Saturday 6 October 2012

விழுங்கப்பட்ட மண்ணும் பறிக்கப்படும் மண்ணும்!

1950 ஆம் ஆண்டில் கல்லோயா குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்பு கந்தளாய் திட்டம் உருவாக்கப்பட்டுத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தத் திட்டங்களில் சில பிரிவுகள் இன விகிதாசார அடிப்படையில் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட்டன அதன் மூலம் தமிழ் தலைமைகளின் எதிர்ப்புகள் முறியடிக் கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் இனமோதல்கள் மூலம் அந்தப் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட அவை முற்றுமுழுதாகச் சிங்கள மயப்படுத்தப்பட்டன. 

இவை திட்டமிடப்பட்டு சட்டப்படி தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்பட்ட கதையாகும். ஆனால் இந்த நிலப்பறிப்புக்கு இன்னுமொரு வலுவான பக்கம் இருந்து வந்துள்ளமையை எமது முன்னைய தலைமைகள் கண்டு கொள்ளத் தவறின. ஆனால் இன்று எமது மண்ணின் பெரும் பகுதி பறிபோய் விட்டது. 

கஞ்சா தோட்டம் குடியிருப்பாகிய கதை

1953 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அனுராதபுரம் சிறையிலிருந்து தப்பியோடிய பயங்கரக் கொள்ளைக்காரனாகிய யக்கடேயா தனது தலைமறைவு வாழ்க்கைக்கு மூதூர் வெருசல் பிரதான வீதிக்கு மேற்காக அமைந்துள்ள தற்போது "அலிஒலுவ" என அழைக்கப்படும் அரிப்புச் சந்தியை அண்மித்த காட்டுப் பகுதியைத் தெரிந்தெடுத்தான். மகா வலி ஆற்றங்கரையை அண்டிய இவ் வளமான பிரதேசத்தில் யாழ்ப்பாணம் கம்பர்மலையைச் சேர்ந்த விவசாயிகள் வருடா வருடம் சென்று வெங்காயம், மிளகாய்க்குரிய பருவகாலங்களில் விவ சாயம் செய்து திரும்புவதுண்டு. தலை மறைவாக வாழ்ந்த "யக்கடேயா' அங்கு பெருமளவில் கஞ்சா பயிர் செய்கையை ஆரம்பித்தான்.

மெல்ல மெல்ல அவனது நண்பர்களும் உறவினர்களும் அங்கு காடுகளை வெட்டிக் குடியேறி கஞ்சாச் செய்கையுடன் விவசாய முயற்சிகளையும் மேற்கொண்டனர். இதனால் அந்தப் பகுதி ஒரு பெரும் கஞ்சா உற்பத்தி மையமாகவே விளங்கியது.அதையடுத்து அங்கு ஒரு பௌத்த விகாரை அமைக்கப்பட்டு அது ஒரு தொன்மை வாய்ந்த பௌத்த வழிபாட்டுத் தலமாக ஒரு காலத்தில் விளங்கியது எனவும் கூறப்பட்டது. அந்த விகாரையில் பிக்குவின் அனுசரணையுடன் பல சிங்களக் குடியிருப்புகள் "சேருவில" என்ற பேரில் உருவாகின.

சேருவிலவின் வரலாறு

இப்படியாக சேருவில, மஹிந்தபுர, சயயபுர, தெஹியோவத்தை, மாவிலாறு சிங்களப் பகுதி எனப் பல குடியேற்றங் கள் புற்றுநோய் போல் எங்கும் துரிதமாக உருவாகின. சட்டவிரோதமாக ஆரம்பிக்கப் பட்ட இந்தக் குடியேற்றங்கள் சிங்கள அரசியல்வாதிகளின் முயற்சி காரணமாக குடியேற்றத் திட்டங்களாக அங்கீகரிக் கப்பட்டுச் சகல அரச உதவிகளும் வழங்கப்பட்டன.

சேருவாவில என்ற புதிய அரச அதிபர் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. அது மட்டுமன்றி தமிழர்களுக்கும் முஸ்லிம் களுக்கும் என இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்த மூதூர் பிரிக்கப் பட்டு மூதூர், சேருவில என இரு தேர் தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இன்று திருமலை மாவட்டத்தில் சேரு வில ஒரு சிங்களத் தேர்தல் தொகுதியாக விளங்குகிறது.தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி அமைந்த போது வவுனியா தொகுதி யாருக்கு என்ற பிரச்சினையில் வவுனியா மாவட்டத்தை வவுனியா, முல்லைத்தீவு என இரண்டாகப் பிரித்து பங்கு போடுவதற்காக மூதூரை இரண்டா கப் பிரிக்க தமிழ்த் தலைமைகள் ஆதரவு கொடுத்த வெட்கம் கெட்ட செயலை யும் நாம் மறந்து விட முடியாது.எப்படியிருந்த போதிலும் திருகோண மலை மாவட்டத்தில் கல்லோயா, கந்த ளாய், சேருவில போன்ற பெரும் பகுதிகள் சிங்கள ஆதிக்கத்தால் விழுங்கப்பட்டுவிட்டன என்பது உண்மை யாகும்.

முஸ்லிம்களின் நிலம் பறிப்பு

இவ்வாறே மட்டக்களப்பு மாவட்டத்தில் சீனித் தொழிற்சாலையில் பணிபுரியவும் கரும்பு உற்பத்தியில் ஈடுபடவும் எனப் பெருமளவு சிங்களவர் குடியேற்றப்பட்டனர். முஸ்லிம்களின் ஏராளமான விளை நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்று அங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மையினராக்கப்பட அம்பாறை என்ற ஒரு சிங்கள மாவட்டமே உருவாகிவிட்டது.

"திருமாவெலிய" புனித பிரதேசத் திட்டம் போன்றவற்றால் மேலும் மேலும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.அதாவது மட்டக் களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியும் விழுங்கப் பட்டுவிட்டது. இது ஏற் கனவே எமது தாயகப் பகுதி விழுங்கப்பட்ட கதை மட்டுமன்றி எமது தாயகப் பகுதியின் நிலத் தொடர்ச்சி துண்டிக்கப்பட்ட கதையையும் சொல்லும் வரலாறாகும். போர் முடிந்த பின்பு இந்தக் கொடிய ஆக்கிரமிப்புக் கரங்கள் வடக்கு நோக்கி விரிய ஆரம்பித்துவிட்டன.

வடக்கு நோக்கிவிரியும் ஆக்கிரமிப்பு







ஏற்கனவே எமது மக்கள் நீண்டகால மாகவே வாழ்ந்து வந்த பகுதிகள் அப கரிக்கப்பட்டும், எமது நீர்ப்பாசனக் குளங்களின் நீரேந்தும் பகுதிகளாக இருக்கும் காடுகள் அழிக்கப்பட்டும் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கான குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது எமது சனத்தொகை விகிதாசாரத்தில் சிங்களவர்களின் தொகையை அதிகரித்து எமது இன தனித்துவத்தைச் சீரழிக்கும் நீண்ட நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாகும். எவ்வாறு கல்லோயா, கந்தளாய், சேருவில போன்ற குடியேற்றங்கள் மூலம் கிழக்கு மாகாணத்தின் தாயகத் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டதோ அவ் வாறு வெலிஓயா என்ற பெரும் திட்டத் தின் மூலம் வடக்குக்கும் கிழக்குக்குமான நிலத்தொடர்பைத் துண்டிக்க பெரிய முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. 

முல்லையில் ஆபத்து

தமிழ் மக்களின் இதயபூமியான மணலாற்றில் தனிக்கல்லு, கென்ற்பாம், டொலர்பாம், ஜனகபுர ஆகிய பகுதி களில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் 1984 இல் மகாவலி அபிவிருத்திச்சட்டம் மூலம் வெளியேற்றப்பட்டு அங்கு சகல வசதிகளுடனும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுவிட்டனர்.இந்தப் பகுதிகளுடன் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருநாட்டுக் கேணி, புலிபாஞ்ச கல், அளம்பில், குமுழ முனை ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு ஒரு புதிய உதவி அரச அதிபர் பிரிவு "வெலி ஓயா" என்ற பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அனுராதபுர மாவட்டத்தில் சில பகுதிகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகளும் இணைக்கப்பட்டு வெலிஓயா என்ற பிரதேச செயலர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இது முல்லை மாவட்டத்தை அபகரிக்கும் சதி முயற்சிக்கும் வடக்கு, கிழக்குக்குமிடையேயான நிலத் தொடர்பைத் துண்டிக்கும் முயற்சிக்கும் ஒரு சட்டபூர்வ வலிமை வழங்கப்பட்ட பிர கடனமாகும். இந்த ஆக் கிரமிப்பின் இரண்டாவது கட்டம் இப்போது கொக்கிளா யில் ஆரம் பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1960 இற்கு முன்பு குடியி ருந்தவர்கள் எனக் கூறப்பட்டு 37 சிங்களக் குடும்பங்கள் கொக்கிளாய் முகத்து வாரம் பகுதியில் குடியேற் றப்பட்டுவிட்டன. அதையடுத்து மேலும் 45 குடும்பங்கள் சகல வசதிகளுடனும் குடியேற்றப்படுவதற்காக முல்லைத் தீவு மாவட்டத்தில் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளன.

அதாவது இவர்கள் கொக்கிளாயைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் எனவும் அவர்கள் இடம்பெயர்ந்து தென்னி லங்கையில் வாழ்ந்தவர்கள் எனவும் கூறப் படுகிறது. போர் காரணமாக இடம்பெயர்ந்த வர்களுக்கு வெளிநாடுகள் வழங்கும் சகல உதவிகளும் முழுமையாக வழங்கப்பட்டுக் கொக்கிளாயில் குடியேற்றப்படுகின்றனர்.

1960 ஆம் ஆண்டை அடுத்த காலப் பகுதியில் நீர்கொழும்பைச் சேர்ந்த சம் மாட்டி ஒருவர் கொக்கிளாயில் கரை வலை மீன்பிடித் தொழிலுக்காக வந்திறங்கினார். அங்கு ஏற்கனவே கொக்கிளாயிலிருந்து முல்லைத்தீவுவரை முல்லைத்தீவு அளம்பில் பகுதிகளைச் சேர்ந்த சம் மாட்டிகளே கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

மீன்பிடியில் ஆரம்பம்...

இது பரந்த கடற் படுகையாதலால் முல்லைத்தீவு மீனவர்களும் அவர் களை எதிர்க்கவில்லை. சில வருடங் களில் மேலும் இரு சம்மாட்டிகள் அங்கு வந்து தொழில் தொடங்கவே அந்த மூன்றுபாடுகளும் அவர்கள் பருவகாலத் தொழில் செய்யும் இடங்களாகின. ஆனால் பருவகாலம் தொடங்கும் போது அவர்கள் படகுகள், வலைகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தேவைகளுடனும் வருவதும் பருவகாலம் முடிய அனைவரும் திரும்பிச் செல்வதும் வழமையாக இடம்பெற்றன.

காலப்போக்கில் கரைவலைத் தொழிலில் கூலித் தொழிலாளிகளாக வருபவர்கள் முகத்துவாரம் பகுதியில் குடிசைகள் அமைத்துக் குடியிருக்க ஆரம்பித்தனர். பருவகாலம் முடிந்த பின்பு இவர்கள் கொக்கிளாய் ஏரியில் மீன்பிடித்துத் தொழில் செய்தனர். சில வருடங்களில் இவர்களுக்கு மீனவர் குடியிருப்புகள் என்ற பேரில் வீடுகள் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டன. 

இவ்வாறு 1982ஆம் ஆண்டில் 21 குடும்பங்கள் இங்கு நிரந்தமாகக் குடி யிருந்தன. கொக்கிளாயில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கும் இவர்களுக்குமிடையே சுமுகமான உறவு நிலவி வந்தது. எனினும் இவர்களில் சிலர் சிறிபுரவில் உள்ள சிங்களக் காடையர்களுன் சேர்ந்து கொக்கிளாய்த் தமிழ் மக்களின் மாடுகளைக் கடத்தி இறைச்சிக்காகக் கொழும்புக்கு ஏற்றும் களவுத் தொழி லில் இறங்கிய பின்பு இரு சாராருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இப்படியான சந்தர்ப்பங்களில் கொக்கிளாய் இராணுவ முகாமைச் சேர்ந்த படையினர் தமிழ் இளைஞர்களை வேட்டையாட ஆரம்பித்தனர். இதனால் பல இளைஞர்கள் தலைமறைவாகக் காடுகளில் ஒளிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

தமிழர் வெளியேற்றம்

1984 ஆம் ஆண்டில் மகாவலி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், தென்னைமர வாடி, கருநாட்டுக்கேணி, புலிபாய்ஞ் சகல், முந்திரிகைக் குளம், மருதோடை, ஊஞ்சல்கட்டி, ஒதியமலை, மண் கிண்டி, பெருங்குளம், தனிக்கல் போன்ற தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த கிராமங்களை விட்டு 24 மணி நேர அவகாசத்தில் வெளி யேற்றப்பட்டனர். இந்த நாள்களிலேயே பெருங்கொடூரமான ஒதியமலைப் படுகொலைகள் இடம்பெற்றன.

இப்போது சில மாதங்களின் முன்பு தான் இந்தப் பகுதியின் தமிழ் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அக்கிராமங்களில் சில இருந்த சுவடே இல்லாமற் காணாமற் போய் விட்டன. பல சிங்களக் குடியேற்றங் களால் பெயர் மாற்றம் பெற்று வேறு உரு வம் எடுத்து விட்டன. மீளக்குடி மர்ந்த மக்களோ போதிய வசதிகள் இன்மை யால் மீண்டும் அந்தக் கிராமங்களை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளனர். தமிழ் மக்களின் இதயபூர்வ மான மண லாறு கூட "வெலிஓயா" ஆகிவிட்டது.இந்த நிலையில் தான் 1960 இற்கு முன் நிரந்தரமாகக் குடியிருந்தவர்கள் என்ற பேரில் சகல வசதிகளுடனும் கொக் கிளாய் முகத்துவாரம் பகுதியில் சிங்கள வர்கள் குடியேற்றப்படுகின்றனர்.

ஆக்கிரமிப்பு விரியும்

கொக்கிளாயின் ஏனைய பகுதிகள் கருநாட்டுக் கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய பகுதிகளுக்கும் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை விரிவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஒரு பெரும் ஆபத்து கொக்கிளாய் குடியேற்ற உருவத்தில் பல்முக நோக்குடன் எம்மை நோக்கி வருகிறது.

இங்குதான் நாங்களும் எங்கள் தமிழ் தலைமைகளும் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. ஒரு நாடாளு மன்றப் பதவிக்காகவும் எமக்குள் எழுந்த சிக்கலை எமக்குள்ளே தீர்க்க வழியற்று வேறு வழிகளை நாடியதன் மூலமும் எமது முன்னைய தலைமைகள் சேருவில என்ற தொகுதி உருவாகவும் திருமலை மாவட்டத்தின் நிலத் தொடர்பை அறுக்கவும் வழி வெட்டிக் கொடுத்தோம்? இப்போ வடக்கையும் கிழக்கையும் நிலத் தொடர்பால் துண்டிக்கவும் வடக்கை விழுங்கவும் கொக்கிளாயில் தொடங்கும் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் என்ன செய்யப் போகிறோம்? 

தமிழ்த் தரப்பு விரைந்து பயனுள்ள நடவடிக்கை எடுக்கத் தவறினால் காலத்தைத் தவறவிட்டுக் கடமையைச் செய்ய மறுத்த குற்றம் இவர்களைச் சாரும். அதுமட்டுமன்றி இவர்களை ஒதுக்கி விட்டு மக்கள் நேரடியாக நடவடிக்கைகளில் இறங்கும் நிலையும் ஏற்படலாம்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.