Saturday 19 January 2013

எதனால் தமிழன் கெட்டான்............?


தமிழ் உறவுகளுக்காக !

தமிழன் பேசிப் பேசியே கெட்டான் !

பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான் !

தமிழ்.. தமிழ்.. என்று பேசியே தமிழன் கெட்டான் !

தமிழன்.. தமிழன்.. என்று பேசியே தமிழன் கெட்டான் !


இப்படியெல்லாம் பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஏன் நீங்களும்தான் கேட்டிருப்பீர்கள். இதில் உண்மை இருக்கிறதா? இந்தக் குற்றச்சாட்டு சரிதானா? இப்படிக் கேட்பவர்களை நோக்கி சில வினாக்களை வினவ விரும்புகிறேன்.

எதைப் பேசி தமிழன் கெட்டான்?

தமிழ் மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ச் சமயம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் வாழ்வியல் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மன்னர்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ப் புலவர்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் நூல்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்க் கலைகள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் வீரம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் அறிவு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் நாடு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் விடுதலை பற்றி பேசிக் கெட்டானா?

நான் சொல்கிறேன், இதில் எதையுமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேசாமல் ஊமையராய் செவிடர்களாய் இருந்ததால்தான் இன்றையத் தமிழன் கெட்டுச் சீரழிந்து இருக்கின்றான் இதுதான் உண்மை.

உலகத்தின் எல்லா இனத்தவனும் அவனவன் மொழி, இனம், கலை, பண்பாடு, இலக்கியம், அறிவுநூல், வரலாறு, நாகரிகம் என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து மேலே ஏற்றிக் கொண்டாடுகிறான்.

ஆனால், தமிழன் மட்டும்தான் தன் உரிமைப் பொருள்கள் எல்லாவற்றையும் காலடியில் போட்டு மிதிக்கிறான். தன் மொழியைவிட தன் இனத்தைவிட தன் பண்பாட்டைவிட வேற்றாருடையது சிறந்தது என்று புலம்பித் திரிகிறான்.

சொந்த இனத்தின் வேரையே வெட்டிவிட்டு இனவழி, மொழிவழி உறவைத் துண்டிக்கிறான். சொந்த அடையாளத்தை மறைத்து, மறந்து மாற்றான் போல வேடம்போட்டு வாழ்கிறான்.

அதனால்தான் சொல்கிறேன். “பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்” என்பது வடிகட்டிய பொய். “பழம் பெருமை பேசாமல் – புரியாமல் – அறியாமல் – தெரியாமல்தான் தமிழன் கெட்டான், கெடுகின்றான் எங்கு பார்த்தாலும் அடியும் உதையும் படுகின்றான்.

இவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு தப்பித்த தமிழனோ அன்னியவனின் அடிமையாய் அடிவருடியாய் வாழ்கின்றான். புதிய மாற்றமாக இனிக் கண்டிப்பாக

தமிழருடன் தமிழில் பேசுவோம் !

தமிழின் பெருமை பேசுவோம் !.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.