Sunday 30 September 2012

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் மற்றும் புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சென்று இராணுவத்திடம் சரணடைந்த நிலையில், அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற செய்தியை அனைவரும் அறிவோம். 

இருப்பினும் இராணுவம் இதனை முற்றாக மறுத்து வருகிறது. இவர்கள் வெள்ளைக்கொடியுடன் இராணுவத்திடம் சென்று சரணடைய முற்பட்டவேளை, இந்திய அமைச்சர் ப.சிதம்பரம், எரிக் சொல்கைம், ஊடகவியலாளர் மரியா கொல்வின், மற்றும் விஜய் நம்பியார் ஆகியோருடன் தொடர்புகளை மேற்கொண்டனர்.

இந் நபர்களில் முக்கியமானவர் என்று கருதப்படும் நோர்வே அமைச்சர் எரிக் சொல்கைம் அவர்கள் வரும் அக்டோபர் மாதம் 5ம் திகதி லண்டனில் தமிழர்களைச் சந்திக்கவுள்ளார்.

உலகம் நாம் கொல்லப்படுவதை பார்த்துக்கொண்டு இருந்தது என்ற தொணியில் BBC முன்நாள் ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹாரிசன் எழுதிய நூலும் இந் நாளில் வெளியிடப்படவும் உள்ளது.

ஐ.நாவின் அதிகாரியான ஜஸ்மின் சூக்காவும் கலந்து கொள்ளவுள்ளார். இதில் முக்கியமான விடையங்கள் சிலவும் உள்ளது. 2009ம் ஆண்டு போர் நடந்தவேளை, தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்று புலம்பெயர் தமிழர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.

குளிரிலும் மழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் இப்போரில் விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால், இவ்வளவு இழப்பும் வந்திராது என்று சற்றும் நா கூசாமல் எரிக் சொல்கைம் சொல்லிவந்துள்ளார்.

அப்படி என்றால் எதற்காக இவர் சமாதானத்தில் ஈடுபட்டார் ?

புலிகளைச் சரணடையச் சொல்வதற்காகவா ?

என்ற கேள்விகளும் எழுகின்றன. இவர் சொல்வது போல சரணடைந்த புலிகளின் அரசியல் தலைவர்களுக்கு என்ன நிகழ்ந்தது ?

இலங்கை இராணுவம் அவர்களை உயிருடன் விட்டதா ? இல்லையே ! 

அப்படி என்றால் இவர் இக் கருத்தை ஏன் சர்வதேச மட்டத்தில் தெரிவிக்கவேண்டும். தற்போது வெள்ளைக்கொடி விவகாரத்தில் என்ன நடந்தது என்பதனை தாம் சொல்லவுள்ளதாக இவர் கூறுவதன் பிண்னணியில் என்ன உள்ளது ?

இது தொடர்பாக தமிழர்கள் இவரை கேள்வி கேட்க தயாரா ?

தமிழர்கள் தமது கருத்தை எடுத்துரைக்க இந் நிகழ்வு ஒரு களம் அமைத்து கொடுக்கிறது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.