Thursday 1 November 2012

தமிழர்கள் நிச்சயம் கிளர்ந்தெழுவார்களா .....!


தமிழர் தாயகத்தில் நிலம் விழுங்கும் ''பேய்கள்''- மீண்டும் தமிழர்கள் நிச்சயம் கிளர்ந்தெழுவார்கள்! ''ஆடி அடங்கும் வாழ்க்கையடா. ஆறடி நிலமே சொந்தமடா..'' என்று பாடினான் கவிஞன். ஆனால், ஈழத்தில் தமிழர்கள் இறந்தால் அவர்களை அடக்கம் செய்வதற்கு ஆறடி நிலம்கூட இனிமேல் இருக்குமா என்பது சந்தேகமே.

அந்தளவுக்குத் தமிழர் தாயகத்தில் சுடுகாட்டைக்கூட விட்டுவைக்காது காணிகளை விழுங்கும் பேய்களாக உருவெடுத்துள்ளது மகிந்த அரசின் இராணுவம். இன்று யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் கழிந்த நிலையிலும் மகிந்த அரசின் பேரினவாத வெறி இன்னமும் அடங்கவில்லை.

மாறாக அது விசுவரூபம் எடுத்து வருகிறது என்பதையே இந்தக் காணி அபகரிப்பு நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. யுத்தத்தில் வென்றவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அதைத் தட்டிக்கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்ற கோதாவில் அரசு தமிழர்கள் மீது தொடர் அடக்குமுறைகளை அக்கிரமங்களைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.

சுடலையையும் சுருட்டும் இராணுவம் தமிழர் தாயகத்தின் இதயமான வட பகுதியில் காணிகளை விழுங்கும் பேய்களாக இராணுவத்தை ஏவி விட்டுள்ள மகிந்த அரசு, அதன் மூலம் தமிழர்களின் தாயகத்தை அடிமைகள் வாழும் பூமியாக மாற்றியமைக்கும் நோக்கில் இனவெறி பிடித்து அலைகிறது. 

யாழ்ப்பாணத்தில் சுடுகாட்டைக்கூட விட்டுவைக்காது அடாவடி செய்து வரும் இலங்கை இராணுவம், வடமராட்சி கரவெட்டியில் உள்ள சுடலைக் காணியை கூட தருமாறு அந்தப் பிரதேச சபைக்குக் கடிதம் அனுப்பி மிரட்டியுள்ளது. "நாங்கள் யுத்தத்தில் வென்றுவிட்டோம். தமிழீழம் என்றொரு நாட்டைக் கைப்பற்றி விட்டோம்.

எனவே, தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடிமையாகவே வாழ வேண்டும். சிங்களவர்கள் சொல்வதையே கேட்க வேண்டும்'' என்ற ஆணவப் போக்கில் அரசு இன்று எக்காளமிடுகிறது. தமிழர்களை அடிமைகளாக நடத்தவே அது விரும்புகிறது.

பதவிக்காகவும் சுகபோகம் அனுபவிப்பதற்காகவும் தனது இனத்தைக் காட்டிக்கொடுத்து அரசுடன் ஒட்டுண்ணிகள் போல் ஒட்டிக்கொண்டு நாய்களைவிடக் கேவலமாக நக்கிப் பிழைக்கும் சில தமிழினத் துரோகிகளைப் போல் ஒட்டுமொத்தத் தமிழர்களும் தனது காலடியை நக்கிப் பிழைக்க வேண்டும் என்ற இறுமாப்பில் செயற்படுகிறது மகிந்த அரசு.

தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காக எம் இனத்துக்குரிய நிலத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடிய எம் உறவுகளை சர்வதேச நாடுகளின் துணையோடு ஐ.நா. போர் விதிமுறைகளையும் மீறி ஈவிரக்கமின்றிக் கொன்றுகுவித்த மகிந்த அரசு, இன்று தமிழர்களின் இருப்பிடங்களையும் அபகரித்து அவர்களை நாட்டை விட்டு விரட்டியடிக்கும் மிருகத்தனமான செயலில் ஈடுபட்டுள்ளது.

அன்று வெடிகுண்டுகள் மூலம் தமிழ் மக்களின் எண்ணுக்கணக்கற்ற உயிர்களைக் குடித்து பிணங்களைக்கூட புணர்ந்து வெறியாட்டம் ஆடிய சிங்கள இராணுவத்தை ஏவி விட்டு இன்று தமிழ் மக்களின் காணிகளையும், வழிபாட்டுத் தலங்களையும் வகைதொகையின்றி ஆக்கிரமித்து வருகிறது அரசு. இந்தக் கொடுமையை தமிழ் மக்கள் யாரிடம் போய்ச் சொல்வர். வாய் திறக்க முடியாத நிலை "மரணத்தை விட மானம் பெரிது என வாழ்ந்தவன் வாழ்பவன் தமிழன். 

அவனுக்கே இன்று வந்தது சோதனை. சிங்கள அரசோ காணி அபகரிப்பில் நிகழ்த்துகிறது சாதனை. எம் தாயக மக்களோ அனுபவிக்கின்றனர் நரக வேதனை. இந்த அக்கிரமங்களுக்கு எதிராக வாய்திறக்க முடியாத நிலை இன்று தமிழருக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் தமிழர்களின் அசைக்க முடியாத மலையாகவிருந்த பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கம் அடியோடு வீழ்ந்தமையேயாகும். அன்று பிரபாகரனுக்கு பயந்திருந்தவர்கள் இன்று தமிழர்களைச் சீண்டிப் பார்க்கின்றனர்.

தம் இனத்தின் தாயகத்தை - தமக்குச் சொந்தமான நிலத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடிய விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் எனப் பொய் முத்திரை குத்திய சிங்களப் பேரினவாத அரசு, இன்று தமிழர்களின் காணியை அடாத்தாக ஆக்கிரமிப்பதை, அபகரிப்பதை நாம் என்னவென்று சொல்வது? இது அரச பயங்கரவாதம் இல்லையா?

இதைத் தட்டிக் கேட்டால் அவர்களை வெள்ளைவானில் கடத்தி போட்டுத் தள்ளி விடுகிறார்கள் ஆட்சியாளர்கள். இது கிட்லரின் ஆட்சியை விஞ்சும் கொடுமை என்றால் அது மிகையாகாது. 

கிட்லர் ஆட்சியை விஞ்சும் கொடுமை மூன்று தசாப்தமாகத் தொடர்ந்து வந்த யுத்தம் முடிவுக்கு வந்த கையோடு வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் இராணுவத் தேவைகளுக்காக, இராணுவக் குடியிருப்புகளுக்காக என சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் அங்கு தமிழரின் காணிகளை அபகரிக்கும் முயற்சியை சிங்களப் பேரினவாத அரசு உக்கிரமாக முடுக்கி விட்டுள்ளது.

ஏற்கனவே, எமது மக்கள் கொடிய போரினால் தமது உறவுகளை இழந்து நடைப்பிணங்களாக உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி அந்தரித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத அவல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் "பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த' கதையாக தமிழர் 

தாயகப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தமிழ்மக்களின் காணிகளைப் பறிக்கும் முயற்சியில் குதித்துள்ளனர். வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு அதிகரித்துள்ளது என்பதை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாகூட ஒத்துக்கொண்டுள்ளார். 

அதேவேளை, வடக்கில் படைமுகாம்கள் அமைக்கவென சில காணிகளை இனங்கண்டுள்ளோம் எனக் கூறி காணி அபகரிக்கப்படுவது உண்மை என்பதை யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி க(ஹ)த்துருசிங்கவே ஒப்புக்கொண்டுள்ளார். 

ஆளுநர் சந்திரசிறியின் அசுர வேகம் எமது ஈழ உறவுகளின் நிலங்களை கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் வட மாகாண ஆளுநர் சந்திரசிறி இன்று வெளிப்படையாகவே களமிறங்கியுள்ளார். வடக்கில் அனைத்துப் பிரதேச சபைகளுக்கும் தாம் இனங்கண்டுள்ள காணிகள் குறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறு விசேட அறிவுறுத்தல் விடுத்து ஆளுநர் கடிதங்களை அனுப்பியுள்ளார்.

அத்துடன், நில்லாமல் பிரதேச சபைத் தலைவர்களை அழைத்தும் கூட்டம் நடத்தி மிரட்டியுள்ளார் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். காணிகளை அபகரிக்கும் முயற்சிக்குப் பின்னால் சிங்களக் குடியேற்றங்களுக்கான திட்டமிடலையே மகிந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

போருக்கு பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக இராணுவமயமாக்கலை மேற்கொண்டு வந்த இலங்கை அரசு, அதனைத் தொடர்ந்து சிங்கள, பெளத்த மயமாக்கலையும் முடுக்கிவிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. எங்கும், எதிலும் பெளத்தமயம் வன்னியில் மகிந்த ராசபக்ச­ மாவத்தை, நாமல் ராசபக்­ச மாவத்தை என வீதிகளுக்கு பெயர் சூட்டப்படுகிறது.

இரவோடு இரவாக புத்தர் சிலைகள் முளைக்கின்றன. தூங்கி எழுவதற்குள் பெளத்தமயம் தென்படுகிறது. முல்லைத்தீவில் திருமுறிகண்டி என்ற இடத்தில் 4 ஆயிரம் ஏக்கர் பகுதியில் இராணுவக் குடியிருப்புகள் (போர்த் திட்ட வீடுகள்) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் விமானத்தளம் அமைப்பதற்கும் மன்னார் மாவட்ட முள்ளிக்குளம் என்ற பகுதியில் அங்குள்ள மக்கள் விரட்டியடிக்கப்பட்டு, அந்தப் பகுதியில் பாரிய கடற்படைத்தளம் அமைக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் 23 கிராமசேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படாமல், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.

இதேபோல் ஆயிரக்கணக்கான வீடுகள், நிலங்கள் இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு என சகல பகுதிகளிலும் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. 

யாழில் 61 ஏக்கர் நிலம் - தென்மராட்சியில் 300 ஏக்கர் இந்நிலையில் யாழ்ப்பாணம், நல்லூர், தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 61 ஏக்கர் காணியை இராணுவத் தேவைக்காக அபகரிக்கும் நடவடிக்கை வெளிப்படையாகவே முடுக்கி விடப்பட்டுள்ளது. அதேபோல், தென்மராட்சிப் பிரதேசத்திலும் ஏறத்தாள 300 ஏக்கர் நிலத்தையும் முள்ளிவாய்க்காலில் 60 ஏக்கர் நிலத்தையும் அபகரிப்பதற்கு இராணுவம் முயன்று வருகின்றது. 

இப்படியாக ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாகி இறுதியில் கடவுளின் மீதும் கைவைத்து விட்டது சிங்களப் பேரினவாதம். தமிழர்களின் இந்துக் கோவில்களில் புத்தர் சிலைகளை நிறுவி பெளத்தத்தை நிலைநாட்டும் கைங்கரியத்தில் அது ஈடுபட்டு வருகிறது. 

திருக்கேதீசுவரத்தில் இன்று பாரிய புத்தர் சிலை ஒன்றை சிங்கள இராணுவத்தினர் நிறுவியுள்ளனர். அதேபோல், கிளிநொச்சியில் பிள்ளையார் இருந்த இடத்தில் புதிதாக புத்தர் சிலை முளைத்துள்ளது.

பிள்ளையாரின் தலை உருண்டது. கடவுள் மீதும் கை வைத்தது அரசு ஆட்களைத்தான் காணாமல் போகச் செய்துவந்த மகிந்த அரசு இன்று பிள்ளையார் அப்பனையும் காணாமல் போகச் செய்கிறது.

அதுமட்டுமா, இந்துக் கோவில்களில் உள்ள விக்கிரகங்கள், வாகனங்கள் ஆகிவை திருடப்படும் சம்பவங்களின் பின்னணியிலும் சிங்கள பேரினவாதமே உள்ளது என்று கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் திருடப்படும் ஐம்பொன் சிலைகள், வாகனங்களின் தலைகள் என்பவை கூட தென்னிலங்கைக்கே கடத்தப்படுகின்றன.

இந்த உண்மை அண்மையில் யாழ்ப்பாணத்தில் கைதான கொள்ளைக் கும்பலின் தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.

ஆகவே, சிங்கள அரசின் ஒரே நோக்கம் தமிழர்களின் தனித்துவத்தை சிதைத்து அவர்களின் வழித்தடத்தை அழித்து, முழு இலங்கையையுமே சிங்களமயப்படுத்துவதே ஆகும். இதற்காக உலகில் எந்த நாட்டிலும் நடக்காத அக்கிரமங்களையும், அநியாயங்களையும் இன்று ஈழத்தமிழர்கள் மீது நடத்திக் கொண்டிருக்கிறது மகிந்த அரசு.

இலங்கையில் தமிழர்களின் தாயகம் என்பது இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் திட்டமிட்ட இராணுவ மயமாக்கலை மேற்கொண்டு பின்னர் சிங்களக் குடிப்பரம்பலை ஏற்படுத்த அது முன்முயற்சிகளை எடுத்து வருகிறது.

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடிப்பரம்பலை ஏற்படுத்தி தமிழர்களின் தனித்துவத்தை இல்லாமல் செய்யும் சதி நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் மற்றும் கலாசாரச் சீரழிவுகள் மலிந்து காணப்படுகின்றன. 

கொலை, கொள்ளை, ஆட்கடத்தல்கள், கற்பழிப்புகள்என அக்கிரமங்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறுகின்றன. இந்தப் படுபாதாள கலாசாரத்தைத் தமிழர் தாயகத்துக்குக்கொண்டு வந்தவர்கள் யார் என்பதை அனைவரும் அறிவர். தமிழர்களை சகல வழிகளிலும் சீரழிக்க வேண்டும் என்பதற்காக தென்னிலங்கைச் சக்திகள் செய்யும் கேவலமான செயல்கள்தான் இவை. 

யாழ்ப்பாணத்தில் இன்று போதைப்பொருள் விற்பனை, விபசார விடுதிகள், வலி குறைப்பு மையங்கள் (Massage Centers) என புதிது புதிதாக முளைக்கின்றன. இந்தக் கலாசாரச் சீரழிவுகளை திட்டமிட்டு அரங்கேற்றும் சிங்கள அரசு, இன்று தமிழர்களின் காணிகளையும் அபகரித்து தனது சிங்கள பெளத்தத்தின் ஆதிக்கத்தை தமிழர் தாயகத்தில் நிலை நிறுத்த முயற்சிக்கிறது.

அதாவது இனிவரும் காலங்களில் பெளத்தம் இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் இருந்தது என்றதொரு நிலையை உருவாக்கவே அது இந்தத் திட்டமிட்ட சிங்கள மயமாக்கலை மிக உக்கிரமாக முன்னெடுக்கிறது.

வடக்கு தமிழருக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று சனாதிபதி மகிந்தவின் சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய உட்பட் தென்னிலங்கை இனவாதிகள் தெரிவித்துள்ள கருத்துகளும் இதையே எடுத்துக்காட்டுகின்றன.

சர்வதேசத்தின் நடவடிக்கை போதாது ஆனால், மஹிந்த அரசின் இந்த தமிழின அழிப்பை- இராணுவ ஆக்கிரமிப்பை - தமிழர்களின் காணி அபகரிப்பை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேசம் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் செய்யவில்லை என்பதே கவலைக்குரிய விடயம். ஏதோ தம் பங்குக்கு அவ்வப்போது சில கருத்துகளை வலியுறுத்திவிட்டு -அறிக்கையை வெளியிட்டு விட்டு தங்கள் பணி முடிந்து விட்டது என்றவாறு அவை செயற்படுகின்றன.

அதாவது ஈழத் தமிழர் பிரச்சினையில் சர்வதேசத்தின் நடவடிக்கைகள் போதுமானதாக அமையவில்லை என்பதே நிதர்சனம். அப்படி சர்வதேசம் ஏதாவது நடவடிக்கையை எடுத்தால் கூட ஈழத் தமிழர்களின் விரோதியான இந்தியா அதைத் தடுத்து இலங்கை அரசைக் காப்பாற்றும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறது.

தொடர் இந்தியத் துரோகம் கடந்த யெ(ஜெ)னிவாக் கூட்டத்தொடரில் கூட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மூலம் தமிழர்களுக்குக் கிடைக்கவிருந்த நன்மைகளையும் இல்லாமல் செய்தது இந்தியா. அமெரிக்கா கொண்டுவந்த அந்தத் தீர்மானத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்து இலங்கையைக் காப்பாற்றி தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்தது இந்தியா.

எனவே, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டிய இத்தருணத்தில் தமிழர்களின் காணிகளை அபகரிப்பதிலும் புத்தர் சிலை அமைப்பதிலுமே குறியாகவிருக்கும் மகிந்த அரசு தமிழர்களுக்கு எப்படி நியாயமான தீர்வை வழங்க முன்வரும் என்பதை சர்வதேசம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர்கள் இன்று மகிந்த அரசால் நிர்வாணப்படுத்தப்பட்டுள்ளார்கள். எனவே, சர்வதேசம்தான் அவர்களுக்கு ஆடையைப்போர்த்திவிட வேண்டும்.

இதேவேளை, தமிழ்நாட்டு அரசியல் வாதிகளும் தனி ஈழம் என்ற வெற்றுக் கோ­சத்தை எழுப்பி தங்கள் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதிலேயே குறியாகவிருக்கின்றனர். தமிழர் பகுதிகளில் அசுர வேகத்தில் அரங்கேற்றப்படும் சிங்களக் குடியேற்றங்களையோ காணி அபகரிப்பையோ தடுத்த நிறுத்த வேண்டும் என அவர்கள் குரல்கொடுக்கவில்லை. 

இங்கே தமிழர்களின் இடங்கள் எல்லாம் பறிபோன பின்னர் தனி ஈழம் எங்கே அமைப்பது என்பதை அரசியல் ஞானம் படைத்த கலைஞர் உணர்ந்துகொள்ள வேண்டும். தூங்குகிறது தமிழ்க் கூட்டமைப்பு அதேபோல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் காணி அபகரிப்புக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எதையும் எடுக்காது தூங்கிக் கொண்டிருக்கின்றனர். 

அதிவேகமாக இடம்பெறும் சிங்கள மயமாக்கலை உடன் தடுத்து நிறுத்தாவிடின் அடுத்த ஒரு தசாப்தத்துக்குள்ளேயே தமிழர்களின் தாயகபூமி என்கிற இடம் காணாமல் போய்விடும். எனவே, சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐ.நாவிடம் முறையிடுவோம் என்று கூட்டமைப்பு சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. விரைந்து அதைச் செய்யவேண்டும்.

அசுர வேகத்தில் அரங்கேறும் காணி அபகரிப்பை உடன் தடுத்து நிறுத்த தமிழ்க் கூட்டமைப்பு தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் அவசரமாக முன்னெடுக்கவேண்டும். இவர்கள் நினைத்தால் வடக்குக் கிழக்கில் காணி அபகரிப்புக்கு எதிராக நாடாளுமன்றில் ஒரு பிரேரணையைக் கொண்டுவந்திருக்கலாம். அதைக்கூட இவர்கள் செய்வதற்குத் தயங்குவது ஏன்?

இதனால்தான் சிங்கள அரசு இன்று தமிழரைக் கேட்கப் பார்க்க ஆட்கள் இல்லை என்ற நினைப்பில் தொடர்ந்தும் அடக்கியாள முயன்று வருகிறது. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆரம்பமாவதற்கு இந்த காணிப்பகிர்வுச் சட்டம், தனிச் சிங்களமொழிச் சட்டம் போன்றவையே மூல காரணமாக அமைந்தன.

இதனால், தமிழர்கள் தங்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக காந்திய வழியைப் பின்பற்றி , வன்முறையற்ற போராட்டத்தில் குதித்தனர். ஆனால், சிங்களப் பேரினவாத அரசுகள் அதற்கு மதிப்பளிக்காது தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்கு முயற்சித்தன. 

தமிழர்களுக்கான தீர்வை வழங்க அவை மறுத்தன. இதனால், தமது உரிமைகளை வென்றெடுக்க தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

மீண்டும் கிளர்ந்தெழுவர் தமிழர் எனவே, தற்போது யுத்தம் முடிவுக்கு வந்தநிலையில் தமிழர்கள் தமது உரிமைகளை சனநாயக வழியில் பெற்றுக்கொள்ள முடியாதபோது வன்முறைகளில் ஈடுபட்டே அந்த உரிமைகளைப் பெறவேண்டும் என்ற ஒரு நிலைக்கு மீண்டும் தள்ளப்படுவார்கள், தள்ளப்படுகிறார்கள். "தமிழர்கள் இனியும் இல்லையென்ற அளவு பொறுமை காத்து வருகின்றனர்.

ஆனால், இந்தப் பேரினவாத அரசு அவர்களைச் சீண்டிவிட்டுப் போராட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றது'', என்று தெகிவளை மாநகரசபை உறுப்பினர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண மிகத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். எனவே, மகிந்த அரசின் இந்த காணி அபகரிப்பு, தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்கள் அழிப்பு, புத்தர் சிலை அமைப்பு போன்ற தமிழினத்துக்கு எதிரான அக்கிரமங்கள் தொடர்ந்து அரங்கேறினால் மீண்டும் தமிழர்கள் அடக்குமுறைக்கு எதிராக நிச்சயம் கிளர்ந்தெழுவார்கள். இது உறுதி.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.