Friday 1 June 2012

50 முதல் ஒரு லட்சம் ஆண்டுகள்


பண்டை தமிழர் நாகரீகம் .... தமிழ்நாட்டில் இத்தனை வருடங்களில் கிடைத்திருக்கும் கல்வெட்டு ஆதாரங்களில் மிகப் பழைமையான கல்வெட்டுக் குறிப்புகளை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார் கவிஞர் பழனிவேள். 

திருவண்ணாமலைப் பக்கமுள்ள தொண்டமனூர் கிராமத்தில் கிடைத்திருக்கும் இந்த ‘குறியீட்டு எழுத்துக்கள்' ஏறக்குறைய 35 ஆயிரம் ஆண்டுகள் முதுமை கொண்டவை எனக் கணித்திருக்கிறார்கள்.

இதில் சிறப்பு என்னவென்றால் இந்தப் பாறை எழுத்துக்கள் ஆற்றுவழி நாகரிகத்தை ஒட்டி கண்டெடுக்கப்பட்டிருப்பதுதான். இந்தப் பண்பாட்டுப் பெருமை குறித்து பழனிவேளிடம் பேசினோம்.

"ஏழாண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதிகளில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறேன்.

இதற்கு முன்னாலான தேடுதலில் பலவிதமான தாழிகள் கிடைத்திருக்கின்றன. அந்தத் தாழிகள் குறித்த தேடுதலில் இருக்கும் சமயத்தில்தான் இந்தப் பாறை எழுத்துக்கள் தற்செயலாக கானி ஆத்தா கோயில் பக்கம் என் கண்களில் அகப்பட்டன.

இந்த மாதிரியான குறியீட்டு எழுத்துக்கள் இதற்கு முன்னால் மேற்குத் தொடர்ச்சி மலைகளையொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதற்கு இணையான எழுத்து வடிவம் இலங்கை ஆணைக்கோட்டையில் கிடைத்திருப்பதாக அறிந்தேன்.

இந்த எழுத்துக்களின் ஆராய்ச்சி இதற்கு சுமார் 50 முதல் ஒரு லட்சம் ஆண்டுகள் வயதிருக்கலாம் என கணிக்கிறது" என்று புதிய தகவல்களைத் தந்த பழனிவேள் மேலும் தொடர்ந்து பேசினார்.

தென்பெண்ணை ஆற்றின் நாகரிகம் எவ்வளவு பழைமையானது என்பதை இந்தக் கல் ‘குறி’ எழுத்துகள் மூலம் தெரிந்துகொண்ட பழனிவேளின் இந்தக் கண்டுபிடிப்பு பற்றி ஊடகங்களில் செய்திகள் வந்த பின்பும் கூட அரசு சார்பில் எந்தவித பாதுகாப்பு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லையாம்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.