Monday 2 September 2013

தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு............!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப் படமாகிறது - பிரபாகரன் படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்துசக்தியாக அமையும்! - பழ. நெடுமாறன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
சந்தனக்காடு தொலைக்காட்சி தொடரின் மூலம் அறியப்பட்டு மகிழ்ச்சி திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் வ.கௌதமன். இவர் இயக்கப் போகும் புதிய திரைப்படம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பற்றியதாம்.

இது தொடர்பாக இயக்குநர் வ.கௌதமன் கூறுகையில்,

தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் திரைப்படமாக இது இருக்கும்.  அவரின் சிறு வயது முதல் நடந்திக்கடல் யுத்தம் வரையில் அவர் நடத்திய யுத்தங்களை உள்ளடக்கிய திரைப்படமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.  இந்த திரைப்படத்துக்கான பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

பிரபாகரன் படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்துசக்தியாக அமையும்! - பழ. நெடுமாறன்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று படம், ஒவ்வொரு தமிழருக்கும் உந்து சக்தியாக அமையும் என பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த வீடியோ பேட்டி:

 

வரலாற்றில் மிகப்பழமையும் மிகப்பெருமையும் மிக்க புரட்சி யுகத்தை பூக்கச்செய்த பெருமை தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

வீரமே ஆரமாகவும், தியாகமே அணியாகவும் கொண்ட அவரது செயல் திறனின் விளைவாக இன்று உலகத் தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள்.

கிழக்கே சீனா முதல் மேற்கே உரோமாபுரி வரை அன்றைய நாளில் நமது தமிழர்கள் புகழ் கொடியை பறக்க விட்டார்கள்.

அந்த வீரம் மிக்க வழியிலே வந்த நம் மக்கள், நமது தமிழர்கள் அடிமை சேற்றில் புழுக்களாக நெளிந்து கொண்டிருந்த போது புலிகளாக மாற்றி உலகத்தையே பிரமிக்க வைத்த பெருமை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

எனது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பேர் என்னவென்றால் பிரபாகரன் அவர்களின் நட்பும் தோழமையும் எனக்கு கிடைத்ததை பெரும் பேராக கருதுகின்றேன்.

கடந்த முப்பது ஆணடுகளுக்கு மேலாக அவரோடு நெருங்கிப் பழகி அவரது இலட்சிய நோக்கத்தை புரிந்து கொண்டவன் என்கின்ற முறையில் அவர் தலைமை தாங்கி நடத்துகின்ற போராட்டம், தமிழர்களை விடுவிக்கின்ற போராட்டம் மட்டுமல்ல அது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் விடிவை கொண்டுவரப் போகின்ற போராட்டம் என்பதை நான் தெளிவாக உணர்ந்தவன் என்கின்ற முறையில் தெரிவித்த பல செய்திகள், அவர் கைப்பட எனக்கு எழுதிய கடிதங்கள், அவர் மட்டுமல்ல, அவர் பெற்றோரும் குடும்பத்தினரும் கூறிய செய்திகள், அவரின் முக்கிய இளமைப் பருவ தோழர்கள், பிற்காலத்தில் அவரது படையில் தளபதிகளாகி வீர சாகசங்கள் புரிந்தவர்கள், என அவர்கள் எனக்கு தெரிவித்த முக்கிய செய்திகளின் அடிப்படையில் அவரது வாழ்க்கை வரலாற்றை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்“ என்ற இந்நூலை மூன்று ஆண்டுகள் எழுதியிருக்கின்றேன்.

கடந்த இருபதாம் நூற்றாண்டு உலகெங்கும் பல்வேறு தேசிய இனங்கள் விடுதலைக்காக போராடிய நூற்றாண்டு ஆகும். இன்னமும் அத்தகைய விடுதலைப் போராட்டங்கள் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க விடுதலைப் போராட்டங்கள் உண்டு. இந்தியாவின் மகத்தான தலைவர்களில் ஒருவரான நேதாசி சுபாசு(ஸ்) சந்திர போசு(ஸ்) அவர்கள் சிங்கப்பூரிலே சுதந்திர இந்திய அரசை அமைத்து, இந்திய இராணுவத்தை அமைத்து, இந்திய விடுதலைக்காக போராடிய வரலாறு ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் வரலாறாகும்.

ஆனால் உலகமறிந்த மாபெரும் தலைவர் சுபாசு சந்திர போசு அவர்களுக்கு அன்று வல்லரசாக விளங்கிய யேர்மனி, யப்பான், இத்தாலி, போன்ற நாடுகள் ஆதரவளித்தன.

வியட்நாமின் விடுதலைப் போராட்டத்தை மதிப்புக்குரிய கோசிமின் நடத்திய போது அவருடைய அந்த போராட்டத்திற்கு செஞ்சீனமும் சோவியத் ஒன்றியமும் எல்லாவகையிலும் துணை நின்றன.

அதைப்போல பாலசுத்(ஸ்)தீன விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது யாசீர் அரபாத் அவர்கள் அதற்கு தலமை தாங்கினாலும், இருபத்தியேழு அரேபிய நாடுகள் அவருக்கு பக்கபலமாக நின்றன.

சோவியத் ஒன்றியம், இந்தியா, செஞ்சீனம் போன்ற நாடுகள் ஆசிய ஆபிரிக்க நாடுகள் எல்லாம் அவருக்கு அங்கீகாரம் அளித்தன. வங்க தேச விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது இந்தியா முழுமையாக உதவியது.

அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்திய இராணுவத்தை அனுப்பி வங்கதேச விடுதலையை உறுதி செய்தார்.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற போராட்டங்களிலேயே தனித்தன்மை வாய்ந்த போராட்டம் எதுவென்று சொன்னால் அது தமிழீழ விடுதலைப் போராட்டம்தான்.

பிரபாகரன் அவர்கள் தலைமையில் தமிழீழ போராட்டம் அன்று நடைபெற்ற போதும், இனி நடைபெறப் போகின்ற போதும் சரி அந்தப் போராட்டத்திற்கு உலகில் எந்த நாடோ, எந்த ஒரு அரசோ, ஒரு சிறு உதவி கூட செய்யவில்லை.

மாறாக இந்தியா போன்ற அண்டை நாடுகளே அதற்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்த சூழ்நிலையில் தமிழீழ தேசியத் தலைவர் பிரகாகரன் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களின் துணைகொண்டு அவருடைய நாட்டைச் சேர்ந்த இளைஞர்களையும் யுவதிகளையும் மட்டுமே நம்பி இந்த வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கின்றார்.

பிரபாகரன் அவர்களை நான் முன்பு குறிப்பிட்ட உலகறிந்த தலைவர்களோடு ஒப்படும் பொழுது வயதாலும் அனுபவத்தாலும் அவர் மிக மிக இளையவர் என்பதில் சந்தேகமில்லை. அந்த தலைவர்களுக்கு எல்லாம் உலக நாடுகள் பல சேர்ந்து துணை நின்றன. அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

ஆனால் நாடோ, எந்த அரசோ உதவாமல் தனி மனிதனாக பிரபாகரன் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டம் ஆங்கிலத்திலே சொல்வதானால் இது தனிப்பட்ட உள்ளது .. (It is Unique...) இந்த மகத்தான போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டிய கடமை எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீர காவியத்தை அடிப்படையாக கொண்டு நம்முடைய இயக்குனர் வ.கௌதமன் அவர்கள் திரைக் காவியமாக அதை படைக்கவிருப்பதை அறிய மகிழ்கின்றேன்.

நம்முடைய தம்பி கௌதமன் தியாக முத்திரை பதித்த ஒரு தமிழ் தேசியக் குடும்கத்தின் வழித்தோன்றல். அவர் இந்தப் படத்தை எடுப்பது எல்லாவகையிலும் சாலச் சிறந்தது என்று நான் கருதுகின்றேன்.

வள்ளுவ பேராசான் சொன்னது போல "இதனை இவன் இதனால் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்" என்று சொன்னார்.

உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பத்து கோடி தமிழர்களுக்கு நடுவே புரட்சி மலராக மலர்ந்து மணம் வீசி நமது தமிழின பெருமையை உலகறியச் செய்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றிய இந்த திரைக்காவியத்தை எடுப்பதற்கு எல்லா வகையிலும் தகுதி பெற்றவர்.

அதற்கான ஆற்றலும் அறிவும் அவரிடம் நிரம்பவே உண்டு. எல்லாவற்றிற்கு மேலாக ஒரு உண்மையான தமிழனாக திகழ்கின்றார். அவர் இப்படத்தை எடுப்பதை நான் மனதார பாராட்டுகின்றேன்.

மேலும் அவர் படைக்கவிருக்கும் இத்திரைக்காவியத்தை உலகத் தமிழர்கள் வரவேற்பார்கள் என நான் நிச்சயமாக நம்புகின்றேன்.

உலகிற்கு இந்த திரைக்காவியம் ஒரு உன்னதமான தமிழ் மகனின் வரலாற்றை எடுத்துச் செல்லும் காவியமாக இது திகழும். அதற்கு எல்லாவகையிலும் துணை நிற்பதற்கு ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும்.

மேலும் இத் திரைப்படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்து சக்தியாக அமையும் என்பதால் இதற்கு ஆதரவு தாருங்கள் என்று உங்களை மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.