அங்கதான்!
ஒரு கோடி பிரகாசம் பிள்ளை முகத்தில்…. எங்க???
மெல்லக் கேட்டேன்…

அப்பா “சொன்னார்”. வலித்தது…
ஒவ்வொரு அணுவும்… பயணமா (Trip) ஆ?
என் புனித பூமியே…
அவர்கள் உன்னை “சுத்திப் பார்க்க” வருகிறார்களாம்…
எந்த மனதுடன்..?
எந்த உணர்வுடன்?
மூன்று வருசத்துக்கு முந்தியே தொலைக்காட்சியை (TV) ய பாத்திட்டுச் சொல்லிட்டான்… எங்கள் தாயகத்திற்கு (சிலோனுக்கு) போகேக்க அங்க கூட்டிக் கொண்டு போகோணும் என்று… நானும் அப்பவே வாக்குக் கொடுத்திட்டன்..
மூன்று வருசத்துக்கு முந்தி!!
எப்போது? விளங்கியது…

அந்தக் கோரத்திற்கும் கொடுமைகளுக்கும் நடுவில் சுத்திப் பார்க்க இடம்  தெரிவு (Select ) பண்ணிய நீவீர் நீடுழி வாழ்க..!

நீதான் எங்களை கூட்டிக் கொண்டு போக வேணும்… நானா?? அங்கு…..
முடியுமா என்னால்???
இன்றுவரை எனது தலையணை ஈரம் காயவில்லை…
என் கண்ணீரின் ஊற்றுக்கண் நோக்கி….
எனது ஈடு செய்ய முடியா இழப்பின் இருப்பிடம் நோக்கி…..
நிச்சயம் முடியாது.

அது வந்து….
எனக்கு….
வேலை…..
அதெல்லாம் விடுமுறை  (Leave) எடுக்கலாம்..
அவள் வருவாள். இடையில் குறுக்கிட்டு உறுதிமொழி வழங்கினாள் அன்னை.

எப்பபார் வேலை…
வேலை…
மனிசர மதிக்கத்தெரியாம என்ன வேலை?
எவ்வளவு காலத்திற்குப் பிறகு வந்த சனம்…
குசினிக்குள் காதோரத்தில் கடுகடுப்பு வேறு.. ம்ம்ம்…
உன்னாலும் என்னை புரிந்து கொள்ள முடியாது அம்மா.

மனுசன், பிள்ளை, கோயில், அடுப்படி, அயலவர் தாண்டாத உன்னுலகம்! உன் பிள்ளைகள் உயிருக்கு உத்தாரவாதமின்றி இருந்த காலத்தில் ஒரு வார்த்தை கேட்காத உன் உறவுகள்…
ஒரு கவளம் கொள்ளாத உன் வயிற்றை உணராத உறவுகள்….
நீ காலனுடன் பயணப்பட்டு கடைசி நேரத்தில் மறுத்து திரும்பி வந்ததை சிரிப்புடன் பகிர்ந்த உன் உறவுகள்…..
ஒருநாள் தங்கவென வந்தவுடன் எப்படி உன்னால் மட்டும் எல்லாவற்றையும் மறக்க முடிகிறது??

அவர்களது முதல் பயணம் (Trip)… மாங்குளம் சந்தி திரும்பி தொடர்ந்தது…. மன்னித்துக்கொள்ளுங்கள் என் உறவுகளே….
உங்கள் ஓலங்களை …
உங்கள் உதிரப் பெருக்குகளை நிறுத்த முயலாதவள்.
உங்கள் கண்ணீர் துடைக்க ஒற்றை விரலையேனும் நீட்டாதவள்…
உங்கள் உடலங்கள் மீது ஒரு மலரேனும் தூவாதவள்…. வருகிறாள்! உறவுகளை உதிர்த்து மனதளவில் மரணித்துப் போனவள் உல்லாசப் பயணமொன்றில் ஓரங்கமாகி.

மறைக்கும் நோக்கமற்ற மேலாடைகளும்…
முழங்கால் தாண்டாத முக்கால் காற்சட்டைகளும்…
ஆளுக்கு ஒரு கமெராவும்…..
ஆன்சி மானேயின் அனல் பறக்கும் பாடல்களும்…
முட்டாள்களே புரிந்து கொள்ளுங்கள்…

நீங்கள் போய்க்கொண்டிருப்பது மனிதாபிமானம் மரத்துப்போன ஒரு இடத்தை நோக்கி….
ஒரு தேசியம் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட தேசம் நோக்கி….
எங்கள் கற்புகள் கன்னமிடப்பட்ட களம் நோக்கி…
சுட்டிக் குழந்தைகளின் சுடலை நோக்கி…
துரோகம் வடித்த துன்பியல் நாடகத்தின் இறுதிக்காட்சி இடம்பெற்ற இடம் நோக்கி….
இறுதிவரை தாளாத இயல்பு நோக்கி…
ஒப்பற்ற ஓராயிரம் மரணங்கள் நோக்கி…

இன்னும்…
இன்னும்….
மயானத்தின் அமைதி சிலவேளை மனிதர்களுக்குப் புரியலாம்… இவர்களுக்கு?? நிச்சயமாக இல்லை.

உங்கள் வலிகளை அவர்கள் தெரிந்திருந்தார்கள்….. உணரவில்லை
உங்கள் மரணங்களுக்கு அவர்கள் சாட்சியாக இருந்தார்கள் 
உறுத்தவில்லை  உருக்குலைந்த வீடுகள்….
ஓட மறந்த வாகனங்கள்….

மரத்தோடு இரண்டறக்கலந்து விட்ட சேலைத் தொட்டில்… காலில்
தடக்கிய ஓட்டை விழுந்த பந்து…
மண்ணிலிருந்து முளைத்துப்பறந்த ஒரு துண்டு சீருடை… குண்டுச்
சிதறல் தாங்கிய பானைகள்… நடுவே
குண்டு துளைத்த அந்த சிறு சப்பாத்து…. சிதைந்த
கிடந்த யுனிசெப் கூரைகள்…. வாழ்வைத்
தொலைத்துவிட்ட வளமான குடும்பத்தின் எச்சங்களும் எலும்புக்கூடுகளும் கமெரா பிடித்துக் கொண்டது காட்சிகளை கண்குளிர…

உறுத்தலின்றி…
வலிகளின்றி..
கண்ணை மறைக்கும் கண்ணீர்த் திரையின்றி…
ஓவென்று அழச்சொல்லும் உணர்வின்றி…
எனக்கு மட்டும் எல்லாமே எதிர்மறையாய்……
முச்சந்திகளிலும் நாற்சந்திகளிலும் உயரத்தூக்கிய கற்களுக்கு முன்னாலும் ஒளிர மறுக்கவில்லை கமெராக்கள்…
அவர்கள் கடைவாயில் கசியும் இளக்காரத்தையும் கண்களில் வழியும் வெற்றிச் செருக்கையும் ஓரமாய் தெரியும் காமத்தையும் ஒட்டுமொத்த குரூரத்தையும் ஏன்தான் உங்களால் உணரமுடியவில்லை….

மாத்தயா…யாப்பனே த?
இல்லை...,இல்லை....,நாங்கள் ஐ ரோப்பாவிலிருந்து (No..No.. We are From Europe.)

கடவுளே இப்படி ஒரு நாள் என்வாழ்வில் மீண்டும் வராமல் போகட்டும்.. வருமெனில் என் வாழ்வே இல்லாமல் போகட்டும்.

மீண்டும் ஆன்சி மானேயின் அனல் பறக்கும் பாடல்கள்….. அட்டகாசமாய்! பயணம் இன்று எப்படி இருந்தது??(How was the trip today??)  மிகச்சிறந்தது அப்பா.(Supppppeeerrrrrrrrrrrrr dad.) மிகச்சிறந்த! உண்மையில் நல்ல....(Excellent! Really nice...)  நன்றிகள் அப்பா.(Thanks dad) 

ம்ம்ம்ம்…. எனக்கும் தானடா….
வலித்தது… வார்த்தைகள் தந்த ரணம்… உள்ளம்
உள்ளவர்களுக்கு மட்டும்… போய்
வருகிறேன் என் உறவுகளே… உங்கள்
ஏக்கப்பார்வை என்னைத் தொடருவதையும்
உங்கள் பாசப்பார்வை என் பிடரியை
வருடுவதையும் கடந்து போகும் உங்கள்
சூடான மூச்சையும் என்னால் உணரமுடிகிறது…
திரும்பிப் பார்க்கவும்
திரும்பி வரவும் ஆசைதான்….. ஆனால்
இப்போதல்ல…. இன்னொரு தடவை
மனிதர்களுடன் வந்தால்….!!! வருகிறேன்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

தமிழனின் இன்றைய நிலைக்குக் காரணம்.....!

மேலைநாட்டவர் வெறும் வாணிபத்துக்காகவே கீழைநாடுகளை நாடிக்கொண்டிருந்த நாட்களில், கடல் கடந்து கொடி கட்டி ஆண்ட இனம் நம் தமிழினம்.

காம்போச(ஜ)ம்(கம்போடியா), சிறீ (ஸ்ரீ)விச(ஜ)யம்(சுமாத்திரா), சாவகம் (ஜாவா), சீயம்-மாபப்பாளம்(தாய்லாந்து), கடாரம் (மலேசியா), நக்காவரம்(நிக்கோபார் தீவுகள்), முந்நீர்ப்பழந்தீவு(மாலைதீவு) போன்ற தூரதேச நாடுகளிலெல்லாம், தமிழ் மூவேந்தரில் ஒருவரான சோழரின் புலிக்கொடி பறந்து அந்நாட்டவரெல்லாம் தமிழருக்கு திறை செலுத்தி பணிந்துநின்ற ஒரு பொற்காலம் சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது. 

அவ்வாறு சிறந்திருந்த சோழப்பேரரசு தொடர்ந்து நீடிக்காததன் காரணம், போருக்கும் ஆக்கிரமிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளித்ததும் ஏனைய தமிழரசரான சேரர்-பாண்டியருடன் ஒற்றுமையின்றி இணங்கி நடக்காமையுமே என்பது அதே சரித்திரம் நமக்கு தரும் பாடம்.

வரலாறு சுட்டிக்காட்டிய அதே தவற்றை, மீண்டும் மீண்டும் இன்று வரை தொடர்ந்து நாம் செய்துகொண்டிருப்பதுதான் மீண்டெழ முடியாத ஆழத்தில் நாம் வீழ்ந்துகிடப்பதன் காரணம்.

ஒற்றுமையின்மை…..!!!

இதைத்தவிர தமிழரைப்பிடித்த சனி வேறு எதுவுமே இல்லை. 

உயர்ந்தசாதி, தாழ்ந்தசாதி என்ற சாதிவெறிக்கொடுமைகள்…
போதாததற்கு தமிழ்நாட்டுத்தமிழன், இலங்கைத்தமிழன்…..,
அவ்வளவு ஏன், பிரதேச வாதம் அப்பப்பா…

எத்தனை பாகுபாடுகள், எத்தனை வேறுபாடுகள்!!

இந்த வேறுபாடுகள், பாகுபாடுகள், முட்டாள்தனங்கள் என்றைக்கு நீங்கி தமிழன் ஒற்றுமையுடன் தன் எல்லா சகோதரர்களுடன் பேதமின்றி ஒன்றுபட்டு வாழத்தலைப்படுகிறானோ…

அன்றைக்குத்தான் தமிழனுக்கு விமோசனம்…
அன்றைக்குத்தான் தமிழனுக்கு விடிவுகாலம்…!!!

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

உளவாளி இயந்திர மனிதன்..............!

பார்ப்தற்கு நுளம்பைப் போலவே தோன்றும் உளவாளி ரோபோக்கள்..! 


பார்ப்பதற்கு அப்படியே நுளம்பு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும். இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து தொலை கட்டுப்படுத்தல் கருவி (Remote Control Device) மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய நிழற்படக்கருவியும் (Camera) ஒலிவாங்கியையும் 
(Microphone) தன்னகத்தே கொண்டுள்ளது. 

இந்த நுளம்பு போன்ற பறக்கும் இயந்திர மனிதனை  தொலை கட்டுப்படுத்தல் கருவி மூலமாக மனிதர்கள் மீது நுளம்பைப் போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்கியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம்.

முக்கியமாக குறிப்பிட்ட ஒரு நபரை பின்தொடர்ந்து சென்று கண்காணிக்க  (Tracking) உதவிவருகின்ற RFID  நானோ தொழில்நுட்பத்தினை (Nanotechnology) இனை தோலின் மீது விட்டுச்செல்லவும் இந்த இயந்திர மனிதனால் (Robot) முடியும். சாதாரணமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரு ய(ஜ)ன்னலின் ஊடாகவே ஒருவரின் வீட்டிற்குள் பறந்து சென்று நுழையக்கூடிய ஆற்றல் இதற்குள்ளது.

அத்துடன் இது பறந்து சென்று குறிப்பிட்ட மனிதரின் ஆடையில் ஒட்டிக்கொள்வதன் மூலம் இரகசியமாக அவருடன் சேர்ந்து அவரது வீட்டிற்கே சென்று துப்பறியக்கூடிய திறமையுடையது.

மேலும் அதிதிறமை வாய்ந்த இவ்வகை இயந்திர மனிதன் இராணுவத் துறையிலும், உளவுத் துறையிலும்தான் பெரிதும் பயன்படுகின்றன.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Sunday 26 August 2012

தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள்..............!



தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.
போர்ச்சுக்கீசியர்கள் வசம் இருந்த இலங்கையை, டச்சுக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். கண்டி அரசனுக்கு ஆதரவாக இருப்பது போல் நடித்து, பிறகு அவனை ஏமாற்றி விட்டனர்.

டச்சுக்காரர்கள் வருகை

கி.பி. 1595-ம் ஆண்டு முதல், டச்சுக்காரர்கள் கீழ்த்திசை நாடுகளில் வணிகம் செய்யும் நோக்கத்தோடு கப்பல்களில் பயணம் செய்தனர். (இங்கிலாந்து நாட்டுக்கு கிழக்கே, ஜெர்மனிக்கு மேற்கே உள்ளது நெதர்லாந்து. இது, ஹாலந்து என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் டச்சுக்காரர்கள். டச்சு மொழி பேசுவதால், டச்சுக்காரர்கள் என்ற பெயர் வந்தது. இவர்களை, இலங்கையைச் சேர்ந்தவர்கள் "ஒல்லாந்தர்'' என்று குறிப்பிடுகிறார்கள்).

1602-ம் ஆண்டு, டச்சுக் கப்பல் ஒன்று மட்டக்களப்புக்கு வந்தது. அதில் இருந்த டச்சு வியாபாரிகள், கண்டி அரசனை சந்தித்து அந்தப் பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி கோரினர்.

கண்டி அரசனுக்கு போர்ச்சுக்கீசியர்கள் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. டச்சுக்காரர்களின் உதவியைப் பெற்று, போர்ச்சுக்கீசியர்களை விரட்டலாம் என்று கண்டி மன்னன் எண்ணினான்.

ஒப்பந்தம்

டச்சுக்காரர்களின் கோரிக்கைக்கு கண்டி அரசன் இணங்கி, அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான். இந்த ஒப்பந்தம் கி.பி. 1638-ம் ஆண்டில் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தப்படி, இருவரும் சேர்ந்து போர்ச்சுக்கீசியரை எதிர்த்தனர். அவர்களிடம் இருந்த பல பகுதிகளை மீட்டனர். அப்படி மீட்ட பகுதிகளை டச்சுக்காரர்கள் கண்டி அரசனிடம் கொடுக்காமல் அவனை ஏமாற்றி, தங்கள் வசம் வைத்துக் கொண்டனர்.

போர்ச்சுக்கீசியர்களுக்கும், டச்சுக்காரர்களுக்கும் பல்வேறு இடங்களில் போர் நடந்தது. அதில் டச்சுக்காரர்கள் வெற்றி பெற்று, இலங்கை முழுவதையும் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். போர்ச்சுக்கீசியர் இலங்கையை விட்டு விரட்டி அடிக்கப்பட்டனர்.இலங்கையின் பொருளாதாரம் முழுவதும் டச்சுக்காரர்களின் கைக்கு வந்தது. காப்பித் தோட்டங்களை பெரும் அளவில் ஏற்படுத்தினர்.உற்பத்தியாகும் பொருள்களில் பெரும்பாலானவற்றை அவர்களே எடுத்துக் கொண்டனர்.

தோட்டத் தொழிலாளர்

தொன்று தொட்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வியாபாரத் தொடர்பு இருந்து வந்தது. டச்சுக்காரர்களின் ஆட்சியின்போது, அந்த வியாபாரம் குறைந்து போயிற்று.இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்ய, முதன் முதலாக 10 ஆயிரம் இந்தியர்களை இலங்கைக்கு டச்சுக்காரர்கள் அழைத்து வந்தனர். அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.

தமிழர்களின் நாடு

டச்சுக்காரர்கள் அரசாண்டபோது, இலங்கைக்கு வந்திருந்த அடிரியன் ரேலண்ட் என்ற ஆராய்ச்சியாளர், தமிழ், சிங்களம், மலாய் ஆகிய மொழிகளை அறிந்தவர். அவர் எழுதிய குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:- 

"இத்தீவை விட்டுப் போவதற்கு முன் தமிழர் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் சிறிது கூறவேண்டும்.இந்தத் தீவின் பெரும் பகுதியில் தமிழர்கள் வாழுகிறார்கள். இந்தப் பகுதி கைலாய வன்னியன் என்ற மன்னனால் ஆட்சி செய்யப்படுகிறது. இங்கு வாழும் மக்கள், சிங்களரின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் அல்ல.

டச்சுக்காரர்களின் ஆட்சிக்கும் உட்பட்டவர்கள் அல்ல.கரை ஓரமாக உள்ள நிலம் அனைத்தும், இந்த மன்னனுக்கே உரித்தானது. கரை ஓரங்களில் வாழும் மக்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள். நீர்கொழும்பு பகுதிக்கு தெற்கே, தெய்வேந்திர முனைவரையுள்ள பகுதிகளில் சிங்கள மொழி பேசப்படுகிறது.'' இவ்வாறு அடிரியன் ரேலண்ட் கூறியுள்ளார். 

டச்சு ஆட்சியின்போது இலங்கை வந்த மற்றொரு ஆராய்ச்சியாளர் கிறிஸ்தோபர் சுவைட்சர். இவருடைய குறிப்புகளில் கூறப்பட்டு இருப்பதாவது:- "மட்டக்களப்பு, காலி, திருகோண மலை, மன்னார், யாழ்ப்பாணம், அரிப்பு, கற்பிட்டி, நீர்கொழும்பு முதலான பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். வன்னி நாட்டில் உள்ள தமிழர்கள், சுதந்திரமாக ஆட்சி நடத்துகிறார்கள். மற்ற பகுதிகளில் உள்ளவர்கள், டச்சுக்காரர்களின் ஆட்சியின் கீழ் உள்ளனர்.'' இவ்வாறு சுவைட்சர் கூறியுள்ளார்.


வெள்ளையர் வருகை

"வல்லவனுக்கு வல்லவன், வையகத்தில் உண்டு'' என்பது போல, டச்சுக்காரர்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வெள்ளைக்காரர்கள் (இங்கிலாந்து) இலங்கைக்கு 1795-ம் ஆண்டு மத்தியில் வந்து சேர்ந்தார்கள். 

"கிழக்கு இந்திய கம்பெனி'' என்ற பெயரில், வியாபாரம் செய்ய இந்தியாவுக்கு வந்த வெள்ளையர்கள், பற்பல சூழ்ச்சிகள் செய்து, ராஜதந்திரங்களைக் கையாண்டு ஆட்சியைப் பிடித்ததுபோல, இலங்கையிலும் வியாபாரம் செய்யவே முதலில் வந்தனர். அந்தக் காலக்கட்டத்தில் டச்சுக்காரர்கள் போதிய பலத்துடன் இல்லை.

வெள்ளையர்களிடம் பலம் வாய்ந்த ராணுவம் இருந்தது. எனவே, டச்சுக்காரர்களிடம் இருந்த பகுதிகளை அவர்கள் எளிதாக கைப்பற்றிக் கொண்டனர்.1798-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பு நகரை வெள்ளையர் கைப்பற்றியதுடன், இலங்கையில் டச்சுக்காரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday 25 August 2012

தமிழகத்தில் முத்திரைக் காசு................!


தமிழகத்தின் முத்திரைக் காசுகள் பெரும்பாலும் கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல். கி.பி 2ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத்தையும் வரலாற்றையும் நிறுவப் பயன்படுகிறது.

முதலில் இவற்றைப் போன்ற முத்திரைக் காசுகள் வட இந்தியாவில் இருந்து தமிழகம் வந்தவை என்ற கருத்து நிலவியது.

ஆனால் மகாலிங்கம் போன்றவர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதலே பாண்டியர்கள் முத்திரைக்காசுகளை வெளியிட்டுள்ளதால், இக்காசுகள் வட இந்தியா வழியே தமிழகத்துக்கு வந்தவை என்ற கருத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து வட இந்தியா வழி முத்திரைக்காசு என்ற கருதுகோள் மாறத்தொடங்கியது.

அதற்கு வழுச்சேர்க்குமாறு தமிழகத்தில் முத்திரைக் காசுகளை வெளியிட பயன்படுத்திய வார்ப்புக் கூடுகள் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

படைபலத்தில் முக்கியனாள் ஓகஸ்ட்25



ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்.ஈழத்தின் வன்னிப் பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப்பண்டாரவன்னியன் வன்னிமையின் இறுதி மன்னன். 

இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது.

அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.




முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.(இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு).

அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஓகஸ்ட் 25 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டது.




ஓகஸ்ட் 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு?அந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள்.

அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து,

அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஓகஸ்ட் 25. 

பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.

சிறிலங்காவின் அரசபடைகள் முல்லைத்தீவில் அமைத்திருந்த பெரும் படைத்தளத்தைத் தாக்கி அங்கிருந்த இரண்டு ஆட்லறிப் பீரங்கிகளைக் கைப்பற்றினர் தமிழீழ விடுதலைப் புலிகள். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதல் ஆட்லறிப்பீரங்கிகள் தமிழர் வசமானது அப்போதுதான்.

இது நடந்தது 1996 ஜூலை 18.அன்று கைப்பற்றப்பட்ட இரண்டு ஆட்லறிகளுடன் தொடங்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணி படிப்படியாக வளர்ந்து மிகப்பெரும் படையணியாக மாறி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தது.

ஆட்லறிப் பீரங்கிகளின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது. அதன்பின் வந்த போர்க்களங்களில் ஆட்லறிகள் மிகப்பெரும் வெற்றியை ஈட்டித்தந்தன.
தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட அந்த இரண்டு ஆட்லறிகளோடும் 900 எறிகணைகளோடும் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைத் தொடங்கினார்கள்.

முதற்கட்ட ஆட்லறித் தாக்குதல், ஜெயசிக்குறு தொடங்குவதற்குச் சிலநாட்களின் முன்பு வவுனியா ஜோசப் முகாம் மீது நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் இரவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் இழப்புக்களை படைத்தரப்பு மறைத்தாலும்கூட இரண்டாம் நாள் தாக்குதலில் அனைத்து எறிகணைகளும் முகாமுக்குள் வீழ்ந்தன என்பதும், படைத்தரப்புக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டதென்பதும் மறுக்க முடியாத உண்மை.

அதன்பின் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வலிந்த தாக்குதல்களில் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைப் பயன்படுத்தினார்கள். இடையில் புளுகுணாவ இராணுவ முகாமில் ஓர் ஆட்லறிப் பீரங்கியைக் கைப்பற்றினாலும்கூட, கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிய ஓயாத அலைகள்-2 நடவடிக்கை வரை, புலிகள் முல்லைத்தீவில் கைப்பற்றிய அவ்விரண்டு ஆட்லறிகளை மட்டுமே சமர்க்களங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.

விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்கு மூலகாரணம் மாவீரர் கேணல் ராயு. ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டது தொடக்கம் மிக நுணுக்கமாக அப்படையணியை வளர்த்து வந்தார்.

அவர் இறக்கும்வரை ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டே இருந்தார்.விடுதலைப்புலிகளின் போரியல் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் அறிவியல் ரீதியில் முக்கிய பணியாற்றியவர்களுள் கேணல் ராயு முக்கியமானவர்.

புலிகளின் ஆட்லறிப் படையணியானது சுயமாக வளர்ந்தது. அவர்களின் முதலாவது தாக்குதலிலேயே துல்லியத்தன்மையை நிரூபித்திருந்தார்கள். ஈழப்போரின் இறுதிநாள்வரை புலிகளின் ஆட்லறிப்படையணியின் துல்லியத்தன்மை எதிர்த்தரப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் ஆச்சரியமாகவுமே இருந்தது.

யாருடைய உதவியுமின்றி, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆட்லறிகளை வைத்துக்கொண்டு, அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட எறிகணைகளையும் வைத்துக்கொண்டு நுட்பங்களை உணர்ந்து, தாமாகவே கற்றுத் தேர்ந்து வளர்ந்ததுதான் புலிகளின் ஆட்லறிப்படையணி. இதன் பின்னணியில் கேணல் ராயுவின் உழைப்பு அபரிதமானது.




ஆட்லறிப்படையணி என்று மட்டுமன்றி, இயக்கத்தின் பல்வேறு துறைகளிலும் கேணல் ராயுவின் பங்களிப்புகள் அளவிடப்பட முடியாதவை.தொடக்க காலத்திலிருந்தே புலிகள் சுய ஆயுத உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வந்தவர்கள்.

புலிகளின் பயன்பாட்டிலிருந்த 90 சதவீதக் கண்ணிவெடிகள் அவர்களின் சொந்தத் தயாரிப்புக்கள்தாம். போராட்டத் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்து சீரான வினியோகம் உறுதிப்படுத்தப்படும்வரை அவர்கள் பயன்படுத்திய மோட்டார் எறிகணைகள்கூட சொந்த உற்பத்தியே. 

அவ்வகையில் படைக்கல உருவாக்கம், வடிவமைப்பு, உற்பத்தி என்பவற்றில் கேணல் ராயுவின் பங்களிப்பு நிறையவே உள்ளது. புலிகளின் பொறியியற்றுறைக்குப் பொறுப்பாக இருந்து பணியாற்றினார். கணிணி நுட்பப்பிரிவு, தமிழாக்கப்பிரிவு, திரைப்பட மொழிபெயர்ப்புப் பிரிவு என்பவை உட்பட அறிவியல் சார்ந்த துறைகளுக்குப் பொறுப்பாக இருந்தார்.

இயக்கத்தின் முக்கியமான வெடிமருந்து நிபுணராக இவரே விளங்கினார். கடற்கரும்புலித் தாக்குதல்கள், தரைக்கரும்புலித் தாக்குதல்கள், மறைமுகமான தாக்குதல்கள் என்பவற்றில் இவரின் வெடிமருந்து நிபுணத்துவம் பங்காற்றியிருந்தன.




விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியாக ‘சிறுத்தைகள்’ என்ற பெயரில் பெரும்படையொன்று உருவாக்கப்பட்டது. வருடக்கணக்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அப்படையணி உருவானது. கடற்சிறுத்தைகள் என்ற பெயரில் கடற்பிரிவொன்றும் இப்படையணியின் அங்கமாக வடிவம் பெற்றது. 

ஒட்டுமொத்தச் சிறுத்தைப்படையணி உருவாக்கமும் முழுமையாக கேணல் ராயுவின் தலைமையின் கீழ்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.மிகச்சிறந்த அறிவியலாளன், இயக்கத்தின் நுட்ப வளர்ச்சிக்குரிய ஆணிவேர், கேணல் ராயு புற்றுநோய்க்கு இரையாகிச் சாவடைந்தார்.




யுத்தம் ஓய்ந்து புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு சில மாதங்களில் அவர் இறந்தார்.இயக்கத்தின் ஆட்லறிப்படைப் பிரிவின் உருவாக்கம், வளர்ச்சி என்பவற்றில் முன்னின்றுழைத்த கேணல் ராயு, 2002 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் நாள்.

ஆம்! பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் ஆங்கிலேயரின் பீரங்கிகளைக் கைப்பற்றி வெற்றிகொண்ட நினைவுநாளில்தான் – சாவடைந்தார்.

நன்றிகள் பல.

Friday 24 August 2012

தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம்...........!

தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலியே முதற்காரணம்!

மொழி என்பது மனித வளர்ச்சியின் விரிவில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது. ஆதிமனிதன் தன்மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றைய மனிதர்களுடன் சைகையால் பரிமாறிக் கொண்டான். அதனால் சைகைமொழி பிறந்தது. சைகைமொழியும் புரியாதவர்களுக்கு தனது எண்ணக் கருத்துக்களை விளக்குவதற்கு உருவங்களைக் கீறியே புரியவைத்தான்.

அதனால் உலகிலுள்ள பண்டைய மொழிகளின் எழுத்துக்கள் யாவையுமே உருவங்களால் கீறிய படங்களிலிருந்தே முகிழ்ந்த வையாகும். பண்டைய தமிழரும் தமது எண்ணங்களை உருவங்களாகவே எழுதினர். தமிழ் இலக்கணநூலான “யாப்பெருங்கல விருத்தியும்” படவெழுத்தை அதாவது உருவெழுத்தைப் பற்றிக் கூறுகின்றது.

பண்டைய தமிழர் எழுதிய உருவங்களைக் கொண்டு அவற்றின் பண்பு கெடாது சங்ககாலத்திற்கு முன் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் எழுத்தின் வரிவடிவங்களை உருவாக்கினர். அவ்வரிவடிவங்கள் அவர்களின் எண்ணக் கருத்துக்களை மிகஇலகுவாக எழுத உதவின.

அந்த வரிவடிவங்கள் ஒலிவடிவத்தையும் பெற்றிருந்தன. சங்ககாலப்புலவர்கள் இந்த ஒலிவடிவத்திற்கு இந்த வரிவடிவம் என்று அவ்வரிவடிவங்களை வரையறுத்தனர். அதன் காரணமாக அந்த வரியெழுத்துக்களை ஒலிஎழுத்துக்கள் என்றும் நம் முன்னோர்கள் அழைத்திருக்கின்றனர்.

அவ்வுண்மையை கி.பி 13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட நன்னூல் காண்டிகையுரை எனும் தமிழ்மொழி இலக்கணநூல் “மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து” எனச்சொல்வதால் நாம் அறியலாம். இதிலே வரும் “அணுத்திரள் ஒலி எழுத்து” எனும் சொற்பிரயோகம் கிடைத்தற்கரியதொன்றாகும்.

இந்த நன்னூற்சூத்திரம் தமிழ் எழுத்துக்களின் பிறப்பிற்கு விஞ்ஞான முறையில் எமக்கு விளக்கம் தருகின்றது. அதாவது தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலியே முதற்காரணம் என்கிறது. தமிழருக்கு அறிவியல் தெரியுமா? எனக்கேட்கும் தமிழர்கள் கொஞ்சம் நிதானமாக இச்சூத்திரத்தை படித்து அறிதல் நன்று.

இடிமுழக்கம், பெய்யும்மழை, வீசும்காற்று, சீறும் பாம்பு, கூவும்குயிலென உலகில் எத்தனையோ வகையான ஒலிகள் இருக்கின்றன. விஞ்ஞான ரீதியாகப் பார்ப்போமேயானால் இந்த எல்லாவித ஒலிகளையும் நாம் வேறுபடுத்திக் கேட்பதற்கு அணுத்திரள்களே காரணமாகும்.

காற்றில் ஏற்படுத்தப்படும் அதிர்வின் போது அணுத்திரள்களின் அசைவினால் ஒலியலைகள் தோன்றுகின்றன. இந்த ஒலியலைகளில் உருவாகும் மிகநுண்ணிய வித்தியாசங்களால் நாம் வெவ்வேறுவகையான ஒலிகளைக் கேட்க முடிகின்றது. மொழிகளிலுள்ள எழுத்துக்களின் ஒலிவேறுபாட்டிற்கு முக்கிய காரணமாயிருப்பது அணுத்திரள்களேயாகும்.

மேலே குறிப்பிட்டவை போன்ற இயற்கை ஒலிகளோ அன்றேல் பட்டாசு வெடித்தல், கை தட்டல் போன்ற செயற்கை ஒலிகளோ இன்றும் அறிவியல் மூலம் மொழியாக்கப்படவில்லை.

நன்னூல் சொல்வது போல் மொழிக்கு முதற்காரணமாக இருப்பது எழுத்துக்களின் ஒலியே. அந்த எழுத்துக்களின் ஒலிக்குக் காரணம் அணுத்திரளே. அதாவது அணுக்கூட்டத்தின் சேர்க்கையால் எழுத்தின் ஒலி உண்டாகி அவற்றின் சேர்க்கையால் மொழி பிறக்கின்றது.

இந்த அறிவியல் கருத்தைச் சொல்லும் நன்னூலே, இன்னெரு சூத்திரத்தில் “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என தமிழ் எழுத்தின் வடிவம் பற்றிக் கூறுகின்றது. பண்டைக்கால (தொல்லை) வடிவத்துடனேயே எழுத்துக்கள் யாவும் இருந்தன எனச் சொல்வதால் எழுத்துக்கு வடிவத்தைக் கொடுத்த அணுத்திரள் ஒலி எழுத்தும் பழைமையானது என்பது பெறப்படும். 

தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்களின் பிறப்பின் இயல்பை “உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலையி பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற்றமைய….” எனக் கூறியுள்ளார். எழுத்துக்கள் யாவுமே தொப்பூழில் இருந்து உண்டாகும் காற்றில் தோன்றி தலையிலும் தொண்டையிலும் நெஞ்சிலும் நின்று பல், இதழ், அண்ணம், நாக்கு போன்ற உறுப்போடு உறுப்பு சேர்வதால் பிறக்குமாம். தொடர்ந்து உயிரெழுத்துக்களின் பிறப்புப்பற்றிக் கூறுமிடத்தில் “அவ்வழி பன்னீருயிரும் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

மேலே சொன்னபடி அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்னும் பன்னிரெண்டு உயிரெழுத்தும் தொண்டையில் நின்ற காற்றால் ஒலியைப் பெறுகின்றதாம். இவ்விதம் தமிழ் எழுத்துக்களின் பிறப்பை ஒலிஎழுத்துக்களின் வாயிலாக மிகவிரிவாக தொல்காப்பியம் கூறுகின்றது. 

ஒலியெழுத்து வரியெழுத்தாக மாறிய பின்னர் பல மாற்றங்களுக்கு உட்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளது. உதாரணமாக மலை என்பதைக் குறிக்கும் “ΛΛΛ” இந்த உருவெழுத்தானது இப்படி வரியெழுத்தாக மாறி பலப் பல நிலைகளைக் கடந்து வட்டெழுத்தாக வளர்ந்து இன்று நாம் எழுதும் “∆” என்னும் எழுத்தாக வந்துள்ளது.

குகைகளிலும் பாறைகளிலும் எழுதிவந்த உருவெழுத்தை காலப்போக்கில் தேவை கருதி களிமண் தட்டுகளிலும் மரப்பட்டைகளிலும் எழுதினர். இப்படி களிமண்தட்டுகளிலும் மரப்பட்டைகளிலும் மாவுக்கல்லிலும் எழுதியவற்றை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வது மிகக்கடினமான காரியமாக இருந்தது. தமிழர்களின் கல்வியறிவு மேலும் மேலும் வளர எழுதுவதற்கான தேவையும் அதிகரித்தது. அத்துடன் கல்வியறிவு அரசன் தொடக்கம் சாதாரண குடிமகன் வரை பெரும் நகரமாயினும் குக்கிராமமாயினும் எங்குமே பரவியிருந்தது. இந்த உண்மையை சங்ககாலப் புலவர்கள் பாடிய சங்கப்பாடல்களால் அறியலாம்.

இவ்வாறு தமிழர்கள் கல்வியில் மிகஉன்னத நிலை அடைந்ததால் தாம் எழுதியவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் சங்கப் புலவர்களின் அவைக்கும், அரசசபைகளுக்கும் எடுத்துச்சென்று பரிசுபெற ஏதுவாக பனை ஓலையில் எழுதத் தொடங்கினர். நாம் புத்தகங்களை எடுத்துச் செல்வது போல் அவர்கள் ஓலைச் சுவடிகளை எடுத்துச் சென்றார்கள்.

களிமண்தட்டு, செம்புத்தகடு, போன்றவற்றில் கோணல்களாகவும் சதுரங்களாகவும் எழுதிய வரியெழுத்தை பனை யோலையில் எழுத்தாணி கொண்டு எழுதும் போது ஓலை கிழிந்தது. பனைஓலை மிக இலகுவாகக் கிடைத்தபோதும் அதில் எழுதுவது மிகக்கடினமாக இருப்பதைக் கண்டனர். 

எழுதப்படும் பொருளைப் பொறுத்தும் எழுத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டனர். பனையோலையில் எழுதுவதற்கு ஏற்றவாறு எழுத்தை மாற்றி அமைத்தனர். அப்படி அவர்கள் மாற்றியமைத்த எழுத்தை நாம் வட்டெழுத்து என அழைக்கின்றோம். பண்டைய தமிழர்கள் அவ்எழுத்தை கி பி 2ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரை எழுதி வந்துள்ளனர். அதற்கான கல்வெட்டாதாரங்கள் நிறையவே கிடைத்துள்ளன. பண்டைய நாணயங்கள் நடுக்கற்கள், பானையோடுகள், ஏட்டுச்சுவடிகள், கோயிற்சுவர்கள் யாவற்றிலும் இவ்வட்டெழுத்து காணப்படுகின்றது.

கிரே என்வர் மாலைதீவின் வட்டெழுத்தை பண்டைய தமிழரின் வட்டெழுத்தை தழுவிய அல்லது சிறிது மாற்றியமைக்கப்பட்ட எழுத்து எனக்கூறியுள்ளார்.

பண்டைய தமிழ் வட்டெழுத்தின் தாக்கத்தை மாலைதீவு மட்டும் அல்லாமல் பர்மா, கம்போடியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, யாவா போன்ற உலகின் பல நாடுகளின் கல்வெட்டுகளிலும் காணலாம். 

வட்டெழுத்தின் காலத்திற்கு முன்பிருந்தே சங்கத்தமிழர் தாம் எழுதிய எழுத்தை இரண்டு வகையாகப் பிரித்து பெயரிட்டு அழைத்தனர்

1. கோலெழுத்து
2. கண்ணெழுத்து.

கோலால் எழுதிய எழுத்தை கோலெழுத்து என்றனர். அதாவது வண்ணமையில் தோய்த்த தூரிகை, எழுதுகோல் போன்றவற்றைக் கொண்டு துணியின் மேலோ தோலின் மேலோ எழுதுவதை கோலெழுத்து என்றழைத்தனர்.

இரண்டாயிர வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழர்கள் எழுதுகோல் பாவித்து எழுதி வந்திருக்கிறார்கள் என்பதை “எழுதும்கால் கோல் காணாக் கண்ணேபோல்” எனும் திருக்குறள் அடி எமக்குச் சொல்கிறது. மையைத் தொட்டு எழுதும் பேனாவை நாமும் எழுதுகோல் என்றுதானே அழைக்கிறோம். 

கோலால் மையைத்தொட்டு எழுதும் பொருளின் மேற்பரப்பில் எழுதாது அதன் மேற்பரப்பை உட்குழிந்து எழுதிய எழுத்தே கண்ணெழுத்து. (கண் என்பதற்கு குழி என்ற கருத்தும் இருக்கின்றது.)

ஊருக்குள் புதிதாக வருபவர்கள் கண்ணெழுத்தால் எழுதிய தமது பெயர் பொறித்த பொதிகளைக் கொண்டு திரிவார்கள் என்றும் கண்ணெழுத்தை எழுதியவர்களை கண்ணெழுத்தாளர் எனவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. “வம்பமாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” இன்றும் நாம் பிரயாணம் செய்யும் பொழுது பெட்டிகள் மாறாமல் இருக்க எமது பெயரும் முகவரியும் எழுதுகிறோம் தானே! அதுபோல் அன்றும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Wednesday 22 August 2012

சயாம் மரண ரயில்..............!

சயாம் மரண ரயில் - மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு..!

எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை ?
இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை?
ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ?
இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை ?

முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் யப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாசி(ஜி) காங்கிரசை(ஸை) விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார்.

அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது, அப்போது ய(ஜ)ப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாசி(ஜி). இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது யப்பான்.

இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை யப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டு வருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது. அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.

அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க்கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் அவுசு (ஸ்)திரேலிய படைவீரர்களை பயன்படுத்திக் கொண்டனர். சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர்.

இதற்காக பெருமளவில் ஆசியதொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது.

ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்த, ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை யப்பானின் கங்காணியர்கள். ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.

போரினால் கடும் பஞ்சம் வேறு. உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம். ஒரு இலட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்களோ “The Bridge on the River Kwai" என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டனர். அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன.

நம் பாடு தான் திண்டாட்டம். வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன. எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993’ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் ”சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்”. இதை தமிழோசை பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது. இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு தான் இதைப் பதிவு செய்ய வேண்டுமென ஒர் உந்துதல் ஏற்பட்டது.

உண்மையைச் சொன்னால் இதற்கு முன், இதில் குறிபிடப்பட்டுள்ள ஒரு விவரமும் நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது.

ய(ஜ)ப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாசி(ஜி) இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது, படிக்க படிக்க அது எவ்வளவு உண்மை என உணரமுடிகிறது.

அந்த களத்தில் பஞ்சத்தினால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமலும், தன் தந்தையை கண்டுபிடித்துவிடலாம் எனற நோக்கத்திலும் தானே சென்று இணையும் மாயா என்ற ஒரு இளைஞன் சுற்றியே கதையை சுழல விட்டு, தான் சொல்ல வந்த உண்மைகளை கதையெங்கும் தெளித்திருக்கிறார் ஆசிரியர், அதனூடே ஒரு மெல்லிய காதல் கதையையும் சேர்த்து ஒரு சுவாரசி(ஸ்)யம் சேர்க்க முனைந்திருக்கிறார் ( நமக்கு தான் எல்லாவற்றிலும் தேவைப்படுமே!!)..

மரவள்ளிகிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின் உணவு. உடம்பு முடியாவிட்டாலோ, விச(ஷ)ப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை. ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான், முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டுவிடுவார்கள்.

கும்பல் கும்பலாய் வயிற்றுபோக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான். அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்துவிடுவார்களாம்.

எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல. குற்றுயிரும் குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம். மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும். இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது.

ஆங்காங்கே ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்வுகள், குடும்பத்தை பற்றிய கவலைகள், தாங்களும் உயிரோடு அங்கிருந்து பிழைப்போமா என கேள்விகள், மாயாவின் காதல் கதை, அவனுடன், உடன் பிறந்தவனைபோல உறவாடும் வேலுவின் நட்பு, முடிவை ஒட்டி அவன் மரணம் என உணர்வுப்பூர்வமாய் பயணிக்கிறது கதை.

இரண்டு பெரிய குன்றுகளை வெட்டி சாய்த்து, இரும்புப் பாதை அமைக்க உதவிய நம் மக்கள், ஆற்றுப் பாலத்திற்கும் மலைக்கும் நடுவில், தூண்கள் கட்ட முடியாமல், ராட்சத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட தொங்கும் பாலத்திலும் தண்டவாளத்தில் உயிரைப் பிடித்துக் கொண்டு பயணிப்பதைப் படிக்கும் போது, இலகுவாகப் பயம் பற்றிக் கொள்கிறது.

அங்கேயும் சந்தடி சாக்கில் சின்ன சின்ன பலசரக்குகளை வாங்கி முகாம்களின் உள்ளேயே வியாபாரம் பண்ணிய நமது மக்களின் திறமையை நினைத்து பெருமைப்படுவதா வேதனைப்படுவதா எனப் புரியவில்லை.

இத்தனை வேதனைகளிலிருந்தும் மீண்டு வீடு திரும்பியவர்களில் சிலர், தங்கள் குடும்பம் சிதைந்ததைக் கண்டு, மறுபடியும் சயாமுக்கே சென்றிருக்கின்றனர் என்பதும் மிகுந்த வேதனைக்குரியது. சான்றுகளுக்கும் மேல்விவரங்களுக்கும் கூகிள்(Google) செய்ததில், சமீபமாக இன்னொரு புத்தகமும், அதன் வரலாறை அப்படியே சொல்ல வந்திருப்பது தெரிய வந்தது. அதற்கான தகவல்களும் சுட்டிகளும் முடிவில்.

இந்த பதிவின் மூலமாக உலகத்தமிழர்கள் அத்தனை பேரின் சார்பாகவும், இந்த களத்தில் உயிர்துறந்த அப்பாவித் தமிழர்களுக்கும் பிற நாட்டவர்க்கும் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். மேலும் புலம் பெயர்ந்து தங்கள் முகம் தொலைத்து முகவரி இழந்து தவிக்கும் அத்தனை தமிழருக்கும் இப்பதிவினை அர்ப்பணிக்கிறேன்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

மும்முடிச் சோழ மண்டலம்'..........!


தமிழ்நாட்டின் வரலாற்றில் பொற்காலத்தைப் படைத்தவர்கள் ராஜராஜசோழனும் அவன் மகன் ராசே(ஜே)ந்திரசோழனும் ஆவார்கள். இவர்கள் ஏறத்தாழ இலங்கையை முற்றிலுமாக வென்று, சோழ ராச்சியத்தின் ஒரு பகுதியாக ஆக்கினார்கள். கி.பி. 982-ம் ஆண்டில், ஐந்தாம் மகிந்தன் என்ற சிங்கள அரசன் இலங்கையை ஆண்டு வந்தான். அவன், சோழர்களுக்கு எதிரிகளான பாண்டியனுக்கும், சேரனுக்கும் உதவி செய்து வந்தான்.

படையெடுப்பு

எனவே, இலங்கை மீது படையெடுக்க சோழமன் னன் ராசராசசோழன் முடிவு செய்தார். தன் மகன் ராசேந்திர சோழன் தலைமையில் ஒருபெரிய கப்பல் படையை அனுப்பி வைத்தார்.

தமிழ்ப் போர் வீரர்களுடன் கப்பல்கள் இலங்கையை சென்றடைந்தன. போர்க் கப்பல்களைப் பார்த்து சிங்களர்கள் மிரண்டனர். சோழர் படையை எதிர்க்க துணிவின்றி, மன்னன் மகிந்தன் இலங்கையின் இன்னொரு பகுதியான ரோகண நாட்டிற்கு தப்பி ஓடி விட்டான்.

சோழர் படை, இலங்கையின் வடபகுதியை கைப்பற்றிக் கொண்டது. அந்தப் பகுதிக்கு `மும்முடிச் சோழ மண்டலம்' என்ற பெயர் சூட்டப்பட்டது. தலைநகரமான அனுராதபுரம் அழிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக பொலனறுவா நகரம் புதிய தலைநகரம் ஆக்கப்பட்டது. அதற்கு `சனநாதமங்கலம்' என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.

சிங்கள மன்னனின் கருவூலத்தில் இருந்த நகைகள், வைர மாலைகள், அரசஅணிகலன்கள் முதலியவை கைப்பற்றப்பட்டன. உடைக்க முடியாத வாள் ஒன்று சோழர் வசமாகியது. இரண்டாவது படையெடுப்பு ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிய மகிந்தன், சும்மா இருக்கவில்லை. சோழருக்கு எதிராக பெரும்படை ஒன்றை திரட்டினான். இலங்கையில் சோழர்கள் கைப்பற்றிய பகுதியை மீட்க போர் தொடுத்தான்.

இதுபற்றி சோழ மன்னன் ராசேந்திரனுக்குத் தெரிந்தது. அவன் கி.பி. 1017-ம் ஆண்டில் மீண்டும் இலங்கை மீது படையெடுத்தான். இரு தரப்புக்கும் இடையே பெரும் போர் நடந்தது. சோழ படைகளின் தாக்குதலை, மகிந்தன் படைகளால் சமாளிக்க முடியவில்லை.

போரில் சோழர் படை வென்றது. சிங்களர் படை தோற்றது. மகிந்தனின் மணிமுடியும், அரசியின் மகுடமும் ராசேந்திரனின் வசம் ஆகியது. அதுமட்டுமின்றி, 100 ஆண்டுகளுக்கு முன்னதாக, சிங்கள அரசனிடம் பாண்டிய மன்னன் பாதுகாப்பாக கொடுத்து வைத்திருந்த மணிமகுடத்தையும் ராசேந்திர சோழன் கைப்பற்றினான்.

சிறையில் மகிந்தன்

போரில் தோற்றுப்போன மகிந்தன், சோழ வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு ராசேந்திர சோழன் முன்பாக நிறுத்தப்பட்டான். ராசேந்திரசோழன் தமிழ்நாட்டுக்கு திரும்பும்போது, மகிந்தனும் கொண்டு செல்லப்பட்டான். அங்கு சோழநாட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 12 ஆண்டு காலம் சிறையில் இருந்த மகிந்தன், சிறையிலேயே இறந்து போனான். மேற்கண்ட தகவல்கள், திருவாலங்காட்டு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ராசேந்திர சோழன் வெற்றியை குறிக்கும் கல்வெட்டு ஒன்று, கொழும்பு நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இன்னும் உள்ளது. மகிந்தனை ராசேந்திரசோழன் முறியடித்தது பற்றி, சிங்களர்களின் வரலாற்று நூலான "சூளவம்ச''த்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிந்தனின் மகன்

ராசேந்திர சோழனால் சிறை பிடிக்கப்பட்ட மகிந்தனுக்கு, காசிபன் என்ற மகன் இருந்தான். போர் நடந்தபோது அவனுக்கு வயது 12. அவனை சிங்களர்கள் ரகசியமாக வளர்த்து வந்தனர். சோழ நாட்டு சிறையில் மகிந்தன் இறந்த பிறகு, காசிபனை தங்கள் மன்னனாக சிங்களர்கள் அறிவித்தனர். சோழர்களை எதிர்க்க அவன் பெரும் படை திரட்டினான்.
இதை அறிந்த ராசேந்திர சோழன், தன் மகன் இராசாதிராசன் தலைமையில் ஒரு படையை அனுப்பினான். கி.பி.1041-ல் நடைபெற்ற இந்தப் போரில் காசிபன் மாண்டான். சிங்களப்படை தோற்றுப்போய், சிதறி ஓடிற்று. அதன்பின், கீர்த்தி என்ற சிங்கள மன்னன் சோழர்களுடன் போர் புரிந்து தோற்றுப் போனான். அதனால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் அவன் தற்கொலை செய்து கொண்டான்.

பராக்கிரமபாண்டியன்

பிற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலக்கட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர்.

கி.பி. 1255-ம் ஆண்டு பட்டத்திற்கு வந்த ச(ஜ)டாவர்மன் வீரபாண்டியன், இலங்கை மீது படையெடுத்து வெற்றி கண்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (கி.பி.1422-61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பல முறை வென்றதாக கல் வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

பிற்காலத்தில், விச(ஜ)யநகர அரசர்களும் இலங்கையில் போரிட்டு சிங்களரை வெற்றி கொண்டுள்ளனர்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Monday 20 August 2012

தமிழர்களை அழித்தவனை தமிழகம் கொண்டாடுவதா .....!


தமிழ் ஈழத்தில் தமிழர்கள் அழிவிற்குக் காரணகர்த்தாவான ராசீவ்காந்திக்கு  பிறந்தநாள் கொண்டாட்டமா?

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday 18 August 2012

11ஆம் 12ஆம் நூற்றாண்டு...............!


சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் பொலன்னறுவையிலுள்ள சிவன், விசு(ஷ்)ணு கோயில்களில் தமிழ்க் கல்வெட்டுகள் புதிதாகக் கண்டுபிடிப்பு 

பொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களிலும் நான்காம் விசு(ஷ்)ணு கோயிலிலும் இதுவரை வாசிக்கப்படாத 30 க்கும் மேற்பட்ட தமிழ்க்கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தமிழர் வரலாற்றிலும் குறிப்பாக இலங்கை சைவசமய வரலாற்றிலும் மிகப் பிரதானமான ஆதாரங்களாக விளங்கும் இக் கல்வெட்டுகளை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் கண்டுபிடித்துள்ளார்.

இக்கண்டுபிடிப்புக் குறித்து பேராசிரியர் சி. பத்மநாதன் வீரகேசரிக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது பின்வருமாறு கூறினார்.

”பொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களில் கருங்கல் இடிபாடுகளைக் கூர்மையாகக் கவனித்த பொழுது வியப்புக்குரிய சில விடயங்களை அறியமுடிந்தது.

இந்தக் கோயில்கள் பாதுகாப்பாக உள்ள பொலன்னறுவைத் தொல்லியல் சின்ன வலயங்களுக்கு மிகத் தூரத்தில், கி(ஹி)ங்குராங்கொட வீதியில் 2 கி.மீ தொலைவிலுள்ளது.100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீதி மாட்டுவண்டிப் பாதையாக இருந்தது. இம்மூன்று கோயில்களிலும் பெருந்தொகையான தமிழ்ச்சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. 

மூன்றாம் சிவாலயம்

மூன்றாம் சிவாலயத்தைப் பொறுத்தவரையில் அதனை அகழ்வுசெய்து கண்டறிந்தவர்கள் சாசனங்களை அவதானிக்கவில்லை. இந்தப்பணி ஏறக்குறைய 106 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது. கோயிலைப்பற்றிய அகழ்வாய்வு அறிக்கையிலும் அங்குள்ள சாசனங்கள் பற்றி எதுவித குறிப்புகளும் காணப்படவில்லை.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தொல்பொருளியல் திணைக்களம் இக்கோயில் பற்றி புதிதாக எந்தப் பணியினையும் நிறைவேற்றவில்லை. சில தினங்களுக்கு முன்பு இக்கோயில் உடைக்கப்பட்டு, சேதமாக்கப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. நேரே பார்த்தபொழுது கட்டிடத்தின் எந்தப் பகுதியாவது சேதமடையவில்லை என்பது உறுதியாகியது.

ஆனால் கருவறையிலுள்ள உடையாரைப் பெயர்த்தெடுத்து கீழே நிலத்தை மிக ஆழமாகத் தோண்டியுள்ளனர். இது புதையல் தேடுவோரின் வேலை போலவே தெரிகின்றது. அதிச்(க்ஷ்)டானத்தில் குமுதப்படையில் (வாசல் முகப்பில்) கோயிலின் மூன்று பக்கங்களில் சாசன வாசகங்கள் மிகச் சிறிய எழுத்துக்களில் வெட்டப்பட்டுள்ளன. இவை மிகத் தெளிவாகத் தெரிகின்றன. 

மேலும், இக்கோயிலின் வாசற்படியிலும் முகமண்டபத்து நுழைவாயிற் கதவின் மேலமைந்த உத்திரத்திலும் இரண்டு வரியில் எழுதப்பட்ட சாசனம் தெளிவாகத் தெரிகின்றது. கோயிலின் தெற்குப் பக்கத்தில் துண்டங்களாகக் காணப்படும் கருங்கற்கள் பலவற்றில் எழுத்துகள் தெரிகின்றன.

இக்கோயில் கட்டட அமைப்பில் வானவன் மாதேவி ஈசு(ஸ்)வரத்தை முன்மாதிரியாகக் கொண்டது. இது பாதுகாக்கப்படவேண்டிய ஓர் அரும் தொல்பொருட்சின்னம். அங்குள்ள சாசனங்களைப் படித்து வெளியிடுவதற்கான முயற்சிகள் மிகவிரைவில் நடைபெறவேண்டும்.

ஐந்தாம் சிவாலயம்

மூன்றாம் சிவாலயத்திற்கு எதிர்ப்புறத்தில் தெருவின் மறுபக்கத்தில் அமைந்திருப்பது ஐந்தாம் சிவாலயத்தின் அழிபாடுகள். இதுவே பொலன்னறுவைக்காலத்து இந்துக் கோயில்களில் மிகவும் பெரியது. செங்கற்கட்டுமானம். வழமையாகவுள்ள கட்டடங்களுக்கு மேலாக மூன்று பெரும் மண்டபங்களும் அமைந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் முன்னால் அமைந்த மண்டபம் மிகவும் அகலமானது.

கோயிலில் மிகவும் உயரமான தூண்கள் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்பவற்றின் நுழைவாயிலில் அமைந்த தூண்களிலே சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. மண்டபம் ஒன்றிலே உடைந்த சாசனம் எழுதிய பல கற்கள் காணப்படுகின்றன.

இவை ஆயிரம் ஆண்டுகளாக மழையினாலும் வேறு இயற்கை சக்திகளினாலும் பாதிக்கப்பட்டதால் அவற்றிலே பெருமளவிற்கு எழுத்துகள் சிதைந்துவிட்டன. ஆயினும் மிக நுட்பமான முறையில் படியெடுப்பதன் மூலமும் படம் எடுப்பதன் மூலமும் அவற்றின் சில பகுதிகளையேனும் மீட்டுக்கொள்ள முடியும்.

விசு(ஷ்)ணு கோயில்

அருகிலுள்ள விசு(ஷ்)ணு கோயிலில் ஏனைய இரண்டு கோயில்களைக் காட்டிலும் கூடுதலான அளவிலே கல்வெட்டுகள் காணப்படுகின்றன. நுழைவாசற்படி கருவறைப்படி ஆகியவற்றிலும் பல தூண்களிலும் சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. அண்மைக்காலத்திலே சேதமடைந்துள்ள கருவறைப் படியிற் சதுரவடிவில் அமைந்த மிக நீளமான தூண்களை அடுக்கிவைத்துள்ளனர்.

மேற்புறத்திலுள்ளவற்றிலே சாசனங்கள் தெளிவாகத் தெரிகின்றன. இந்தக் கோயில் வளாகத்தில் பல இடங்களில் சாசனம் எழுதிய, துண்டமான கற்கள் காணப்படுகின்றன.

ஓர் அருங்காட்சியகத்திலே, தூண்சாலையிலே நிரைநிரையாக பல வரிசைகளில் நிறுத்தி வைக்கக்கூடிய சாசனம் எழுதிய தூண்கள் ஐந்தாம் சிவாலயத்திலும் அதனை அடுத்து இருக்கும் விசுணு கோயிலிலும் காணப்படுகின்றன.

இச்சாசனங்கள் அனைத்தும் 11ஆம் 12ஆம் நூற்றாண்டுகளுக்குரியவை. சமய வழிபாடுகள், சமூகநிலைகள் என்பன பற்றி இவற்றிலே மிகவும் பயனுடைய விபரங்கள் கிடைக்கும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை.

பொலன்னறுவை நகரத்து மறைந்துபோன வரலாற்றின் ஓர் அத்தியாயத்தை இவற்றின் மூலம் மீட்டுக்கொள்ள முடியும் என்பது உறுதியான நம்பிக்கையாகும்.” எனப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் உறுதிபடத் தெரிவித்தார்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.


Tuesday 7 August 2012

இந்தியா முழுவதும் தமிழே.................!

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே! பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான்.










தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்  திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.

1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன என்று ஆரம்பித்தார் அவர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன.

அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன.

கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன.

மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.

அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம்.

அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம். அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம்.

அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்றவர், அடுத்ததாக... தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை ‘தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். 

அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.

அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார்.

அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள்.

அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன. ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார். தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள்.

அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன். வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. 

ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த "பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை". 

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. "தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான்".

அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது."இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள்".

ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப் படாததற்கு இதுவே காரணம்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.