நிர்வாண போராளிகளை இணையத்தள விளம்பரப் பொருட்களாக்கி விடாதீர்கள்
சமீபகாலமாக பல இணையத்தளங்கள் போர்குற்ற ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவற்றை வெளியிடுவது கொடூரமானது
சிங்களவன் செய்த கொடூரத்திலும் பார்க்க, இவர்கள் நடாத்தும் வியாபாரம் மிக… மிக… அதிகமாக உள்ளது… என்று கலங்குகின்றார்கள் தமிழ் உணர்வாளர்கள்.
புதிய போர்க் குற்றப் படங்கள் காட்டுகின்றோம்… எங்கள் இணைய தளத்திற்கு வாருங்கள்… என்று வலிந்திழுக்கும் வர்த்தக நோக்கத்துடன் தமிழ் இணையங்கள் சில வெளியிடும் சிங்களப் படைகளால் கோரமாகக் கொல்லப்பட்ட போராளிகளது படங்களும், அவலக் காட்சிகளும் தமிழ் நெஞ்சங்களைக் கோபமூட்டி வருகின்றன.
அதுவும், பெண் போராளிகளது நிர்வாணப்படுத்தப்பட்ட காட்சிப் பதிவுகளை ‘ப்ளாஷ்’ தொழில் நுட்ப உதவியுடன் தொடர் மின்னல் காட்சிகளாகப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது மிகக் கொடூரமான ஈனச் செயலாகவே நோக்கப்படுகின்றது.

இந்த இணையத் தளங்களால் மின்னும் காட்சிகளாக்கப்பட்ட அந்தப் பெண் போராளி ஒருவேளை அதன் பொறுப்பாளர்களது தங்கையாக இருந்திருந்தால், தாயாக இருந்திருந்தால் இப்படித்தான் காண்பித்து நிறைவடைந்திருப்பார்களா? என சமூக அக்கறையுள்ள மனிதர்கள் கொதித்துப் போயுள்ளார்கள்.
போர்க் குற்றத்திற்காக அடையாளப்படுத்த வேண்டிய காட்சிகளாக இருந்தால், குறைந்தபட்சம் அவர்களது முகங்களையாவது மறைத்திருக்க வேண்டும். நாகரீகமடைந்த ஊடகவியலாளாகள் கோரமான காட்சிகளை வண்ணமிழக்கப்பண்ணி, கறுப்பு வெள்ளையாகக் காட்சிப்படுத்துவதும் உண்டு. ஆனால், சில தமிழ் இணையங்கள் மனங்களில் எந்தவித சலனமும் இன்றி எங்கள் தேசத்தின் ஆன்மாக்களை நிர்வாணமாகவே காட்சிக்கு விடுவதில் போட்டி போடுவதைத்தான் அவதானிக்க முடிகின்றது.
தமிழ் இணையத் தளங்களை நடாத்துபவர்கள் தயவு செய்து மனம் கோணாமல் எங்கள் மக்களது மன வருத்தங்களைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் கிடைக்கக்கூடிய போர்க் குற்ற ஆதாரங்களை அதற்குரிய இடங்களில் சமர்ப்பியுங்கள். உங்கள் இணையத் தளங்களில் அந்தப் படங்களைப் பதிவு செய்யும்போது, அவற்றை, உங்கள் உடன் பிறந்தவாகளது படங்களாக எண்ணி, அதற்குரிய மரியாதையை வழங்குங்கள். கண்ணியத்துடன் செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மரணித்த எங்கள் பெண் போராளிகளை நிமிடத்திற்கு நிமிடம் நிர்வாணப்படுத்தாதீர்கள் !
அந்தப் படங்களைப் பதிவு செய்யும்போது, அவற்றை, உங்கள் உடன் பிறந்தவர்களது படங்களாக எண்ணி, அதற்குரிய மரியாதையை வழங்குங்கள். கண்ணியத்துடன் செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்
போராளிகளை உங்களுக்கான விளம்பரப் பொருட்களாக்கிவிடாதீர்கள்…
தமிழ்மக்களே தமிழீழத்தில் ஆயுதங்கள் மவுனிக்கப்படும்வரை களமாடி மாவீரர் ஆனவர்கள் தமிழ் மக்களின் நிரந்திர விடிவிற்காகவே அனைத்தையுமே இழந்தனர், அவர்களின் அந்த ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் உங்களுடைய காட்சிப்படுத்தப்படும் நிழற்படங்களை வெளியிடும்போது ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள்.
உங்களது குடும்ப உறுப்பினர்களின் காட்சியாக இருக்கும் பட்சத்தில் அதை நீங்கள் வெளியிடுவீர்களா?
தமிழ் இணையத் தளங்களை நடாத்துபவர்கள் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.