Friday 28 September 2012

"அவர்கள் நம் மக்கள்"! என்றார்................!

மண்ணுக்காகவும் மக்களுக்காவும் உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான் என 91 அகவை நிரம்பிய இந்தியாவின் பிரபல மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் ஆனந்த விகடனிடம் தெரிவித்துள்ளார். 












மகாத்மா காந்தி, முகமது அலி சி(ஜி)ன்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங் இப்படி கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து தலைவர்களையும் செவ்வி கண்டிருக்கும் இவர் இப்பொழுதும் 14 மொழிகளில் கிட்டத்தட்ட 80 பத்திரிகைகளில் இடைவிடாமல் கட்டுரைகள் எழுதுகிறார் என ஆனந்த விகடன் குறிப்பிடுகிறது.

இவரிடம் ''2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, இந்திய அரசும் வட இந்திய ஊடகங்களும் மௌனித்தது சரிதானா?'' என விகடன் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்”இலங்கைப் போர் இந்த நூற்றாண்டின் மாபெரும் சோகம் என்று இங்கிலாந்து சேனல்கள் சொல்கின்றன.

ஆனால், பக்கத்து நாடான இந்திய மீடியாக்கள் மௌனித்தது ஏன்?’ என 'சேனல் 4’ என்னிடம் கேட்ட‌ கேள்விக்கு, இன்றுவரை என்னால் சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

'நம்முடைய மௌனமும் மறுதலிப்பும்தான் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை, கர்ப்பிணிப் பெண்களை, பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றிருக்கிறது’ என்ற குற்ற உணர்வு மனசாட்சிகொண்ட ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியனையும் ஆட்சியாளனையும் காலம் முழுக்க உறுத்திக்கொண்டே இருக்கும்.

போரின்போது தமிழர்களிடையே எழுந்த எழுச்சியை இந்தியா முழுக்கப் பரப்ப தமிழக அரசியல்வாதிகள் தவறிவிட்டதாகவே நினைக்கிறேன். 

பாகிசு(ஸ்)தான், சீனா, ரசி(ஷ்)யா போன்ற பல நாடுகளின் உதவியோடு ஒட்டுமொத்தத் தமிழினத்தையே கூண்டோடு அழித்தொழித்தது ராசபக்ச அரசு.

இதைத் தட்டிக்கேட்க வேண்டிய இந்தியா, 'இலங்கை எங்கள் நட்பு நாடு’ என மார்தட்டித் திரிந்தது ஒரு வரலாற்றுப் பிழை.

இது போதாது என இப்போது இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியும் அளித்துவருகிறது. சீனாவையும் பாகிசு(ஸ்)தானையும் சமப்படுத்த செய்ய இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும் இந்தியாவின் நிலைப்பாடு, மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும். 

இலங்கையின் குடிமக்களாகிய தமிழர்களுக்கு அந்த நாட்டில் சுய மரியாதையுடன் வாழும் உரிமையும் சுதந்திரமும் மறுக்கப்படுகிறது.

அதைத் தமிழர்கள் கேட்கும்போது காலங்காலமாக காட்டுமிராண்டித் தனமான வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

அதனால்தான் விடுதலைப் புலி கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். 

மண்ணுக்காகவும் மக்களுக்காவும் உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான். (குரல் கம்முகிறது) ஏனென்றால், அவர்கள் நம் மக்கள்!'' என்றார்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.