Wednesday 31 October 2012

தமிழன் என்ற........!

தமிழன் என்ற ”தேசிய” இனமும் சுய நிர்ணயமும்.


தமிழன் யார் அல்லது யாரெல்லாம் தமிழர்கள் என்று அப்பப்போ கருத்துக்களங்களில், விவாதப்பொதுவெளிகளில் கேள்விகளும் கிண்டல்களும் வெளிப்படுகின்றன இப்போதெல்லாம். தமிழன் யாரென்ற கேள்விக்கு விஞ்ஞான, சமூக அரசியல் அடிப்படையில் பதில் சொல்ல வேண்டிய காலமும் கடந்து பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தாயிற்று.

மனித உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் எல்லா மக்களையும் போல் மனிதகுரங்கிலிருந்து வந்தவன் தான் தமிழனும். சமூக அரசியல் களங்களில் தமிழன் குறித்த கேள்விகளுக்கும், கிண்டல்களுக்கும் பதில், தமிழர் என்பது ஒரு தேசிய இனம். ஒரு தேசம். இதை ஏற்பதும் மறுப்பதும் உலகமயமாக்கலில் அவரவர் அரசியல் சார்பு நிலை ஏற்பாடுகளைப் பொறுத்தது. ஆனால், தமிழன் ஓர் தேசிய இனம். இது தான் சத்தியமான, நிச்சயமான உண்மை.

அப்படியே இதிலிருந்து அடுத்த கேள்வி வரும் சிலருக்கு. அப்படியென்றால், தேசிய இனம் என்றால் என்ன என்று! தேசிய இனம் என்பது ஒரு இனக்குழு மூலத்திலிருந்து தேசியம் என்பதன் மூலக்கூறுகளான ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி, பொதுமொழி, பொதுப்பண்பாடு இவற்றின் அடிப்படையில் நிலையாய் வாழும் ஒர் சமூகம். தமிழ் நாட்டின் தமிழ் தேசக் குடியரசு விவாதத்தில் பெ.மணியரசன் இனம் என்பது மரபு இனம் (Race), தேசிய இனம் (Nationality) என்று விளக்குகிறார்.

மரபு இனம் என்பது பல்வேறு தேசிய இனங்களில் கலக்கும் வாய்ப்பும் உண்டு. அதற்கு உதாரணம், ஆரியர் என்கிற மரபினம் அயிரோப்பிய, இந்திய தேசிய இனங்களில் கலத்துள்ளமை என்கிறார். அதே போல் இந்தியாவின், பாகிசு(ஸ்)தானின் பல பழங்குடிகளிலும் தேசிய இனங்களிலும் தமிழ் மரபினம் கலந்துள்ளது. (தமிழ்த்தேச குடியரசு-ஒரு விவாதம், பெ. மணியரசன்).

பெ. மணியரசன் ஆரியர்கள் பற்றி கருத்து சொன்னார் என்றால் அது தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொள்ளாதோரால் மறுத்துரைக்கப்படலாம். இதையே தமிழ் தேசியத்துக்கும் பெ. மணியரசனுக்கும் எந்த சம்பந்தமுமில்லாத பிரான்சு(ஸ்)சிசு(ஸ்) புக்குயாமா தன் அரசியல் அமைப்பின் தோற்றம் (The Origins of Political Order) என்கிற புத்தகத்தில் இந்தோ-ஆரியர் வருகையோடு இந்திய அரசியல் எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதை விளக்குகிறார். 

அதில் அவர் குறிப்பி்டுவது இந்தோ-ஆரியர்கள் ரசியாவின் தெற்குப்பகுதியிலுள்ள கருங்கடல் மற்றும் காசி(ஸ்)பியன் கடலுக்கு (Black and Caspian Seas);இடைப்பட்ட ஒரு பகுதியிலிருந்து இந்தியா வந்தவர்கள் என்பதுதான் அந்தப்பிரதேசத்திலிருந்து புறப்பட்டவர்கள் மற்றும் சிலர் தான் ரோமானியர்கள், யே(ஜே)ர்மனியர்கள், மற்றும் அயி(ஐ)ரோப்பாவிலுள்ள சிலரது முன்னோடிகள் ஆக இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். அவ்வாறு புறப்பட்டவர்கள் ஒரு பகுதியினர் தான் இந்தியாவுக்குள்ளும் வந்தார்கள் என்கிறார்.

தமிழர் என்பது ஒர் மரபினம். அது தமிழ்த் தேசிய இனமும் ஆகும். அது ஈழத்தமிழர்கள் என்றாலும், தமிழக தமிழர்கள் என்றாலும் பொருந்தும். 

“..தனித்துவமான ஒரு மொழி, பண்பாடு, வரலாறு, நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு தாயக நிலம், இன அடையாள உணர்வு போன்ற பண்புகளை உடையவர்கள் என்பதால், எமது மக்கள் ஒரு தேசிய இனமாக, ஒரு மக்கள் சமூகமாக அமைந்துள்ளனர்.

ஒரு தனித்துவமான மக்கள் சமூகம் என்ற ரீதியில் எமது மக்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள்...” (2002 கார்த்திகை 27, மாவீரர் நாள் உரை-தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன்).

தேசம், தேசியம் என்கிற வரையறைகள் ரசியப்புரட்சிக்கு தலமை தாங்கிய ஜே.வி. ஸ்டாலினின் கூற்றுக்கு இணங்கவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட அவரது தேசம், தேசியம் குறித்த வரையறைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

The most accurate definition of a "nation", comes from Joseph Stalin. In his Marxism and the National Question, New York, 1942. He said:

"A nation is a historically evolved, stable community of language, territory, economic life, and psychological make-up manifested in a community of a culture....."

Diaspora referenda on Tamil Eelam in Sri Lanka - Brian Seniwiratne.

இது லெனினின் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்த விளக்கங்கள்.

இது இப்படி இருக்க தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் என்பது ஈழப்போராட்டம் நடத்தியவர்கள் கற்றுக்கொடுத்தது என்கிற அபத்தத்தையும் சிலர் சளைக்காமல் சொல்லித்திரிவது அதன் உச்சம். குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் கண்டுபிடித்த தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி தான் தமிழ் நாட்டிலும் தமிழ் தேசியம் பேசுகிறார்கள் என்பது அறியாமை என்றே சொல்லத்தோன்றுகிறது.

தமிழீழ தமிழ் தேசியம் வேறு. தமிழ் நாட்டு தமிழ் தேசியம் வேறு. இரண்டும் ஒன்றல்ல. அது ஒன்றாகவும் முடியாது.

திராவிட கொள்கைகளின் அடிப்படையில் தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் பேசப்பட்ட காலங்களின் பின்னர் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் தேசியம் குறித்து பேசத்துவங்கினார்கள். அதற்கு வடிவமும் கொடுத்தார்கள். ஈழத்தின் தமிழ் தேசியமும் கூட தந்தை செல்வா காலத்தில் மக்கள் ஆணையாய் வழங்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் தானம் தான் அதன் அடிப்படை என்பதும் வரலாறு.

விடுதலைக்குரிய முயற்சி என்பது மாற்றத்திற்கு உள்ளாகிக்கொண்டே இருக்கும் ஒரு சுழற்சி முறைப் போராட்டம், விடுதலை கிடைக்கும் வரை! 

அறவழிப்போராட்டம், ஆயுதப்போராட்டம், சமாதானம் பேச்சுவார்த்தை என்று பல கால படி நிலை வளர்ச்சிக்குப் பிறகு இன்று அது ஈழத்தில் மறுபடியும் மக்கள் போராட்ட வடிவமாய் மக்களிடமே விடப்பட்டிருக்கிறது. ஐ. நா. வின் சாசனங்கள், பிரகடனங்களுக்கு அமைவாகவே தமிழர்கள் என்கிற தேசிய இனத்தின் விடுதலைக்கான சுய நிர்ணய உரிமைப்போராட்டமும் ஈழத்தில் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய அரசியல் சூழலில் அமெரிக்க-இந்திய கூட்டு சதியால் சுய நிர்ணய உரிமைக்கான ஈழப்போராட்டம் பயங்கரவாதம் என்று நாமகரணம் சூட்டப்பட்டிருக்கிறது. ஐ. நா. விதிகளின் படி ஒரு தேசிய இனம் தன் சுய நிர்ணய உரிமை கோருவது தவறில்லை என்னும் போது, ஏகாதிபத்தியங்களும், அதற்கு அடிவருடுபவர்களும் இயங்கும் கிளப் (Club) என்று ஐ. நா. மாறிப்போன அவமானம் அதுக்கே கிடையாது. இதில் ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமை குறித்து சரியாய் நடக்க ஏது அதுக்கு சுதந்திரம்.

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஒன்றுமில்லாதாக்கும் ஒர் முயற்சியை இந்தியா மிக லாவகமாக 2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு செய்து வருகிறது. இலங்கையில் தமிழர்கள் “சிறுபான்மையினர்” என்கிற ஒரு குயுக்தியான கருத்துப்பரம்பல் செய்யப்படுகிறது இந்திய மேலாதிக்க அரசியல்வாதிகளால்.

அதற்கு அண்மையில் ஈழத்தில் சில கல்விமான்கள் மற்றும் குடிமக்கள் சார்ந்த(சிவில்)சிலரால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஈழத்தமிழர்களை ‘சிறுபான்மையினர்’ என்று சொல்வோருக்கும் ஒரு நல்லதோர் பதில் வழங்கவும் பட்டிருக்கிறது.

முதலில், ஈழத்தமிழர்கள் சிறுபான்மையினர் அல்ல. ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம். சிறுபான்மையினர் என்னும் போது பெரும்பான்மை சமூகத்துக்கு இணையான மொழி மற்றும் கலாச்சார உரிமைகள் குறித்த சலுகைகள் தான் தமிழர்கள் கேட்கிறார்கள் என்று ஆகிப்போகும். இதன் வழி சுய நிர்ணய உரிமை/சுயாட்சி தந்திரமாக மறுக்கப்படும்.

ஈழத்தமிழர்கள் சலுகைகள் கேட்கவில்லை. அவர்கள் கேட்பது தங்களைத்தாங்களே ஆளும் சுய நிர்ணய ஆட்சி. சட்டத்தின் ஆட்சியும் (Rule of Law) நல்லாட்சியும் (Good Governance) மதிக்கப்படும் ஆட்சியிலேயே அதெல்லாம் சாத்தியம்.

இலங்கையில் அது சாத்தியமில்லை என்று புரிய வைத்திருக்கிறார்கள். ஈழத்தமிழர்களின் உரிமைப்பிரச்சனைகள் வெறுமனே சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதனூடாக தீர்க்க முடியாதவை என்று வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள் (தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம், 13 டிசம்பர், 2011). 

ஆனாலும், வழக்கம் போல ஈழத்தமிழர் சிறுபான்மையினர் என்று இந்தியா தன் உழுத்துப்போன பல்லவியையே பாடும்.

வரலாற்று ரீதியாகவும் இன்று இலங்கை என்று அழைக்கப்படும் நாடு மூன்று ராச்சியங்களை கொண்டிருந்தது. பிரித்தானிய காலனியாதிக்க காலத்தில் தங்கள் நிர்வாக செளகர்யங்களுக்காக அது குறித்து ஆராய ஒரு ரோயல் கமிசனை (Colebrooke-Camerom Commision) 1829 ம் ஆண்டு அனுப்பியது. 

அந்த கமிசன் (Colebrooke-Camerom Commision) அறிவுரையின் படி 1833 ம் ஆண்டு அந்த தமிழ், கண்டி, மற்றும் கோட்டை ராச்சியங்கள் ஒன்றாய் இணைக்கப்பட்டது. மூன்று ராச்சியங்களும் கலைக்கப்பட்டு அதன் ஆட்சி அதிகாரமும் கொழும்பில் குவிக்கப்பட வேண்டும் என்பதை நிறைவேற்றினார்கள்.

அதை கலைத்துப்போடுங்கள். எங்கள் ஆட்சியை திருப்பி தாருங்கள். எங்கள் உரிமைகளை ஊர்சி(ஜி)தம் செய்யும் சுய நிர்ணய உரிமையை மறுக்காதீர்கள் என்றால் நாங்கள் சிறுபான்மையினர் என்று இந்தியாவும் சேர்ந்து பித்தலாட்டம் செய்கிறது.

இப்படியாக எங்கள் நிலம், மொழி, பண்பாட்டு பொருளாதார வரலாறும் அதன்வழி நாங்கள் கேட்கும் தமிழ் தேசியம், சுய நிர்ணயம் என்பன அதற்குரிய அங்கீகாரம் தான் மிச்சம் என்கிற ஒரு நிலையில் இருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டு தமிழ் தேசியம் குறித்து பேசும் போது தான் புரிகிறது அது இன்னும் பல குழப்ப நிலைகளை கொண்டதாகவே இருக்கிறது என்பது. 

முதலில் தமிழ் நாட்டு தமிழ் தேசியத்தில் தமிழர்கள் என்றால் யாரென்பது பெரும் குழப்பமாய் தெரிகிறது. தமிழகத்தில் தமிழ் மொழியை பேசும் வேற்று மாநிலத்தோரும் வாழ்கிறார்கள்.

இவர்கள் மொழிவாரி சிறுபான்மையினர் (கன்னடர்கள், மலையாளிகள்) என்று தமிழ் தேசியம் பேசும் மார்கிசியர் தியாகு குறிப்பிடுகிறார். இது ஒன்றும் புதிய உலக வழக்கு இல்லை என்பதையும் தெளிவாக்குகிறார்.

அதைப்போலவே பிராமணியத்தை கடைப்பிடிப்பவர்களும் தமிழர் பண்பாட்டில் தமிழர் என்று கொள்ளப்படுவார்களா என்றால், அதற்குரிய தியாகுவின் பதில், தமிழ் பண்பாட்டில் பார்ப்பனியத்திற்கும் இடமில்லை. 

மானுட சமத்துவத்தை மறுக்கும் கடவுள் கொள்கைகளுக்கும் இடமில்லை என்பதுதான். நன்றாக கவனியுங்கள் அவர் தமிழ் பண்பாடு குறித்து தான் பேசுகிறார். (தமிழ் தேசியம் குறித்து மார்க்சீயர் தியாகுவுடன் யமுனா ராஜேந்திரன் மற்றும் விசுவநாதன் உரையாடல் மே 2003).

பெ. மணியரசனும் (த. தே.பொ. க) பார்ப்பனர்கள் தமிழ் மொழியை பேசினாலும் அவர்கள் சமசு(ஸ்)கிருத மொழி உயர்ந்தது என்றும், ஆரியத்தின் பெருமையில் மார் தட்டுபவர்கள் என்பதாயும் குறிப்பிடுகிறார்.

என்னுடைய புரிதல் என்னவென்றால் இங்கே கடவுளின் பெயரால் வர்ணாச்சிரமம், சா(ஜா)தி என்று உலகின் வேறெந்த மதத்திலும் இல்லாத ஏற்றத்தாழ்வுகளை பிராமணியம் கடைப்பிடிப்பவர்கள் பேசிக்கொண்டிருந்தால் தமிழ் தேசியத்தில் அது போன்ற மனப்போக்குடையவர்கள் உள்வாங்கப்படுவார்களா என்பதே!

ஆனாலும், தமிழ் நாட்டு தமிழ் தேசியம் பேசுபவர்கள் யாரையும் விலக்கி வைத்தோ அல்லது உள்வாங்க மறுத்தோ தமிழ் தேசியத்தை பேசவோ, கட்டியமைக்கவோ இல்லை என்பதும் தெளிவாய் தெரிகிறது.

தம்மை தமிழராய், தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காய் குரல் கொடுப்பவர்களை விலக்கி வைத்தால் அது சரியான தேசியத்திற்கான பாதையாயும் இருக்காது.

எந்த மொழி பேசுவாராகிலும், பார்ப்பனிய வர்ணாச்சிரம பேதங்களை புறக்கணித்து தமிழ் உணர்வோடு செயற்படுபவர்கள் அனைவரும் தமிழ் நாட்டு தமிழ் தேசியத்தில் உள்வாங்கப்படுவார்கள் என்பதும் புரிகிறது.

தமிழர்கள் யாரென்று அல்லது தமிழ் தேசியம் என்பதற்குள் உள்வாங்கப்படுவர்கள் குறித்து முடிவுக்கு வந்தாலும், பிறகு தமிழ் தேசியம் பேசுபவர்கள் ஒரு சிலர் குழப்பமாகவே இருக்கிறார்கள்.

உருவான தமிழ் தேசியமும் உருவாகாத இந்திய தேசியமும் என்று பேசிக்கொண்டே இந்திய இறையாண்மை குறித்து அக்கறைப்படுபவர்களும் உண்டு.

இந்திய தேசியம், தமிழ் தேசியம் இரண்டும் குறித்து எப்படி ஒரே நேரத்தில் அக்கறைப்பட முடியும் என்று என் பொதுப்புத்திக்கு ஓர் கேள்வி தோன்றுகிறது. தமிழ் தேசியம் குறித்து எத்தனை பேர் பேசினாலும் அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையோடு செயற்படவில்லை என்பதும் தெரிகிறது.

இது எல்லாத்தையும் விட தமிழர்கள் தேசிய இனமாய் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டவர்களா!

இந்திய மைய அரசியலில் தமிழ் தேசிய மொழி இல்லை. தமிழருக்குரிய அங்கீகாரமும் இல்லை. அவர்கள் தம் மொழிக்கும் அங்கீகாரம் இல்லை. இப்படி இருந்தாலும் தமிழ் தேசியம் தன்னால் வலுப்பெறுமோ!

தமிழ் தேசியம் பேசினாலோ அல்லது அதுக்காய் போராடினால் ஈழம் போல் அழிவை சந்திக்க வேண்டும் என்கிற கருத்தையும் படித்திருக்கிறேன். அது ஈழப்போராட்டம் போல் தான் இருக்க வேண்டுமா!

ஏன் கனடா போன்ற நாட்டில் நடந்தது போல் ஒரு வாக்கெடுப்பு (Referendum) இந்தியா என்கிற சனநாயக தேசத்தில் சாத்தியம் வராதா!

ஈழப்பிரச்சனையின் அடிப்படையும், அதன் போராட்ட களங்களும் வேறு. தமிழ் நாட்டு தமிழ் தேசியத்தின் களங்கள் வேறு. அதற்கு ஏற்றாற்போல் வழிமுறைகள் சாத்தியமில்லையா!

இதுவரை எந்தவொரு தமிழ் நாட்டு தமிழ் தேசியம் பேசுபவர்களும் அதை அடையும் வழியாய் ஆயுதப்போராட்டத்தையோ அல்லது நாடாளுமன்ற அரசியல் வழிமுறையையோ பேசி நான் படித்ததில்லை.

தமிழ் தேசிய புரட்சி மக்கள் எழுச்சியாகவே நடக்கும் என்று தான் படித்திருக்கிறேன். ஒரு முல்லை-பெரியாறு போதும் தமிழ் தேசியம் பிறக்குமா, பிறக்காதா என்பதை நாடிபிடித்துப்பார்க்க!

ஈழத்தின் தமிழ் தேசியத்திற்கு முரணான கொள்கைகளுடன் இசு(ஸ்)லாம் என்கிற அடையாளத்துடன் இலங்கை முசு(ஸ்)லிம்களும்; தமிழ் நாட்டில் பிராமணியம் கடைப்பிடிக்கும் பிராமணர்களும்/பார்பனியர்கள் தமிழ் தேசியத்துடன் முரண்படுகிறார்கள். இது குறித்து விரிவாய் இன்னோர் கட்டுரையே எழுதலாம்.

ஒரு தேசிய இனத்தின் உரிமைகளும், அரசியல் அபிலாசைகளும் காலவெள்ளத்தில் அடித்து வரப்பட்டு சிறுபான்மையாய் எம்மத்தியில் வாழ்பவர்கள் வழி நீர்த்துப்போகவேண்டுமா!

எம் நிலம், மொழி, பண்பாடு, பொருளியல் வாழ்வு என்று அத்தனையும் பறிகொடுத்து இனவழிப்புக்கு ஆளான ஒரு இனம் பிரிந்து போய் தனியே சுயாட்சி மூலம் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்துவது உலகவிதிகளின் படியே தவறே இல்லை என்னும் போது, அது குறித்து பேசவே நாம் ஏன் தயங்க வேண்டும். எந்தவொரு மக்கள் சமூகத்தின் உரிமைகளை மறுப்பதோ, அல்லது பாசிசமோ அல்ல தமிழ் தேசியம் என்பது. தமிழ் தேசியத்தின் வழி நாம் கேட்பதும், உறுதிபடுத்துவதும் எம் சுய நிர்ணய உரிமையே என்பது என் தெளிவான புரிதல்.

பூர்வீகத்தை தமிழாகக் கொண்ட அனைவரும் தமிழர்களே!

தமிழர்களா இல்லையா என்பதைபப்றியே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டுமேயொழிய எந்த மதப்பிரிவை அல்லது எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவரென ஆய்வுமேற்கொள்தல் எங்கள் தமிழினத்தின் விடிவுப் பாதையில் நாங்களே ஏற்படுத்திக் கொள்ளும் தடைக்கற்களாகும். தமிழ் மக்களின் விடிவிற்காக உழைக்கும் தமிழுணர்வாளர்களே தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தாது ஏன்?

தமிழ்மக்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளின் குரல்வடிவமோ இல்லையேல் எழுத்துவடிவமோ மக்களிடம் சென்றடைவதற்கு முன்பு பலமுறைகள் சீர்செய்யப்பட்டு மக்களிடம் வழங்குமாறு அனைத்து தமிழ்மக்களையும் தாழ்மையுடன் வேண்டிக்கொண்டு விடைபெறுகின்றேன்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Tuesday 30 October 2012

விழிப்புணர்வே அற்ற தமிழனும்..............!

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு.இன்று உலகமே மாயன் என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது.  மாயன்  நாட்காட்டி (Mayan Calendar)-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.


மாயன்கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட மாயன் என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் மாயன் நாட்காட்டி பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன.

வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் மாயன் தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம். Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். 

இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு.

கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் அயிரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் அத்திலாந்திக் பெருங்கடலை  (Atlantic Ocean) குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று கோலம்பசு (Columbus) நம்பினார்.

அவருடைய நம்பிக்கையின்படியே அவர் அத்திலாந்திக் பெருங்கடலைக் கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் கோலம்பசு தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம்.

இதை பார்த்த அயிரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

கோலம்பசுக்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் அமேரிக்கா (America) என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது.

ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று.

வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! 

வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். 

இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள்.

நம்மவர்களுக்கு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது (Made in Foreign) என்றாலே ஒரு கிழுகிழுப்புதானே!

தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது.

இதற்கு வாழும் உதாரணம் தமிழனே. மெக்சிக்கோ மற்றும் பேரூ வெற்றி  (The Conquest of Mexico and Peru) என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார்.

அயிரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிக்கோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது.

இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன்.

இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம்.

இந்த கட்டுரை எழுதும் பொருட்டு இந்த அருமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. 

செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். 

காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். 

மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது. செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது.

காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்து கொண்டார்கள்.

அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம்.

Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துல்லியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த குதிரைகளின் மேல் அமர்ந்து கால்நடைகளை மேய்ப்பவர்  (Cowboy) படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம். 

அயிரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது.

இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) அவுசுத்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி (Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள்.

முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது.

தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று அவுசுத்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை.

முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது.

அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான்.

ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொருந்திபோகவில்லை.

மேலும் எகிப்தியர்கள் கரையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது.

இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் அவுசுத்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான்.

இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. 

நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது.

3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.

நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள்.

தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். 

தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday 27 October 2012

வீரம் செறிந்த தமிழர்...!



வீரம் செறிந்த தமிழர் வரலாற்றிற்கு நிகரற்ற எடுத்துக்காட்டு இராசராச சோழன் பழந்தமிழ் நூல்கள் எழுந்த காலத்திலேயே சோழர்கள் பற்றிய குறிப்புக்கள் பாடல்களில் வருகின்றன.

நளன்கிள்ளி, நெடுங்கிள்ளி, கோர்ச்செங்கணான், கிள்ளிவளவன், கோப்பெருஞ்சோழன். முதலான சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் புறநானூறு முதலான செய்யுள்களில் காணப்படுகின்றன.

எனினும் கி.பி 850 தொடக்கம் 1230 வரையான ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுக்காலமே சோழப்பேரசுக் காலம் எனக் கொள்ளப்படுகிறது.

தமிழகத்து வரலாற்றிலே வேறெந்த காலத்தையும் போலல்லாது பல துறைகளிலும் பெருவளர்ச்சிகள் ஏற்பட்ட காலம் சோழர் காலமாகும்.

ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விசயாலய சோழன் முத்தரையர்கள் என்னும் குறுநில மன்னர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றினான்.

விசயாலய சோழன் காலத்தில் சோழர்கள் தொண்டைநாட்டுப் பல்லவர்களின் மேலாதிக்கத்தின் கீழ் அடங்கியிருந்தனர். எனினும் விசயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன் திருப்புறம்பியப் போர் மூலமாக பல்லவர்களைத் தோற்கடித்து தொண்டை நாட்டைக் கைப்பற்றினான்.

இதனால் 'தொண்டைநாடு பரவின சோழன்' என்ற சிறப்புப்பெயர் பெற்றான்.

அதனைத்தொடர்ந்து பராந்தக சோழன் தெற்கிலே பாண்டி நாட்டையும் வடக்கிலே வாணர் வைதும்பர் நாடுகளையும் கைப்பற்றிக் கொண்டான்.

இவனது ஆட்சியிலே சோழரின் அரசு ஒரு பேரரசு என்ற நிலையை அடைந்தது. ஆயினும் கர்நாடகரின் தெற்கு நோக்கிய படையெடுப்பான தக்கோளப்போரிலே அவர்கள் பெரும் வெற்றி பெற்றார்கள்.

தொண்டைநாடு நடுநாடு என்பவற்றை சோழர்கள் இழக்க நேரிட்டது. தெற்கிலே பாண்டியர்கள் மீண்டும் தலைதூக்கினார்கள். பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுந்தரசோழன் உத்தமசோழன் என்போரின் காலத்தில் சோழர்கள் கன்னடரிடமிருந்து தொண்டை நாடுஇ நடுநாடு என்பவற்றைக் கைப்பற்றினார்கள்.

இவர்களுக்குப் பின் பதவியேற்ற இராசராசன் குறுகிய காலத்தில் சோழப்பேரரசினை பெருவலிபடைத்தததாக மாற்றினான்.

அவனது மகன் இராசேந்திர சோழனும் சோழப்பேரரசின் ஈடுஇணையற்ற வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றினான். சோழமன்னர்களில் சோழரின் புகழை உலகறியச் செய்து சாதனைமிகு மன்னனாகத் திகழ்ந்தவன் சோழத்தமிழ்மகன் இராசராச சோழனாவான்.

இராசராச சோழன் சோழப்பெருமன்னன் சுந்தரசோழனுக்கும் திருக்கோவலூர் மலையமான் குலத்தில் தோன்றிய வானவன் மாதேவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவன் அருண்மொழிவர்மனாகிய இராசராச சோழனாவான்.

இளம் வயதிலேயே தாய்தந்தையரை இழந்த இராசராசன் தன் பெரிய பாட்டி செம்பியன் மாதேவியார் தமக்கை குந்தவை பிராட்டியர் ஆகியோர் அரவணைப்பில் வளர்ந்தான். மூத்தவன் ஆதித்த கரிகாலன் இறந்த பின்னர் இளைஞனாகிய அருண்மொழியே முடிசூடுவதாக இருந்தது.

அனைவரும் அதனையே விரும்பினார்கள். எனினும் அவனுடைய சிறியதந்தை மதுராந்தக உத்தம சோழனுக்கு அரசாளும் விருப்பம் இருந்ததை உணர்ந்த அருண்மொழி அவர் விருப்பப்படியே அவரை முடிசூடச் செய்தான்.

மதுராந்தக உத்தம சோழன் 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அப்போது அருண்மொழி இளவரசனாக இருந்தான். கி.பி 985 ஆம் ஆண்டு மதுராந்தக உத்தம சோழன் இறந்த பின்பு சோழப்பேரரசனாக அருண்மொழிவர்மன் முடிசூடிக்கொண்டான்.

அத்துடன் இராசராசன் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றான். அன்று தொடங்கி இறக்கும் வரையும் சோழப்பேரரசிற்காகவும் மக்களுக்காகவும் சமயத்திற்காகவும் அரிய பல சாதனைகளைப் படைத்துள்ளான்.  

இராசராசனுக்கு சோழமாதேவிஇ திரைலோக்கியமாதேவி பஞ்சவன்மாதேவி அபிமானவல்லி இலாடமாதேவி பிரிதிவிமாதேவி மீனவன்மாதேவி லோகமாதேவி வீரநாராயணி வில்லவன்மாதேவி வானவன்மாதேவி முதலான பல மனைவியர் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்களில் தந்திசக்திவிடங்கி எனும் லோகமாதேவியே பட்டத்தரசியாக விளங்கினார். இராசராச மாமன்னனுக்கும் வானவன் மாதேவிக்கும் பிறந்த ஒரே மகன் மதுராந்தகன் எனும் இராசேந்திர சோழன்.

இராசராச னுக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர். மூத்தவள் மாதேவ அடிகள் இளையவள் குந்தவை ஆகியோர். தனது பாட்டியார் செம்பியன் மாதேவி நினைவாக ஒரு பெண்ணுக்கு மாதேவ அடிகள் என்றும் சகோதரி குந்தவை பிராட்டியர் நினைவாக மற்றைய மகளுக்கு குந்தவை என்றும் சிறிய தந்தை மதுராந்தக உத்தம சோழன் நினைவாக மூத்த மகனுக்கு மதுராந்தகன் என்றும் பெயர் சூட்டினான் என்று கூறப்படுகிறது.

அரசு கட்டடில் ஏறிய இராசராசசோழன் முன்னர் பல்லவர் ஆட்சியில் போர்கள் மலிந்திருந்ததால் நாட்டின் செல்வமும் வளங்களும் சீரழிந்திருந்ததை கண்டு கவலையுற்றான். அவற்றை செழிக்க வைப்பதற்காக பாடுபட்டான்.

சோழ நாட்டினுள் போர் நடைபெறாதவாறு பார்த்துக்கொண்டான். எதிரிகளுக்கும் நேசக்கரம் நீட்டிய இராசராசன் எதிர்த்தவர்களை வெற்றி கொண்டு சோழப்பேரரசினை விரிவு படுத்தினான். சோழநாட்டினுள் போர்கள் இல்லை. செல்வம் பெருகி நாடு செழித்தது. கவின்கலைகள் வளர்ந்தன.

சைவத்தின் பால் ஈடுபாடு கொண்டதனாலும் சைவத்திற்கு தொண்டாற்றியமையாலும் இராசராசன் 'சிவபாத சேகரன்' என்ற சிறப்புப்பெயரையும் பெற்றான். கி.பி 985இல் முடிசூடிய மன்னன் 1012இல் தனது மகன் இராசேந்திர சோழனுக்கு முடிசூடி விட்டு மறைந்தான்.

இராசராச சோழனின் வெற்றிகளும் சாதனைகளும். தமிழக அரசுகளின் மன்னர்வரிசையில் முதன்மையானவனாகவும் 'நிகரிலிச் சோழன்' என்று அழைக்கப்படுபவனுமான இராசராசன் தமிழ் சாதனைகளுக்கு எடுத்துக்காட்டான ஒருவன் என்றால் அது மறுக்க முடியாது.

தமிழ்ச்சமுதாய வரலாற்றிலே அரசியல் சமயம் பொருளாதாரம் கலைக்கட்டுமானம் போன்றவற்றிலே இவனது காலம் சாதனைகள் மிகுந்த உன்னத காலமாகும்.

ஐநூற்றுவர் முதலான வணிககணங்களின் உதவியோடு முப்படைகளையும் கொண்டு அவற்றின் வலிமையால் தென்னிந்திய அரசியல் நிலைகளை முற்றாக மாற்றினான்.

அயலிலுள்ள இராச்சியங்களெல்லாம் இவனது போர்களினாலே வீழ்ந்தன.

தன் தூதனைச் சிரையிலடைத்த சேர மன்னன் பாசு(ஸ்)கர ரவிவர்மனை திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள காந்தளுர் என்னும் இடத்தில் வெற்றி கொண்டதோடு அவனுடைய கடற்படையையும் கைப்பற்றியமை இராசராசனுடைய குறிப்பிடத்தக்க முதலாவது வெற்றியாகும்.

இதனை இவனுடைய மெய்க்கீர்த்தி 'காந்தளுர்ச்சாலை கலமறுத்தருளி...' என்று குறிப்பிடுகின்றது. இவ்வெற்றியைக் குறிப்பிடும் வண்ணம் 'கேரளாந்தகன்'(கேரள மன்னனுக்கு இயமன் போன்றவன்) என்ற சிறப்புப் பெயரையும் பெற்றான்.

இராசராசன் காலத்தில் சோழப்பேரரசு பல மண்டலங்களைக் கொண்டதாக காணப்பட்டது. கைப்பற்றப்பட்;ட இராச்சியங்கள் சில மாற்றங்களோடு மண்டலங்கள் என்ற நிர்வாகப் பிரிவுகளுக்குள் கொண்டுவரப்பட்டது.

பாண்டி நாட்டினை இராசராசன் காலத்தில் இராசராச தென்னாடு என்றார்கள்.

பல்லவர்களுடைய தென்னாடு ஐயங்கொண்ட சோழ மண்டலம் என்ற பெயரால் வழங்கப்பட்டது. கங்கபாடி முடி கொண்ட சோழ மண்டலம் என்றும் நுளம்பபாடி நிகரிழிச் சோழ மண்டலம் என்றும் பெயர் பெற்றது.

ஈழம் மும்முடிச் சோழ மண்டலம் எனப்படலாயிற்று. இவை ஒவ்வொன்றும் இராசராசனுடைய பட்டப் பெயர்களாலும் விருதுப்பெயர்களாலும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

பாண்டி நாடு வேங்கிநாடு எனும் கீழைச்சாளுக்கியர்களின் நடுநாடு(ஆந்திரப்பகுதி)இ இராங்டிரகூடர்களின் கங்கபாடி (மைசூர்பகுதி)இ நுளம்பர்கள் ஆட்சிபுரிகின்ற நுளம்பாடி (பெங்களுர்)இ பெல்லாரிப் பகுதிகள்இ சேரநாட்டுக் கொல்லம; கலிங்கம் (ஒரிசா மாநிலம்) ஈழமண்டலம் (இலங்கைத்தீவு) மேலைச்சாறுக்கியர்களின் இரட்டப்பாடி என்றும் வட கர்நாடகம் மகராட்டிரம; அரபிக்கடலிலுள்ள லட்சத்தீவு மாலைத்தீவு போன்றன இராசராசனால் வெற்றிக் கொள்ளப்பட்டன.

இதனை அவனுடைய கல்வெட்டுக்களில் வரும் மெய்கீர்த்தி உறுதிப்படுத்தும். இவ்வாறாக பெருவலி படைத்த சோழப்பேரரசில் முதன் முதலாக நிலங்கள் அளக்கப்பட்டு தரத்திற்கும் விளைச்சலுக்கும் ஏற்ப நிலங்கள் வகை செய்யப்பட்டன.

அதற்கேற்ற வகையிலே வரிகள் அறவிடப்பட்டன. இந்த நிலங்கள் அளப்பதற்கு பொறுப்பாக இருந்த அதிகாரி 'உலகளந்த மாராயன்' என்ற சிறப்பு பெயரைப் பெற்றார். நிலங்களை அளக்கப் பயன்பட்ட கோள் 'உலகளந்தான் கோல்' என்ற நாமத்தாலும் வழங்கப்பட்டது.

இலங்கையிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சோழப்பேரரசின் நிர்வாக கட்டமைப்பு இராசராசனின் நிர்வாக திறமைக்கும் நெறிப்படுத்தலுக்கும் தக்க சான்று பகரும். பெரும் பிரிவுகளான மண்டலங்கள் ஒவ்வொன்றும் அரசிறை நிர்வாகத்தின் பொருட்டு வள நாடுகளாக வகுக்கப்பட்டது.

வளநாடு ஒவ்வொன்றிலும் இரண்டு அல்லது அதற்கு அதிகமான நாடுகள் அடங்கியிருந்தன. விசாலமான பிரம தேயங்களும் பெரும் பிரிவுகளாகக் காணப்பட்டன.

இராசராச சோழனின் சாதனைகளில் முக்கியமானது அவன் கலைக்கு ஆற்றிய சேவைகளாகும். சமயம் வளர்ப்பதற்காய் பிரமாண்டமான ஆலயங்களை அமைத்தான். அவ்வாறான ஆலயங்கள் வனப்பு மிகுந்த சிற்பங்களை சுமந்து நின்றன.

வியக்க வைக்கும் விமான கட்டுமானம் கோயிலின் பிரதானமான அம்சமாயிற்று. ஓவியங்கள் பலவும் ஆலயத்தை அலங்கரித்து நின்றன. ஆலயத்திலே இசைக்கலையும் நடனக்கலையும் வளர்க்கப்பட்டது.

கலைஞர்களுக்கு நிலதானங்கள் வழங்கப்பட்டன. இராசராசனின் தஞ்சைப் பெருங்கோயிலிலே பல நடனமாதர்கள் சேவை புரிந்ததாகவும் இசைவிற்பன்னர்கள் இசை பயிற்றுவித்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான கலைஞர்களுக்கு இராசராசன் கோயிலைச் சுற்றியே இருப்பிடங்களையும் அமைத்துக் கொடுத்தான் என்றும் கூறப்படுகிறது. ஆலயங்கள் தனியே வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இருந்து விடவில்லை.

அவை தமிழக வரலாறு கலைகலாசாரம் பண்பாடு என்பவற்றை சுமந்து நிற்கும் தொல்லியல் பெட்டகமுமாகும். இவை கல்வி புகட்டும் நிலையங்களாகவும் கலைபயிலும் அரங்கமாகவும் விளங்கின.

பிரமாண்டமாய் இவன் எடுப்பித்த ஆலயங்களில் சோழரின் சாதனைகளை இன்றும் நாம் காணலாம். இவற்றுல் தனிப்பெரும் சிறப்பு வாய்ந்ததாக விளங்குவது தஞ்சைப் பெருங்கோயில் ஆகும்.

தஞ்சைப் பெருங்கோயில் இராசராசன் காஞ்சி மாநகரத்திற்குச் சென்றபோது அங்கே இரசசிம்மபல்லவனால் கட்டப்பெற்ற கைலாசநாதர் கோயிலின் பேரழகில் பெரிதும் மயங்கி அக்கோயிலை 'கச்சிப்போட்டு பெரியதளி' என்று போற்றினான்.

இக்கோயில் இராசராசன் மனதில் ஓர் எழுச்சியைத் தூண்டியது. இதன் விளைவாக உருவானது தான் தஞ்சைப் பெருங்கோயில். சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கிய ஊரே தஞ்சையாகும். காவிரி நதியின் புனலால் வளம் பெற்று விளங்கும் ஊர் என்பதனால் (தண் 10 செய் 10ஊர்) தஞ்சாவூர் ஆயிற்று.

விசயாலய சோழனில் தொடங்கி ஆதித்தன்இ பராந்தகன் கண்டராதித்தன் அரிஞ்சயன; சுந்தர சோழன் ஆதித்த கரிகாலன; மதுராந்தக உத்தம சோழன; இராசராசன்; இராசேந்திரன்(இவனது ஆட்சியின் முதல் 10 ஆண்டுகள்); ஆகிய பெரு மன்னர் காலம் வரை 176 ஆண்டுகள் தஞ்சை சோழப்பேரரசின் தலை நகரமாக விளங்கிற்று.

இவ்வாறான சிறப்புக்களையுடைய தஞ்சாவூரில் இராசராசசோழன் கட்டுவித்த பிரமாண்டமான சாதனைப் படைப்புதான் தஞ்சைப் பெருங்கோயில் ஆகும்.

கி.பி 1004 இல் கட்டுமானப்பணிகளை ஆரம்பித்து ஆறு ஆண்டுகளுக்குள் கி.பி 1010 ஆம் ஆண்டில் கட்டி முடித்தான். இச்செய்திகளை அக்கோயிலிலுள்ள கல்வெட்டு கூறுகிறது.

இலக்கணப்படி 'இராஜராசசேச்சரம்' என்பது சரியானது ஆயினும் இராசராசனின் கல்வெட்டிலே 'இராஜராசசீச்சரம்' என்று தான் காணப்படுகிறது.

'பாண்டிய குசானி வளநாட்டுத் தஞ்சாவூர் எனும் ஊரில் இக்கோயிலை எடுப்பித்தேன்..' என்று இராசராசன் கல்வெட்டிலே குறிப்பிட்டுள்ளான்.  

இராசேந்திரசோழனின் கல்வெட்டு இக்கோயிலை'சிறீராசராசஈசுவரமுடையார் கோயில்' என்று குறிப்பிடுகின்றது.

இராசராசேசுவரம் எனப்படுகின்ற தஞ்சைப் பெருங்கோயில் வடமொழியில் பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்படுகிறது. தஞ்சைப்பெருங்கோயிலை உருவாக்கிய கட்டக்கலைஞன் வீரசோழன் குஞ்சரமல்லனான ராசராச பெருந்தச்சன் ஆவான்.

மதுராந்தகனான நித்தவினோத பெருந்தச்சன் இலத்தி சடையனான கண்டாராதித்தப் பெருந்தச்சன் ஆகிய இரு தச்சர்களும் குஞ்சரமல்லனின் பணிக்குப் பெரிதும் துணை புரிந்தனர்.

இக்கோயில் கிழக்கு மேற்காக 244 மீற்றர் நீளமும் வடக்குத்தெற்காக 123 மீற்றர் அகலமும் உடையது. முழுவதுமாக 29இ768 சதுரமீற்றர் பரப்பளவைக் கொண்ட பிரமாண்டமான தோற்றமாகக் காட்சி தருகின்றது.

முழுவதும் செந்நிறக்கற்களால் கட்டப்பட்டது. இராசராசன் காலத்தில் கருவறை இடைக்கழி அர்த்தமண்டபம் மகாமண்டபம் நாட்டியமண்டபம்இ முன்மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய மூலக்கோயிலும் அதனைச்சுற்றி இரண்டு அடுக்குள்ள திருச்சுற்றுமாழிகை அதனுடன் இணைந்த இராசராசன் திருவாயில் அதனை அடுத்துள்ள முதல் கோபுரமான கேரளாந்தகன் நுழைவாயில் சண்டிகேஸ்வரர் ஆலயம் என்பன அமைக்கப்பட்டன. 

கிழக்குத்திசையில் மூலவாயிலாக விளங்குவது கோபுரங்களில் முதல் கோபுரமான கேரளாந்தகன் திருவாயிலாகும். இது 30 மீற்றர் நீளமும் 18 மீற்றர் அகலமும் உடையது.

இதிலே புராணச் செய்திகளைக் கொண்ட சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன. கேரளாந்தகன் திருவாயிலிலிருந்து மேற்கே 100 மீற்றர் தொலைவில் இன்னுமொரு வாயில் காணப்படுகிறது. இது கல்வெட்டுகளில் இராசராசன் திருவாயில் எனப்படுகிறது.

இந்தியாவில் உள்ள கோயில் விமானங்களில் மிக உயரமுடையது தஞ்சைப்பெருங்கோயில் விமானமாகும். இதன் உயரம் 214 அடியாகும். சமீபத்தில் இக்கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டொன்றில் இராசராசன் இக்கோயில் முழுவதும் பொன் வேய்ந்த செய்தி கூறப்படுகிது.

தஞ்சைப்பெருங்கோயிலின் சிறீவிமானத்தின் பெயர் தட்சிணமேரு என்பதாகும். நான்கு பட்டை வடிவில் கூம்பிச் செல்லும் விமானம் மேல் நிலையில் 26ஒ26 சதுர அடி தளத்தை உருவாக்கி நிற்கிறது.

இத்தளம் ஒரே கல் என்றும்இ அது 80 தொண் எடையுடையது என்றும் இவ்விமானத்தின் நிழல் தரையில் விழாது என்றும் சில ஆய்வாளர்கள் கூறியிருந்தாலும் அது முற்றிலும் தவறானது.

எனவே சிறப்புக்கள் பல பெற்ற தஞ்சைப்பெருங்கோயில் இராசராசனின் ஈடுஇணையற்ற சாதனையாகும் என்றால் மிகையாகாது. ஈழமும் இராசராச சோழனும். இராசராச சோழனின் இணையற்ற ஆற்றலால் சோழப்பேரரசு விரிவு படுத்தல் நடைபெற்று கடல் கடந்து புகழடைந்தது.

இராசராசனின் ஆதிக்க வேட்டையிலிருந்து அயலிலுள்ள இராச்சியங்களும்இ நாடுகளும் தப்பித்துக்கொள்ள முடியவில்லை.

அந்தவகையில் பத்தாம் நூற்றாண்டின் முடிவில் இராசராசனது எட்டாவது ஆட்சியாண்டில் (கி.பி 993) சோழர் இலங்கையின் பிரதானமான பகுதிகளைக் கைபற்றினார்கள்.

அவனுடைய எட்டாம் ஆட்சியாண்டு முதலாக சாசனங்களில் வருகின்ற மெய்க்கீர்த்தியிலே சோழர் வசமாகிவிட்ட பகுதிகளில் ஒன்றாக ஈழமும் குறிப்பிடப்படுகின்றமை நேக்கற்பாலது.

தஞ்சைப்பெருங்கோயிலிலுள்ள இராசராசனுடைய சாசனமொன்றில் 'ஈழமான மும்முடிச்சோழமண்டலத்து இராசராசவளநாடான மாப்பிசும்பு கொட்டியாரம்...' என்று பதிவாகியுள்ளது.

அத்துடன் இராசராசனது காலத்து சாசனங்கள் பதவியா திருகோணமலை போன்ற இடங்களிலே கிடைத்துள்ளன. எனவே இராசராசனது ஆட்சிக்காலத்திலே ஈழமானது மும்முடிச்சோழ மண்டலமாகிவிட்டமை தெளிவாகின்றது.

சோழராட்சியில் புலத்திநகரமான பொலநறுவை சனநாத மங்களம் என்னும் புனர்நாமம் பெற்றுத் தலைமை நிர்வாக நிலையமாக விளங்கியது. அங்கு இந்து கலாசாரத்தின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவிலே ஏற்பட்டது.

தென்னிந்தியாவில் இருந்து வந்த நிர்வாக அதிகாரிகளும் படையினரும் நானாதேசிவணிகரும் தொழில்வினைஞரும் அந்தணரும் வேறு பல சமூகப்பிரிவினரும் அங்கு வாழ்ந்தனர்.

அத்தகையோரின் வழிபாட்டுத் தேவைக்கேற்ப பல கோயில்கள் அமைக்கப்பட்டன. பதினாறுக்கும் மேற்பட்ட சைவ வைணவ ஆலயங்கள் பொலன்நறுவையில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

அவற்றுள் சில சோழராட்சிக்குரியவை ஏனையவை பிற்காலத்தவை. தொல்லியல் வரலாற்றாய்வாளர்களால் இரண்டாம் சிவாலயம் ஐந்தாம் சிவாலயம் ஆறாம் சிவாலயம் என்று கூறப்பட்ட கட்டிடங்களில் சோழர் கால தொல்பொருட் சின்னங்கள் கிடைக்கின்றன.

இரண்டாம் சிவாலயமான வானவன் மாதேவி ஈசுவரம் அழிவுறாது இன்றும் சீரான நிலையில் உள்ளது. இலங்கையில் இன்று வரை நிலைத்துள்ள கோயில்களில் இதுவே பழைமையானது. சோழர்க் கலைப்பாணியின் சிறந்த சிறந்த பண்புகளுக்கு கற்றளியான இரண்டாம் சிவாலயம் சிறந்த உதாரணமாகும்.

சுந்தர சோழனுடைய பட்டத்தரசியின் நினைவாக அதாவது இராசராசசோழனின் தாயின் நினைவாக இந்த ஆலயத்தை அவன் அமைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனவே இராசராசனுடைய காலத்தில் பாரததேசம் ஈழத்தோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தது. இராசராசனுடைய மெய்க்கீர்த்தி வரலாற்று செய்திகளை ஆதாரப்படுத்த உதவும் மூலங்களில் முதன்மையானது தொல்பொருட்சான்றுகளாகும்.

அதிலும் குறிப்பாக கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய உதவும் தனித்துவமான சான்றாதாரமாக விளங்குகின்றன. கல்வெட்டு அமைப்பு முறையிலே மங்களச்சொல்லினைத் தொடர்ந்து அமைந்திருப்பதே மெய்க்கீர்த்தியாகும்.

சோழர் காலம் முதலாகத்தான் கல்வெட்டுகளில் மெய்க்கீர்தியை அமைக்கும் முறை உதயமாகியது. இந்த மெய்க்கீர்த்தியென்பது மன்னனுடைய புகழ்பாடுகின்றனவாக அவனுடைய சாதனைகள் அவன் கைப்பற்றிய பிரதேசங்கள் விருதுப்பெயர்கள் என்பவற்றைத் தாங்கியதாக அமைந்து விடுகின்றன.

அந்தவகையில் இராசராசனுடைய கல்வெட்டுக்களில் அவனுடைய மெய்க்கீர்த்தி மேல்வருமாறு அமைந்திருக்கும்.

'திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்குயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளுர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கை நாடுங்
கங்கை பாடியும் தடிகைபாடியும் நுளம்பபாடியும் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை புகழத்தர ஈழமண்டலமும்
இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றித் தண்டாற்
கொண்ட தன்னெழில் வளரூழியுனெல்லா யாண்டுந் தொழுதக
விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோ ராசகேசரி
வர்மரான சிறீராசராசதேவர்க்கு யாண்டு........'

இந்த மெய்க்கீர்த்தி வாசகம் இராசராசனது புகழினை எடுத்தியம்பி நிற்கிறது. இராசராசனை திருமாளோடு ஒப்பிடுவதோடு அவன் திருமகளையும் நிலமகளையும் உரிமையாக்கிக் கொண்டான் என்றும் நயம்படக் கூறுகிறது. 

அத்துடன் இராசராசனால் கைப்பற்றப்பட்ட இடங்கள் இராச்சியங்கள் பற்றியும் விரிவாக கூறுகிறது. மெய்க்கீர்த்தி வாசகம் வாயிலாக அவனுடைய புகழையும். சாதனைகளையும் அறியமுடிகிறது.

முடிவுரை எனவே தமிழக வரலாறு பல பேரரசுகளையும் நூற்றுக்கணக்கான மன்னர்களையும் பதிவு செய்திருந்தாலும், திறமையான ஆட்சியினாலும் கலைக்கட்டுமாணங்களினாலும் அதிகார விரிவு படுத்தலினால் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருப்பவன் தான் சோழமன்னன் இராசராசன் என்றால் யாரும் மறுத்து விடமுடியாது.

வீரம் சொறிந்த தமிழர் வரலாற்றிற்கு இராசராசசோழன் நிகரற்ற எடுத்துக்காட்டாகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

கைக்குண்டு வீச்சின் மர்மம்..............!

காதலிக்கப் போய் காலை இழந்த கிட்டு, கைக்குண்டு வீச்சின் மர்மம் அவுட்டு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட தளபதியாக விளங்கியவர் கிட்டு. இவர் மீது யாழ்ப்பாணத்தில் 1987 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதில் இவர் ஒரு காலை இழந்து போனார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி சிந்தியா. இவர் கிட்டுவின் காதலி. இருவரதும் காதல் அந்நாட்களில் ரொம்பவே பிரபலம். சிந்தியாவின் வீடு இரண்டாம் குறுக்குத் தெருவில் இருந்தது. சிந்தியாவை காண கிட்டு ஒவ்வொரு நாளும் மாலையில் இவ்வீட்டுக்கு செல்கின்றமை வழக்கம். 

காதலியை சந்திக்க கிட்டு சென்றிருந்த வேளையில்தான் கைக்குண்டு வீசப்பட்டு இருக்கின்றது.

ஆயுதம் தரித்த மெய்ப் பாதுகாவலர்களுடன் வாகனத்தில் கிட்டு சென்று இருந்தார். வாகனத்தின் மீது கைக்குண்டு வீசப்பட்டது. மயக்கம் உற்ற நிலையில் கிட்டு யாழ். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். கால் துண்டிக்கப்பட்டது.

ஈ. பி. ஆர். எல். எப் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பு ஒன்றில் இருந்த அருணா என்பவர் சந்தேகித்தார்.

இத்தாக்குதலுக்கு பழி வாங்குகின்றமைக்காக மாற்று இயக்க போராளிக் கைதிகள் 63 பேரை சரமாரியாக அரை மணித்தியாலத்தில் சுட்டுக் கொன்றார். ஆனால் கொலைகளை எவரும், எப்போதும், எதற்காகவும் நியாயப்படுத்த முடியாது. 

இதே நேரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் மாற்றுக் குழுவைச் சேர்ந்தவர்கள்தான் கிட்டு மீது கைக்குண்டு வீசி இருக்கின்றார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பெரிதும் சந்தேகித்தார். இவரது சந்தேகக் கண் மாத்தையா மீது பட்டது. பதவிப் போட்டிக்காக கிட்டுவைத் தீர்த்துக் கட்ட மாத்தையாவே முயன்றிருக்கின்றார் என்று பிரபாகரன் முடிவெடுத்து விட்டார்.

யாழ்ப்பாணத்தில் இயக்கத்தின் முழுப் பொறுப்பும் மாத்தையாவின் கைக்கு வந்தபோதும் மாத்தையா பிற்காலத்தில் றோ உளவாளி என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகின்றமைக்கு கிட்டு மீதான கைக்குண்டு வீச்சுத்தான் அத்திவாரமாக அமைந்தது.

மாத்தையா நிலக் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு, பயங்கரமாக சித்திரவதைகள் செய்யப்பட்டு பிரபாகரனால் கொல்லப்பட்டார். பிரபாகரனை பேட்டி கண்ட இந்திய பெண் ஊடகவியலாளர் அனிதாப் பிரதாப். பிரபாகரனின் அனுமதியுடன் மாத்தையாவை வன்னிச் சிறையில் கண்டார். இவர் இரத்தத் தீவு என்கிற புத்தகத்தை எழுதினார்.

இதில் மாத்தையாவை பிரபாகரன் நாயை விட கேவலமாக நடத்தினார் என்று எழுதி உள்ளார். ஆனால் கிட்டு மீது கைக்குண்டு வீசியவர்களை புலிகளால் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டது என்பதுதான் உண்மை. இது பொட்டம்மானின் புலனாய்வுக்கு நேர்ந்து இருக்கக் கூடிய மிகப் பெரிய அவமானமும்தான்.

இக்குண்டு வீச்சு தொடர்பான சுமார் இரு தசாப்த கால மர்மம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்புதான் கடந்த வருடங்களில் வெளியாகி உள்ளது.

இக்குண்டு வீச்சை மேற்கொண்டார்களென தீப்பொறிக் குழுவினர் உரிமை கோரி உள்ளார்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்து பிரிந்தவர்கள் இவர்கள்.


புலிகள் இயக்கத்தில் ஆரம்பத்தில் இருந்து, பின்னர் பிரிந்து தமிழீழ மக்கள் கழகத்தில் இணைந்து, அதன் பின் தீப்பொறி என்கிற அமைப்பை நடத்துகின்றமையில் முக்கிய பங்கு வகித்த ரகுமான் யா(ஜா)ன் ஆசிரியரின் (மாஸ்ரரின்) ஒப்புதல் வாக்குமூலமாக இக்குண்டு வீச்சு குறித்த மர்மம் வெளியில் வந்து விட்டது.

உயிர்ப்பு என்கிற சஞ்சிகையின் ஆசிரியராகவும் செயல்பட்டவர் யா(ஜா)ன் ஆசிரியர் (மாஸ்ரர்). காந்தன் என்று இன்னொரு பெயர் இவருக்கு உள்ளது. மே 18 இயக்கம் என்கிற அமைப்பை தற்போது நடத்தி வருகின்றார். கனடா, ஐரோப்பா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்று அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்திய வேளையிலேயே இக்கைக்குண்டு வீச்சு குறித்த மர்மத்தை கலைத்து உள்ளார்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Thursday 25 October 2012

பொருளாதார நலன்களில் அடியுண்டு...........!






































பொருளாதார நலன்களில் அடியுண்டு போகுமா தமிழ்ஈழத் தமிழர்களது விடிவும், தாய்த்தமிழ் நாட்டின் எழுச்சியும்? தமிழ்ஈழத் தமிழர்களின் விடிவினை ஆவலோடு செயற்படும் அனைத்துத் தமிழ்மக்களினதும் ஏக்கம்!

சமீபத்தில் கிருசு(ஷ்)ணா கோதாவரி டெல்டா (KGD) பகுதியில் ரிலையன்சு(ஸ்) நிறுவனம் அபரிமிதமான எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்தது தங்களுக்குத் தெரியும். அது இந்தியாவின் எரிவாயு உற்பத்தியை பன்மடங்கு அதிகரித்துள்ளதும் அறிவீர்கள்.

வட இலங்கைக்கும் தென் தமிழகத்திற்கும் இடையில் உள்ள கடல் பகுதி ´காவேரி டெல்டா பேசின்´ எனப்படுகிறது. நமது ராமர்(!) பாலத்திற்கு மேலே உள்ளது காவேரி பேசின், கிழே உள்ளது மன்னார் பேசின். இங்கே படிமப் பாறைகளில் எண்ணை மற்றும் எரிவாயு வளம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அதற்கான வேலை 1970 களில் ரசிய எண்ணை நிறுவனம் மூலமாகத் தொடங்கியது. பின் 1980 களின் தொடக்கத்தில் துளையிடப்பட்ட ஆழ்கடல் எண்ணெய் கிணறுகள் தொடர்ந்து தோல்வியைத் தர, முயற்சி சற்றே தள்ளிப் போடப்பட்டது.

பின்னர் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதிநவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கடல் பரப்பில் ஆய்வுகள் செய்யப்பட்டன. எண்ணெய் வளம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இலங்கையின் கடல் பரப்பு வகுக்கப்பட்டு பல்வேறு எண்ணெய் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

அதில் முக்கியமான நிறுவனம் எடின்பர்கில் இருந்து இயங்கும் ´கெய்ன்சு(ஸ்) நிறுவனம். கெய்ன்சு நிறுவனம் இந்தியாவில் ´கெய்ன்சு இந்தியா´ என்கிற பெயரில் பல்வேறு இடங்களில் எண்ணெய் வளத்தைக் கண்டுபித்துள்ளது. 

அதே கெய்ன்சு நிறுவனம் இலங்கையில் ´கெய்ன்சு லங்கா´ என்ற பெயரில் நிறுவி இயங்கி வருகிறது. கெய்ன்சு லங்கா 2011 ஆம் ஆண்டில் இரண்டு ஆழ்கடல் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டியது. அதில் அதிக அளவில் எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இனி அடுத்தகட்ட ஆய்வுகளை 2012 -13 ஆண்டுகளில் மேற்கொள்ள ஆயர்தமாகி வருகிறது. இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட எண்ணெய் வளம் ஒரு பில்லியன் பீப்பாக்கள் எனக் கண்டக்கிடப்பட்டுள்ளது . இன்னும் கண்டுபிடிக்கப் படாத எண்ணெய் வளம் மிக அதிகம் என எதிர்பார்க்கப் படுகிறது.

எரிசக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிற காரணத்தினாலும், உலகின் எண்ணெய் தேவை வளைகுடா நாட்டை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது என சில சக்திகளால் எடுக்கப் பட்ட முயற்சியினாலும், தற்போதெல்லாம் எண்ணெய் வளம் எங்கிருந்தாலும் அதாவது கடலில் இருந்தாலும், எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அதைக் கண்டுபிடிப்பதற்கும், எடுப்பதற்கும் தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ளன. 

ஒருவேளை அதிக எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப் பட்டால் இலங்கை புருனே போலவும், ராசபக்சே புருனே சுல்தான் போலவும் ஆகிவிட வாய்ப்புண்டு! அதற்காக இந்தப் பதிவை எழுதவில்லை... இங்கே புதிய கோணத்தில் அணுக வேண்டிய சில விடயங்கள் உள்ளது.

1. இந்த எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தையும், ஈழப் போராட்டம் நடைபெற்ற காலத்து நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதில் இதன் பங்கும் ஓரளவேனும் இருக்கக் கூடும்.

2. முக்கியமாக, நமது தமிழக மீனவர்கள் 500 க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கொல்லப் பட்டுள்ளனர். எதனால் நட்பு நாட்டின் மீனவர்களைக் கொல்ல வேண்டும்?

சிறைபிடித்து துன்புறுத்தி அனுப்பினால் கூட ஏற்றுக்கொள்ளலாம்.. கொலை செய்தால்??

ஒருவேளை எண்ணெய் வளம் மிக்க பகுதிகளில் அத்துமீறி நுழைந்துவிடக் கூடாது, ஆய்வுப் பணிகளில் இடையூறு வரக் கூடாது என்பதற்காகவா? 

மீனவர்கள் செல்வதால் எப்படி ஆய்வு பாதிக்கும் என நீங்கள் கேட்பது புரிகிறது. கடல் ஆய்வு செய்யும் முறை அறிந்தவர்களுக்குப் புரியும். 

பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கப்பல்களுக்குப் பின்னால் பத்து கிலோமீட்டர் நீளத்திற்கு நுண்கருவிகளைக் (Sensors)கட்டி இழுத்துச் செல்வர். கடல் மீதிருந்து ஒலி அலைகளை அனுப்பி பூமியின் அடி ஆழத்தில் (5 -6 கிமீ ஆழம்) இருந்து பாறைகளில் பட்டு எதிரொலிக்கும் நுண்ணிய ஒலிகளைப் பதிவு செய்வர்.

அப்போது கடல் பரப்பில், அருகாமையில் ஏதேனும் சிறிய மோட்டார் படகுகள் வந்தாலும் அதன் ஒலி பதிவாகிவிடும். இது ஒரு காரணமாக இருக்கலாம்.

அல்லது இப்போதே தனது வளப் பகுதிகளை கடலில் வேலி போட்டு பாதுகாத்துக் கொள்கிறான் போலும். பிறகென்ன! தண்ணீர் கிணற்றிற்கே வேலி போட்டு காவலுக்கு ஆள் வைக்கிறபோது, எண்ணெய் கிணறுக்கு காவல் வைக்கமாட்டானா?

3. அடுத்தது, எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்த கெய்ன்சு நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை லண்டனில் இருந்து இயங்கும் வேடான்த்தா நிறுவனம் 8 .7 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. கிட்டத்தட்ட நாற்பதாயிரம் கோடி இந்திய ரூபாய்!

இது இலங்கையின் ஓராண்டு எண்ணெய் இறக்குமதி செலவை (3 பில்லியன் டாலர்) விட மூன்று மடங்கு அதிகம் எனலாம். இத்தகைய அசுர பணபலம் கொண்ட வேடாண்டா நிறுவனம் தான் தூத்துக்குடியில் சு(ஸ்)டெர்லைட் நிறுவனத்தையும் நடத்துகிறது.

அதை எதிர்த்துதான் எந்தவித சமரசமும் இன்றி வைகோ நீதிமன்றத்தில் போராடி வருகிறார். இதே நிறுவனம் தான் ஒரிசாவில் அலுமினிய ஆலை அமைத்தது, அதை எதிர்த்து டோங்க்ரி பழங்குடியினர் போராடி வருகின்றனர்.

4. ஒருவேளை அதிக எண்ணெய் எடுக்கப்பட்டால் இந்தியாவின் எண்ணெய் தேவைக்கு இலங்கை உதவ வேண்டி நிலை வரும். அதுகூட இன்றைய அரசு இலங்கைக்குப் பக்கவாத்தியம் வாசிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். 

மேலே உள்ள வரைபடத்தில் சீனாவுக்கும் சில உரிமங்கள் வளங்கப்படுள்ளதைக் காணலாம். சீனா இங்கு மட்டுமல்ல, பல்வேறு நாடுகளில் குறிப்பாக தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் எண்ணெய் வளங்களை சூரத்தனமாக குத்தகைக்கு எடுத்து வருகிறது. டைகர் எகனாமி சீனா என்றால் சும்மாவா?

## சரி இப்போது, எண்ணெய் வளம், இனப்படுகொலை, இலங்கையிடம் அளவுக்கு அதிகமாகவே அனுசரித்துப் போகும் இந்தியாவின் நிலை, சீனா ஊடுருவல் கதை, நடுக்கடலில் இந்திய மீனவர்கள் படுகொலை, வேதாந்தா நிறுவனம், வைகோ இருட்டடிப்பு , தமிழக தேர்தல் அரசியல், பொருளாதாரப் போட்டி, சர்வதேச அரசியல் என அனைத்தையும் தொடர்புபடுத்தி யோசித்துப் பாருங்கள்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

மூழ்கிப் போன உண்மைகள்.....!


மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். 

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.

இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.
இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள அவுசுத்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".

ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலைநாடு, ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !!

பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. 

தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். 

நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன், சிவன், முருகர், அகத்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது.இதில் அனைத்துமே அழிந்து விட்டது.

இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்" அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது.

இதில் "தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில் "கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்
"அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விசயம் !!!!.

இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம், இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம், நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்று தேடல் தொடரும்......!!
தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே!
இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே!

முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள்!

நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்த பட்சம் ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்!

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Wednesday 24 October 2012

விமானத்துக்கு யாழ்ப்பாணம் என்று பெயர்..!

மறைந்துபோன பல வரலாறுகளை நாம் திரும்பிப் பார்க்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். 2ம் உலகப் போர் நடைபெற்றவேளை, மலேசியாவில் வசித்த ஈழத் தமிழர்கள் பிரித்தானிய அரசுக்கு சாதகமாக செயற்பட விரும்பியுள்ளனர்.

இதனை அடுத்து அவர்கள் பணத்தை சேகரித்து, ஒரு போர் விமானத்தை வாங்கி அதனை பிரித்தானிய படைக்கு கொடுத்துள்ளார்கள்.




















ஆனால் அந்த விமானத்துக்கு யாழ்ப்பாணம் என்று பெயர்வைக்கவேண்டும் என்றும் அவர்கள் அன்றைய தினம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1915ம் ஆண்டுமார்கழி மாதம் 22ம் திகதி, இந்த விமானத்தை பிரித்தானிய படையிடம் கையளித்துள்ளனர் ஈழத் தமிழர்கள்.

சுமார் 97 ஆண்டுகளுக்கு முன்னர் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கான ஆவணங்களும், புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.  

பிரித்தானியர்களுக்கு தெரியாதா, மற்றும் அவர்கள் மறந்துபோன விடையங்கள் கூட தற்போது வெளியாகி தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.

சுமார் 97 வருடங்களுக்கு முன்னர், யேர்மன் நாட்டுடன் பிரித்தானியா போரில் ஈடுபட்டவேளை, ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவுக்கு உதவியுள்ளார்கள் என்பது ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது. 

இதேபோலவே இந்தியாவின் மாபெரும் புரட்சியாளரான சுபாசு சந்திரபோசு அவர்கள், இந்தியாவை விட்டு வெளியேறி மலேசியாவில், ஒரு இராணுவத்தைத் திரட்டினார்.

இதற்கு இந்திய தேசிய விடுதலை இராணுவம் என்று பெயர் சூட்டினார். இதில் வெளிநாட்டில் வசித்துவந்த பலர் இணைந்துகொண்டனர்.

ஆனால் இதிலும் மறைந்திருக்கும் உண்மை ஒன்று உள்ளது. இப் படையில் இந்தியர்கள் மட்டும் இணையவில்லை.

இதில் ஈழத் தமிழர்கள் பலரும் இணைந்து போரிட்டுள்ளனர்.

அதாவது இந்திய விடுதலைக்காக ஈழத் தமிழர்களும் போராடியுள்ளனர் என்பதுதான் உண்மை.

இச் செய்திகள் மலேசியாவில் இருந்து தற்போது ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Monday 22 October 2012

அதாவது தமிழர்களே என்றும்

கடந்த 26-9-2009 இல் மலேசிய நாளிகைகளில் வெளிவந்த செய்தி இது. 'நேச்சர்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த இந்தச் செய்தியைத் தமிழ் நாளேடுகளும் வெளியிட்டுள்ளன. இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி (பூர்வீக) குடிமக்கள் தென்னிந்தியர்களே அதாவது தமிழர்களே என்றும், இன்றைக்கு இந்தியாவை ஆதிக்கம் செய்யும் வட இந்திய இனம் பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் இந்தச் செய்தியில் கூறப் பட்டுள்ளது.

இப்படியொரு உண்மையை ஒரு தமிழன் கண்டறிந்து சொல்லியிருந்தால் இப்படி நாளிதழ் செய்தியாக வந்திருக்காது. காலங்காலமாக தமிழரை வல்லாதிக்கம் செய்துவருபவர்கள் இந்தச் செய்தியைக் கூட இந்நேரம் இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

எவனோ இருட்டடிப்புச் செய்வது இருக்கட்டும். வரலாற்று அறிவும் அறிவாராய்ச்சிப் பார்வையும் கெட்டுப் போய்விட்ட தமிழர்களே இந்த ஆராய்ச்சி உண்மையை நம்ப மறுத்திருப்பார்கள், மறுதலித்திருப்பார்கள். 

காலந்தோறும் காலத்தோறும் தமிழன் செய்து வந்திருக்கும் வரலாற்றுப் பிழையை இப்போதும் செய்திருப்பார்கள்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்த உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பவர்கள் தமிழர்கள் அல்லர். 

கைதராபாத்தில் உள்ள, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் ஆர்வர்டு பொது சுகாதார கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்டு தொழில்நுட்பக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்படியொரு ஆய்வினை மேற்கொண்டுள்ளன.

இந்த ஆய்வின் முடிவுகளை கைதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்சி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராசன் என்பவரும் அறிவித்துள்ளனர்.

இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வந்தேறுகுடிகளும் (வட இந்தியரும்) தமிழரும் (தென்இந்தியரும்) தான் என்பது தெளிவாகிறது.

ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வந்தேறுகுடிகள்  (வடவர்கள்) தற்போதைய மேற்கு ஆசிய மக்களுடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். 

அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.

ஆனால், தமிழர்கள் (தென்னவர்கள்) உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள்.

அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தமிழ் மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது என்பது மீதான ஆய்வில் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமான வையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday 20 October 2012

அன்பு முகம் நோர்வே கோர முகம் இஸ்ரேல்’!.


‘அமெரிக்காவின் அன்பு முகம் நோர்வே. அமெரிக்காவின் கோர முகம் இசுரேல்’ இது தமிழீழத் தேசியத் தலைவரின் கூற்று. இந்த வசனத்தின் தீர்க்க தரிசனத்தையும் யதார்த்தத்தையும் தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துகொண்டிருக்கின்றனர். தமிழீழத் தேசியத் தலைவர் எது செய்தாலும், எதைச் சொன்னாலும் அதன் பின்னால் மிகப் பெரும் அர்த்தம் இருக்கும்.

அந்த அர்த்தத்தை எல்லோராலும் இலகுவில் புரிந்துகொள்ள முடியாது. காலம் சென்ற பின்னரே சிலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். தலைவர் கூறியது போல அமெரிக்காவின் அன்பு முகத்தை நோர்வேயின் சிறீலங்காவிற்கான சமாதானத் தூதுவர் எரிக் சொல்கை(ஹெ)ய்ம் தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை அழிக்கவேண்டுமென்ற ஒரே நோக்கத்துடனேயே நோர்வே தமிழர் தாயகத்திற்கு வந்து அமைதி நாடகமாடியது என்ற உண்மையை தற்போது நோர்வே தூதுவரே அம்பலப்படுத்தியிருக்கிறார்.

அண்மையில் பி.பி.சி சர்வதேச ஊடகத்திற்கு ஒரு பேட்டி வழங்கிய எரிக் சொல்கை(ஹெ)ய்ம், போரின் இறுதியில் வன்னியில் இடம்பெற்ற மனிதப் பேரவலத்தைத் தடுப்பதற்கு சர்வதேசத்திடம் திட்டமொன்று இருந்ததாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அதற்குச் சம்மதிக்கவில்லையென்றும் தெரிவித் திருக்கிறார்.

இந்தப் பேட்டியை சொல்கைய்ம் வழங்கியதன் முக்கிய காரணம் கடந்த காலங்களை ஞாபகப்படுத்துவதற்காகவோ கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களை மக்களுக்குத் தெரியப்படுத்து வதற்காகவோ அல்ல. மாறாக தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்களை குழப்புவதற்காகவே இந்தப் பேட்டி திட்டமிட்டு தயார்படுத்தப்பட்டிருக்கிறது. 

யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்களாகின்றன. இந்தக் காலத்தில் சொல்ஹெய்ம் பல ஊடகங்களுக்கு பேட்டியளித்திருக்கிறார். ஆனால், மேற்படி காரணத்தை அவர் எங்கேயும் சொல்லியதில்லை.

தற்போது அவர் ஏன் கூறுகிறார் என்றால் போரின் அழிவுக்கு புலிகள் தான் காரணமென்று கூறவேண்டிய தேவை அமெரிக்காவிற்கு ஏற்பட்டிருக்கிறது. யாரை வைத்து இதனைச் சொன்னால் தமிழ் மக்களிடமும் சர்வதேசத்திடமும் இந்தக் கருத்து எடுபடும் என்றால் எரிக் சொல்கைய்ம் தான் அதற்குப் பொருத்தமானவர் என்று கருதிய அமெரிக்கா அவரைக் கொண்டு தற்போது புலிகளை மீண்டுமொரு தடவை குற்றஞ்சாட்டியிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்ற ஒரு விடுதலை அமைப்பை உலகில் எந்த நாட்டிலுமே எவரும் கண்டுகொள்ள முடியாது. விடுதலைப் புலிகளைப் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு போராட்ட அமைப்பு இனிமேல் உலகில் வேறெங்கும் தோற்றம் பெறமுடியாது.

விடுதலைப் புலிகளுக்கு நிகர் புலிகள் தான். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தனியே ஒரு ஆயுதம் தாங்கிய அமைப்பு அல்ல. ஆயுதம் தாங்கிய அமைப்பாக மட்டும் இருந்திருந்தால் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டவுடன் இந்த உலகிலிருந்தே புலிகள் துடைத்தெறியப்பட்டிருப்பார்கள்.

மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் சனநாயக வழியிலான செயற்பாடுகள் இன்றுவரை தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை, தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடனேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்றது என்பதற்கு தற்போதைய செயற்பாடுகளே சான்றாக இருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமென்று சில நாடுகள் தீர்மானமெடுத்தன என்றும் அவை அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே நடைபெற்றன என்றும் தமிழ் மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர்.

ஆக, அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே வன்னியில் தமிழ் மக்கள் அழித்தொழிகப்பட்டனர் என்ற உண்மையைத் தமிழ் மக்கள் படிப்படியாக உணரத் தொடங்கிய அதேநேரம் நோர்வேயின் சமாதான வேடம் இன அழிப்பு நாடகத்திற்கான ஒரு பாத்திரமேற்றல் என்பதும் தற்போது படிப்படியாக அம்பலமாகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு முயன்ற முதலாவது சக்தி அமெரிக்கா. ஆனால் தானே நேரடியாக அதனைச் செயற்படுத்தாமல் மறைமுகமாக நின்று நோர்வேயின் அனுசரணையுடன் அதனைச் செயற்படுத்த எண்ணியது. தமிழீழ விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரச படைகளுக்கு சம பலத்துடன் இருந்தபோது சிறீலங்கா படைகளால் அவர்களை ஆயுத ரீதியாக அழிக்க முடியாது என்பது அமெரிக்காவிற்கும் நோர்வேக்கும் நன்றாகவே தெரிந்தது.

அதற்காகவே சமாதானப் பேச்சுவார்த்தை என்ற நாடகம் நோர்வேயால் அரங்கேற்றப்பட்டது. இந்தச் சமாதான காலத்திற்குள் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு கட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத முகவராக இருந்த கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் என்ற அடிவருடி விலைக்கு வாங்கப்பட்டார். தமிழீழ தேசியத் தலைவருக்கு நல்லவர் போன்று நடித்த கே.பி, பணத்தைக் கண்டதும் குணம் மாறினார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அழிவிற்கு அவரும் ஒரு பங்காளியாக மாறினார். பி.பி.சி ஊடகத்திற்கு எரிக் சொல்கைய்ம் வழங்கிய பேட்டியில் விடுதலைப் புலிகள் இறுதிவரை போராட எடுத்த முடிவை வரலாற்றுத் தவறு என்று வர்ணித்திருக்கிறார். உண்மையான, நேர்மையான ஒரு இராசதந்திரியாக அவர் இருந்தால் யார் இழைத்தது வரலாற்றுத் தவறு என்று அவர் தனது மனச்சாட்சியைத் தொட்டுக் கேட்கவேண்டும்.

இக் கட்டுரையாளராகிய நானும் ஒரு தமிழ் மகன். மானமுள்ள தமிழ் மகன். அன்றிலிருந்து இன்றுவரை தாயகத்திலேயே வாழ்பவன். எரிக் சொல்கைய்ம் சமாதானத் துர்துவராக தாயகத்திற்கு வந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். சொல்கைய்ம் வருகின்ற ஒவ்வொரு தடவையும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த மகிழ்ச்சியைச் சொற்களாலோ வார்த்தைகளாலோ வடிக்க முடியாது.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களும் தமிழ்ச்செல்வன் அவர்களும் கைலாகு கொடுத்து சொல்கைய்மை வரவேற்கும் புகைப்படங்களை பார்த்த மக்கள் அடைந்த அளவற்ற சந்தோச அலைகள் இன்றும் என் மனக் கண் முன்னே வருகின்றன. எங்களைக் காக்க வந்த தேவ தூதுவர் என்றே சொல்கைய்மை தமிழ் மக்கள் நம்பி நின்றனர்.

ஆனால், இவ்வாறு நம்பி நின்ற மக்கள் இறுதியில் கொத்துக் குண்டுகளால் கொல்லப்பட்டபோதும், எரிகுண்டுகளால் உடல் கருகிய போதும், உணவின்றி பட்டினியால் இறந்த போதும் சிங்கள இராணுவத்தால் குரூரமாகப் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப் பட்ட போதும் சொல்கைய்ம் என்ற சமாதானத் தூதுவர் வாய் திறக்காமல் அந்த அழிவை பார்த்து இரசித்துக்கொண்டிருந்தார்.

எல்லாம் முடிந்த பின்னர் இப்போது அவர் புலிகளின் வரலாற்றுத் தவறைப் பற்றிக் கதையளக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு போராட்ட அமைப்பு. இதனைத் தலைமையேற்று நடத்தியவர் தான் தலைவர் பிரபாகரன். தமிழ் மக்களின் விடிவிற்காக தாங்கள் வரித்துக்கொண்ட இலட்சியத்திற்காக இறுதிவரை போராட புலிகள் எடுத்த முடிவு தவறு என்று சொல்கைய்ம் கூறுவாராயின் தான் செய்ததை சரி என்று நிரூபிக்கிறாரா?

தன்னை நம்பி நின்ற மக்களை ஏமாற்றி, மக்கள் இறுதியில் செத்து மடிந்த போது சமாதானத் தூதுவர் என்ற வேடத்துடன் அதனைப் பார்த்துக்கொண்டிருந்த சொல்கைய்ம் இழைத்தது வரலாற்றுத்தவறா? 

தமது மக்களின் விடுதலைக்காக இறுதிவரை போராடுவோம் என்ற இலட்சியத்துடன் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இளைத்தது வரலாற்றுத் தவறா?

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சர்வதேச பிரதிநிதிகள் முன்பாக புலிகள் அனைவரும் சரணடைய வேண்டும் பின்னர் அவர்கள் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் தவிர ஏனையோர் விடுவிக்கப்படுவார்கள் என்ற திட்டமொன்று சர்வதேசத்திடம் இருந்தது. அதை ஏற்றுக்கொள்ள புலிகள் மறுத்துவிட்டார்கள் என்று சொல்கைய்ம் புலிகளைக் குற்றஞ்சாட்டுவது நகைப்புக்கிடமானது.

இவ்வாறான ஒரு திட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் முன்வைக்கப்பட்டதோ என்னவோ எங்களுக்குத் தெரியாது. ஏனெனில் புலிகள் தரப்பில் இது தொடர்பில் கருத்துக்கூறக்கூடிய எவரும் தற்போது இல்லை. இறுதிக்கட்ட உண்மைகளைத் தலைவரின் வாயால் அறிவதற்கு நாம் இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

ஆகையால் எரிக்கின் கூறுவதன்படி நாம் நோக்கினால், புலிகள் ஒரு போராட்ட அமைப்பு. தாங்கள் வரித்துக்கொண்ட இலட்சியத்திற்காக அவர்கள் இறுதிவரை போராட எடுத்த முடிவு எப்படி வரலாற்றுத் தவறாக அமைய முடியும். தமிழ் மக்களின் விடுதலைக்காக ஒரு புலி வீரர் இருக்கும் வரை நாம் போராடுவோம் என்ற இலட்சியத்துடனேயே தலைவரும் போராளிகளும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

யுத்தத்தின் இறுதியில் அவர்கள் சரணடைய மறுத்தமை எப்படி வரலாற்றுத் தவறாக அமைய முடியும்? மாறாக எரிக் செய்ததே மாபெரும் வரலாற்றுத் தவறு. இந்த தூற்றாண்டில் மனித குலத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத மாபெரும் வரலாற்றுத் துரோகம்.

ஏனெனில், யாரையும் நம்பாத தமிழீழ தேசியத் தலைவர் நோர்வேயின் சமாதான அனுசரணையை ஏற்றுக்கொண்டார். புலிகள் போர்ப் பிரியர்கள். சிறீலங்காவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அவர்கள் விரும்புகிறார்களில்லை.

அவர்களே யுத்தத்ததை முன்னெடுத்து அழிவுகளுக்கு காரணமாக இருக்கிறார்கள் என்ற சிறீலங்கா அரசின் பொய்ப் பரப்புரையை முறியடித்து நாங்களும் சமாதானத்தை விரும்புகிறோம் என்பதை வெளிக்காட்டுவதற்காகவே தலைவர் நோர்வேயின் நடுநிலைமைக்கு இணங்கினார். நோர்வே அமெரிக்காவின் கைக்கூலியாக செயற்படுகின்றது என்பதை தலைவர் பிரபாகரன் அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்.

அதை அவர் வெளிப்படையாகவே கூறியுமிருக்கிறார். ஆனாலும் அவர் நோர்வேயின் நடுநிலைமையை வரவேற்றார். சமாதான காலத்தில் ஒரு தடவை வன்னிக்குச் சென்ற தமிழீழ உணர்வாளர் தொல்.திருமாவளவன் தமிழீழ தேசியத் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடும் போது நோர்வே தொடர்பில் என்ன நினைக்கிறீர்கள் என்று தலைவரிடம் கேட்டார். நறுக்கென்று பதிலளித்த தலைவர், அமெரிக்காவின் அன்பு முகம் நோர்வே. அமெரிக்காவின் கோர முகம் இசுரேல் என்று கூறியிருந்தார்.

அது எத்தகைய உண்மை என்பதை நாம் காலம் கடந்துதான் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.சிங்களப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர்களில் படுதோல்வியடைகின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் நவீன ஆயுதங்களை வாரிவழங்கி சிங்களப் படைக்கு பலம் சேர்ப்பது இசுரேல்.

குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னியிலிருந்து கொடிகாமம், சாவகச்சேரி ஊடாக அரியாலை, செம்மணி வரை முன்னேறியபோது அப்போதைய சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க இசுரேலுக்கு ஓடினார். அங்கு விசேட பேச்சுவார்த்தைகளை நடத்தியபின் பெருந்தொகையான நவீன பல்குழல் ஆயுதங்களை வாங்கிவந்தார்.

இந்த ஆயுதங்களால் தென்மராட்சியையே சிங்களப் படைகள் அன்று அழித்திருந்தன. தமிழ் மக்களை அழிப்பதற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும் இசுரேலூடாக கோர முகத்துடன் ஆயுதங்களை அள்ளி வழங்கிய அமெரிக்கா, சமாதானப் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் அன்பு முகத்தோடு வந்து தமிழர் போராட்டத்தை அழிப்பதற்கு நோர்வேயை அனுப்பியிருக்கிறது என்ற சாரப்படவே தேசியத் தலைவர் அன்று திருமாவளவனுக்கு அந்தப் பதிலைக் கூறினார்.

சுமாதானம் என்ற போர்வையில் தமிழீழத்துக்குள் நுழைந்த நோர்வேத் தூதுவர் இறுதி யுத்தத்தில் தனது பணியைச் செவ்வனே ஆற்றவில்லை. நம்பி நின்ற தமிழ் மக்களுக்கு எரிக்கும் நோர்வேயும் செய்தது மாபெரும் வரலாற்றுத் தவறு.

நோர்வேயை நம்பி சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் சென்ற பலமான ஒரு விடுதலை அமைப்பின் கட்டுமானங்கள் கண்முன்னாலேயே சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன் சிங்களப் படைகளால் துவம்சம் செய்யப்பட்டபோது நோர்வேத் தூதுவர் அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

நம்பி நின்ற மக்கள் கண்முன்னாலேயே அழிக்கப்பட்ட போதும் சிங்களப் படைகளால் கொன்று குவிக்கப்பட்ட போதும் அதனைத் தடுத்து நிறுத்த அனுசரணையாளர் என்ற போர்வையிலிருந்த நோர்வே நடவடிக்கை எடுக்கவில்லை.

இத்தனை வரலாற்றுத் தவறுகளையும் தங்களிடம் வைத்துக்கொண்டு புலிகளைக் குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமில்லையென்பதை நோர்வேயும் எரிக்  அவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

மற்றவர்களை நோக்கி உங்கள் கைகளை நீட்டுவதற்கு முன் உங்கள் கைகள் சுத்தமானவையா என்பதை முதலில் பார்க்க வேண்டும். இவ்விடயத்தில் தமிழ் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அவர்கள் வல்லரசுகள் வளமான நாடுகள் என்பதற்காக அவர்கள் சொல்கின்ற எல்லாவற்றையும் செவிமடுக்க வேண்டுமென்ற தேவை தமிழ் மக்களுக்கு இல்லை. தமிழ் மக்கள், குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.

சிங்கள இனவெறியர்களைக் கருவியாகக் கொண்டு தமிழ் மக்களைக் கொன்றழித்ததுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்துள்ள அமெரிக்காவும் இந்தியாவும் இன்று மனிதத்தை நேசிக்கும் ஐரோப்பிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டிலிருந்தும் சிறீலங்காவை மீட்டெடுப்பதற்கு துடியாய்த் துடிக்கின்றன.

அடுத்துவரும் வாரங்களில் ஐ.நா சபையின் மனித உரிமை மாநாட்டில் சிறீலங்கா மீது கொண்டுவரப்படவுள்ள குற்றச்சாட்டின் தன்மையை வலுவிழக்கச் செய்வதற்காகவே எரிக் இந்த நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

எனவே, எது நடந்ததோ அதுபற்றி அரட்டையடிப்பதற்கு தற்போது எங்களுக்கு நேரமில்லை. உலகில் நீதி நியாயத்தை நேசிக்கின்ற நாடுகள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக தற்போது தீவிரமாகப் பரிசீலிக்கிறார்கள்.

எனவே, இதுவரை விடுதலைப் பாதையில் உறுதியாக நின்ற நாங்கள் இனிமேல் சோரம் போகக்கூடாது. எவர் எதையும் சொல்லலாம்.

தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையும் செயலும் நேரிய பாதையிலேயே சென்றன. தற்போதும் நேரிய பாதையிலேயே செல்கின்றன.

எமது தலைவரின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை வென்றெடுப்போம். அதுவரை நாம் அனைவரும் சோர்ந்துவிடக்கூடாது.
நாம் வெல்வோம்.
எமது இலட்சியம் வெல்லும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.